Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Meenam


சுற்றியிருக்கும் அழுக்குகளை தின்று சுத்தம் செய்யும் மீனைப்போல மற்றவர்களின் துன்பங்களை, துயரங்களை ஏற்றுக் கொள்ளும் சுமைதாங்கிகளே! போலியாக வாழாமல், ஆடம்பரத்திற்கும் ஆசைப்படாமல் இருப்பதை வைத்து சந்தோஷப்படும் நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வீர்கள்.
உங்களின் லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். 

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மனைவி வழியில் இருந்த மனப்போர் நீங்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். 

ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். 
திட்டமிடாத வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகளும் திடீர் பணவரவும் உண்டு. ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். 


மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். எதிரும் புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நவீனரக வாகனம் வாங்குவீர்கள்.

 
இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று தவறாக முடிக்க வேண்டி வரும். மனதைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டிவரும். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்தமனத்தாங்கல் நீங்கும். வசதி, செல்வாக்குடன் உள்ள தவறானவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.  

    
செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை 6ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிரபலங்களால் சில வேலைகள் முடிவுக்கு வரும். வீடு, மனை வாங்குவீர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் காசு புரட்டி புது வீடு கட்டி குடி புகுவீர்கள்.    

 
வருடம் பிறக்கும்போது 3ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. அண்ணன் பக்கபலமாக இருப்பார். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். பிதுர் வழிச் சொத்தை அடைவதிலிருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். 
9ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். சித்தர்கள், ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 1.12.2012 முதல் உங்கள் ராசியில் 2ல் கேதுவும், 8ல் ராகுவும் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். 

வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களால் வீண் அலைச்சல், மன உளைச்சல் வரக்கூடும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.
சனிபகவான் ராசிக்கு 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் முன்கோபம், பதட்டம், சிறு சிறு ஏமாற்றம், விரக்தி, வீண்பழி வந்து செல்லும். மனதில் இனம்புரியாத பயம் வந்துபோகும். குடும்பத்தில் அமைதியில்லையே என புலம்புவீர்கள். 

பண விஷயத்தில் கறாராக இருங்கள். நெருங்கியவர்களாக இருந்தாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். திடீர் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். முன்யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் மனைவியுடன் வாக்குவாதம், வீண் சந்தேகம், விரக்தி, சோர்வு, களைப்பு வந்து நீங்கும். 


கன்னிப் பெண்களே! புதிதாக அறிமுகமாகுபவர்களை நம்ப வேண்டாம். முக்கிய முடிவுகளை பெற்றோரை கலந்தாலோசித்து எடுப்பது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். தூக்கமின்மை, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் வருட முற்பகுதியில் சிறப்பாக முடியும். மாணவர்களே! காலநேரத்தை வீணடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். 


வியாபாரிகளே! பெரிய முதலீடுகளில் இறங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள். மே, ஜூன் மாதங்களில் கணிசமாக லாபம் உயரும். வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உணவு, இரும்பு, கட்டிட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.  


உத்யோகஸ்தர்களே! என்னதான் இரவு பகலாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். விருப்பமில்லாத இடமாற்றம் உண்டு. ஜனவரி, பிப்ரவரி, மே, அக்டோபர், டிசம்பர் மாதங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். சக ஊழியர்கள் குறை கூறும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள். கணினி துறையினருக்கு வெளி மாநிலம், வெளி நாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.  
அரசியல்வாதிகளே! தலைமையைப்பற்றி சகாக்களிடம் குறைகூற வேண்டாம். 

முக்கிய பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. கலைத்துறையினரே! உங்களது படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சம்பளம் உயரும். ஆனால், கையில் காசு தங்காது.விவசாயிகளே! கூட்டுறவு வங்கியில் கடனுதவி கிடைக்கும். விளைச்சலை அதிகப்படுத்த தரமற்ற உரங்களை பயன்படுத்தி விடாதீர்கள். வீட்டில் நல்லது நடக்கும்.இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் திடீர் யோகத்தையும், பணவரவையும் தந்தாலும் மையப் பகுதியிலிருந்து வீண் அலைச்சலையும் செலவுகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகேயுள்ள எலவனாசூர் கோட்டை தலத்தில் அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரரை திங்கட் கிழமையில் வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Kumbam


மஞ்சளும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சில் நினைப்பதே போதும் என்றெண்ணும் நீங்கள், ஆர்ப்பாட்டம் அலங்காரம் இல்லாமல் அமைதியாக எதையும் சாதிப்பீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு வாரி வழங்கும் நீங்கள் கொடுத்துச் சிவந்த கைகளையுடையவர்கள்.உங்கள் ராசிநாதன் சனிபகவான் 9ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். 

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். மகளின் கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். உங்களை தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 

புது வேலை அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். ஆனால் தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பது நல்லது. சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் இக்கால கட்டத்தில் வீண் விரயம், செலவு, ஏமாற்றம், பொருள் இழப்பு, மறைமுக அவமானம், தாழ்வு மனப்பான்மை வந்துசெல்லும். 

16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். லேசான தலைச் சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்து செல்லும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகனுக்கு பல இடத்தில் வரன் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் இல்லையே என வருந்தினீர்களே! இனி நல்ல மணப்பெண் அமைவார். 

மகனின் கூடா நட்பு விலகும்.  பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை போராடி பைசல் செய்வீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் மன உளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டுவலி, சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். 

தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் வரும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். கடன் தொல்லைகளை நினைத்து வருந்துவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். வாகனத்தில் செல்லும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். 

வருடத் தொடக்கத்திலிருந்து 22.6.2012 வரை 7ல் நிற்கும் செவ்வாயின் நேரடிப் பார்வை உங்கள் மீது விழுவதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை வலி வந்து நீங்கும். கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் உஷ்ணம் அதிகமாகும். உணவில் கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களின் துரோகங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். யாருக்கும் காரெண்டர் கையெழுத்திட வேண்டாம். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பிரபலங்களால் உதவி கிட்டும். 

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்களை தாமதமாகப் புரிந்து கொள்வார்கள்.  வருடம் பிறக்கும் போது 4ம் வீட்டில் கேது நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வீடு கட்ட முடிவெடுத்துவிட்டால் தேவைப்படும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். 10ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். 

வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழியும் வரக்கூடும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 3ல் கேதுவும் 9ல் ராகுவும் நுழைவதால் எதிலும் ஆர்வம் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த வீண் சந்தேகங்கள் நீங்கும். ஆனால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். 


கன்னிப் பெண்களே! காதலில் ஏமாற வேண்டாம். கல்யாணம் தள்ளிப்போய் முடியும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வேனல் கட்டி, முகப்பரு, தூக்கமின்மை வந்து நீங்கும். மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 


வியாபாரிகளே! பெரிய அளவில் முதலீடுகளை போட்டு சிக்கிக் கொள்ளாமல், இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். ஏப்ரல், மே மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். முடிந்த அளவுக்கு அதிக கடன் யாருக்கும்  தராமல் இருப்பது நல்லது. தேங்கிக் கிடந்த சரக்குகளை அதிரடி சலுகையால் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். 

ஜூன் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஹோட்டல், கெமிக்கல், இரும்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதுத் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவற விடாதீர்கள். உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். என்றாலும் மனந்தளர மாட்டீர்கள். 

மேலதிகாரி உங்களை தவறாக புரிந்து கொள்வார். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நன்கு படிப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மே, ஜூன் மாதங்களில் வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் புது வாய்ப்புகள் வரும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பளம், சலுகைகள் கூடும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கணினி துறையினருக்கு வேறு வாய்ப்புகள் வந்தாலும் கூட மாறாமல் இருப்பதே சிறந்தது.


அரசியல்வாதிகளே! இனி பரபரப்புடன் செயல்படுவீர்கள். தலைமை உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்கும். கலைத்துறையினரே! கிடைக்கிற வாய்ப்பு சின்னதாக, சாதாரணமானதாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அவ்வப்போது உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வரும். விவசாயிகளே! வங்கிக் கடன் தள்ளுபடியாகும். நிலத்தகராறு தீர்வுக்கு வரும். மகசூலை பெருக்குவீர்கள்.இந்தப் புத்தாண்டு சமயோஜித புத்தியால் சாதிக்க வைப்பதுடன் வாழ்வின் நெளிவு, சுளிவுகளை கற்றுத் தருவதாக அமையும். 
பரிகாரம்:
திருச்சிக்கு அருகேயுள்ள குணசீலம் சீனிவாசப் பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Makaram


பழமையான வேர்கள் பலமாக இருந்தால்தான் புதிய இலைகளும் பூக்களும் காய்களும் கனியும் என்பதை அறிந்த நீங்கள், கோபுரத்தில் இருந்தாலும் அஸ்திவாரத்திற்கு அடிக்கடி நன்றி கூறுவீர்கள். உங்களுக்கு 3வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் தவிடு பொடியாகும். பிரபல யோகாதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். இதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். 

தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளை கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தோலில் நமைச்சல் நீங்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீட்டை புதுப்பித்துக் கட்டுவார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். 


அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வர வேண்டிய பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அவருக்கு கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். புதியவர்களை நம்பி, பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். 

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்காதீர்கள். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். 
வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும்.  17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். மழலைச் செல்வம் உங்கள் இல்லம் நாடி வரும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். 


மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். சொத்து விஷயங்களிலிருந்து வந்த சிக்கல்களுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை 8ம் வீட்டிலேயே அமர்ந்திருக்கும் செவ்வாய் அவ்வப்போது அலைக்கழிப்பார். 

பழைய பிரச்னைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்பத்தில் வீண் சந்தேகம், மனைவியுடன் வாக்குவாதங்கள் வரக்கூடும். அடிக்கடி வாகனம் பழுதாகும். சாலைகளை கடக்கும்போது கவனம் தேவை.  சகோதர வகையில் கருத்து மோதல்கள் வெடிக்கும். மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. 


கேது உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பொறுப்பில்லா தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீகச் சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது நல்லதல்ல. ராகு உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் அமர்வதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். 

வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்களுக்காக எவ்வளவு செய்தும் நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.  1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 4ல் கேதுவும் 10ல் ராகுவும் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும்.  வீண் அலைச்சல், டென்ஷன், காரிய தாமதம், வாகன விபத்துகள் வந்துபோகும். 


சனிபகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் தொடர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். நட்பு வட்டம் விரியும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பொது விழாக்களை தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். ஆனால், சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்வதால் இக்காலகட்டத்தில் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். 

வேலைச்சுமை, அலைச்சல் அதிகரிக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.கன்னிப் பெண்களே! வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்தீர்களே, இனி அந்த அவல நிலை மாறும். காதல் கைகூடும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். கல்வியில் உயர்வு உண்டு. கலை, இலக்கியம், இசையில் ஆர்வம் பிறக்கும். மாதவிடாய்க் கோளாறு, தொண்டை வலி, சளித் தொந்தரவு நீங்கும். மாணவர்களே! சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாலையில் எழுந்து படியுங்கள். 

நினைவாற்றல் பெருகும். கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வியாபாரிகளே! முன்பு இருந்த போராட்டம், தடைகள் நீங்கி இப்போது மனநிறைவுடன் காணப்படுவீர்கள். மார்ச், மே மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக செயல்படுவீர்கள். சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கி அதிக லாபம் ஈட்டுவீர்கள். 

உணவு, ஷேர், சிமென்ட், செங்கல், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகஸ்தர்களே!  மே, டிசம்பர் மாதங்களில் புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. மேலதிகாரியிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி நட்புறவாடுவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலக சூட்சுமங்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 

கணினி துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரும். அரசியல்வாதிகளே! பதவி உயர்வு உண்டு. மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். 
விவசாயிகளே! வங்கிக் கடன் கிடைக்கும். காய், கனி, கிழங்கு வகைகளால் லாபம் பெருகும்.  இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை ஏமாற்றினாலும் மையப் பகுதியில் இருந்து உங்களை ஏற்றத்தில் உயர்த்தி விடுவதாக அமையும்.
பரிகாரம்:
சென்னை-திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜரை பௌர்ணமி திதியில் வணங்குங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Dhanus


ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல என்பதுபோல வாழ்க்கையில் துன்பங்கள் வந்த போதும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! அமைதியை விரும்பும் நீங்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பீர்கள். உங்களின் சுக வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் மனதிலிருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களை கட்டும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.  சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். 

ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தங்க ஆபரணம், விலைஉயர்ந்த ஆடை வாங்குவீர்கள். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொத்தை எதிர்பார்த்த விலைக்கு விற்று, புது சொத்து வாங்குவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். 

தாயாரின் உடல் நலம் சீராகும்.  16.5.2012 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசுகூட இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மகளுக்கு வெகுநாட்களாக தேடி அலைந்த வரன் பார்க்கும் படலம் இப்பொழுது முடியும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். 


17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சென்று மறைவதால் வீண்பழி, டென்ஷன், விரயம், விரக்தி, மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வந்துபோகும். பணத்தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். 


சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். புகழ் பெற்ற வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யாருக்காகவும் பைனான்ஸில் பணம் வாங்கித் தரவேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உங்களின் கையெழுத்திட்ட வங்கிக் காசோலையையும் சொத்துப் பத்திரத்தையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். 


22.6.2012 வரை செவ்வாய் 9ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சகோதரிக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தந்தையார் சில நேரங்களில் கோபப்படுவார். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதுச் சொத்து வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள். 


வருடம் பிறக்கும் போது ராகு 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக லாபம் உண்டு. மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்.  திடீர் பயணங்களும் அலைச்சல்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள். 

கேது 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். காற்றோட்டம், குடிநீர் வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாடு சென்று வருவீர்கள். 

ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். ஆனால், 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் ராகுவும் 5ல் கேதுவும் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். மகளின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். 
சனிபகவான் உங்களின் லாப வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணப்புழக்கம் அதிகரிக்கும். இனி திட்டமிட்டு செயல்படுவீர்கள். சொத்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். 

வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேச சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சனிபகவான் வக்ரமாகி அமர்வதால் இக்கால கட்டத்தில் உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். கன்னிப் பெண்களே! தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் இனி விமரிசையாக முடியும். ஆடை அணிகலன்கள் சேரும். 

பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி, சைனஸ் தொந்தரவு வந்து நீங்கும். மாணவர்களே! வகுப்பில் பின் வரிசையிலிருந்து முன் வரிசைக்கு வருவீர்கள். பிணக்கு தந்த கணக்குப் பாடத்தில் மதிப்பெண் கூடும். கூடாப் பழக்கம் விலகும். எதிர்பார்த்த பாடப் பிரிவில் உயர் கல்வியைத் தொடர்வீர்கள். வியாபாரிகளே! முன்பின் அனுபவம் இல்லாத துறையில் மற்றவர்களை நம்பி இறங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள். 

சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்வது நல்லது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம், இரும்பு, துரித உணவு வகைகளால் லாபம் பெறுவீர்கள். ஏப்ரல் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து போவார்கள்.


உத்யோகஸ்தர்களே! எதற்கெடுத்தாலும் உங்களை குறை சொல்லுவதற்கென்றே ஒரு கூட்டம் இருந்ததே! இனி உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். ஏப்ரல் மாதத்தில் அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும். வருடம் முழுக்க வேலைச்சுமை  இருந்துக் கொண்டேயிருக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். கணினி துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயரும். 

அரசியல்வாதிகளே, தொகுதிக்குள் உங்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. மேலிடம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். 
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்பு என்றில்லாமல் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். வீண் வதந்திகள் வரக்கூடும். 

உங்களின் படைப்புகளுக்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். விவசாயிகளே, வரப்பு, வாய்க்கால் பிரச்னையெல்லாம் முடிவுக்கு வரும். உற்பத்தியை இரட்டிப்பாக்குவீர்கள். தானிய வகைகளால் ஆதாயமுண்டு. இந்தப் புத்தாண்டு வாடி வதங்கியிருந்த உங்களுக்கு தைரியத்தை தந்து வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும். 
பரிகாரம்:
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பாதையிலுள்ள திருமுக்கூடலில் அருளும் பெருமாளை துவாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Vrichigam


பணத்திற்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காத உங்களை, பகடைக் காயாக உருட்டினாலும் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபட மாட்டீர்கள். நீதி நியாயத்திற்காக குரல் கொடுக்கும் நீங்கள், அடிபட்டவர்களை அரவணைப்பீர்கள். தளராத தன்னம்பிக்கையால் தடைகளையும் படிக்கட்டுகளாக்கி பயணிப்பவர்களே!சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் எதையும் சமாளித்து வெற்றி பெறும் நெஞ்சுறுதி பிறக்கும். இயலாத காரியங்களையும் இங்கிதமான பேச்சால் முடித்துக் காட்டுவீர்கள். 


பிரபலங்கள் உதவுவார்கள். செலவுகள் உங்களை தொடர்ந்து வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று பிடிப்பது நல்லது. அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் வீடுமாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். உங்கள் ராசிநாதனான செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை 10ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிய பொறுப்பும் பதவியும் தேடி வரும். 


வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகள் உதவியாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்களால் உதாசீனப்படுத்தப்பட்டீர்களே! இனி மாமனார், மாமியார், மச்சினர் போன்றோர் மதிப்பார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மை விலகும். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் பழி, ஏமாற்றம், அலைச்சல், டென்ஷன், வேலைச்சுமை, செரிமானக் கோளாறு என வந்து நீங்கும். 

உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாமே. என்னதான் திட்டமிட்டு செயல்பட்டாலும் எந்த காரியமானாலும் இரண்டு மூன்று முறை அலைந்துதான் முடிக்க வேண்டிவரும். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். தங்க 
ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். 

அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுத்து முடிப்பீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டிவரும். 
உறவினர்கள், நண்பர்களுடன் கொஞ்சம் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் நுழைவதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். சோர்ந்து கிடந்த நீங்கள் உற்சாகமாவீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். பாதியிலேயே நின்றுபோன வேலைகள் முழுமையடையும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். 

கணவன்-மனைவிக்குள் இருந்த சந்தேகம், ஈகோ பிரச்னைகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிட்டும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். மகளுக்கு இருந்த கூடாப் பழக்கம் விலகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். தாயாருக்கு இருந்த நெஞ்சு வலி நீங்கும். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னை தீரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். 


வருடம் பிறக்கும் போது ராசிக்குள் ராகு நிற்பதால் தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு என வந்து நீங்கும். சில சமயங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள். நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. 7ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரும். உங்கள் இருவருக்குள் பிரச்னையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். 

மற்றவர்கள் சொல்வதை கேட்டு மனைவி, மனைவிவழி உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 6ல் கேதுவும் 12ல் ராகுவும் நுழைவதால் மன தைரியம் கூடும். பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. அரசு அதிகாரிகள் நண்பராவார்கள். 
சனிபகவான் ராசிக்கு 12ம் வீட்டில் விரயச் சனியாக தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னையை எவ்வாறு சமாளிக்கப் போகிறோமோ என்று கவலைப்படுவீர்கள். 

பணவரவு ஓரளவு இருக்கும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள்.கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தால் முடங்கிப் போனீர்களே, இனி காதல் கைகூடும். தோலில் நமைச்சல், தேமல் நீங்கும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள். வேலை கிடைக்கும். கண்ணுக்கழகான கணவர் வந்தமைவார். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள்.


மாணவர்களே! ஏனோ தானோ என்று படிக்காமல் இனி ஆர்வத்துடன் படிப்பீர்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளே! வட்டிக்கு வாங்கி புதிய முதலீடு போட்டு நஷ்டப்பட்டீர்களே! உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றமடைந்தார்களே! இனி உங்களின் மாறுபட்ட அணுகு
முறையால் லாபமீட்டுவீர்கள். 

ஜனவரி, ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். மருந்து, கமிஷன், வாகன உதிரி பாகங்களால் ஆதாயமுண்டு. வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். ஆகஸ்ட் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் ஓயும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.உத்யோகஸ்தர்களே! ஓடி ஓடி உழைத்தும் உங்களை உதாசீனப்படுத்தியதுடன், கெட்டப் பெயரும்தானே மிஞ்சியது. 

இனி அந்த அவலநிலை மாறும். மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார். ஜூன், ஜூலை மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த மனப்போர் நீங்கும். கணினி துறையினருக்கு விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும்.  அரசியல்வாதிகளே! சிலர் உங்களைப் பற்றி  தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். 
கலைத்துறையினரே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். கிசுகிசுக்கள் ஓயும். 


போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள்.
விவசாயிகளே, கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனை அரசு தள்ளுபடி செய்யும். நெல், கரும்பு உற்பத்தியால் லாபமடைவீர்கள். 
இந்தப் புத்தாண்டு முனகிக் கொண்டிருந்த உங்களை முழக்கமிட வைப்பதுடன், வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குவதாகவும் அமையும்.
பரிகாரம்:
மயிலாடுதுறை-கும்பகோணம் பாதையில் உள்ள திருவாடுதுறை தலத்தில் அருளும் கோமுக்தீஸ்வரரையும் திருமூலர் ஜீவசமாதியையும் சனிக்கிழமையன்று வணங்கி வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Thulam


மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடையும் நீங்கள், தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். அடக்கு முறைக்கும் ஆணவத்திற்கும் அடிபணியாத நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். 

உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். புதன் சாதகமாக இருப்பதால் வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். 


இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து காற்றோட்டம், தண்ணீர் வசதி அதிகமுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர், வீட்டில் குடிநீர், கழிவுநீர் பிரச்னைகள் தீரும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்று இனத்தவர்களின் ஆதரவு கிட்டும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 


16.5.2012 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே என தவித்த பெற்றோருக்கு அழகான வாரிசு உருவாகும். 

பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தள்ளிப்போன கல்யாணப் பேச்சுவார்த்தை கூடிவரும். மூத்த சகோதரிக்கு கல்யாணம் நடக்கும். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் 8ம் வீட்டில் மறைவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர் செலவுகள் வந்துபோகும். 
ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் அநாவசியப் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். 

சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொள்வீர்கள். நண்பர், உறவினர் சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். ரத்த அழுத்தம், சளித் தொந்தரவு, இனந் தெரியாத கவலைகள் வந்துநீங்கும். சித்தர் பீடங்களுக்கு மறவாமல் செல்லுங்கள். வருடம் பிறக்கும் போது 2ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் பேச்சில் அதிகம் கடுமை காட்டாதீர்கள். 

சில நேரங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப்போய் அது விபரீதமாக முடியும். குடும்பத்தில் சின்ன சின்ன கூச்சல் குழப்பங்கள் வந்துபோகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். கேது 8ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திண்டாடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். கை, காலில் காயம், வயிற்றுக் கோளாறு, மூட்டு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது.

 
1.12.2012 முதல் உங்கள் ராசிக்குள் ராகுவும் 7ல் கேதுவும் நுழைவதால் மனக்குழப்பம், எதையோ இழந்ததைப்போல் ஒரு வித கவலைகள், பதட்டம், தலைச்சுற்றல், பல்வலி வந்து நீங்கும். மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.
ஜென்மச் சனி தொடர்வதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள் வரத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்த வேண்டாம். 

உங்கள் யோகாதிபதி சனிபகவான் உச்சமாகி ராசிக்குள் அமர்வதால் பணம் வரும். மழலை பாக்யம் உண்டு. ஆனால்  யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனத்தை இயக்கும் முன் பிரேக்கை சரிபாருங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். 
சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் சற்றே அலைச்சலும் சுபச் செலவுகளும் வரும். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். 

அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் வீண் பழியில் சிக்கிக்  கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களை தள்ளி வையுங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். முகப்பரு, பசியின்மை, ஹார்மோன் கோளாறுகள் வந்து நீங்கும். காய், கனிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோரின் விருப்பப்படி திருமணம் முடியும். 
மாணவர்களே! புத்தகத்தை தொட்டாலே தூக்கம் வந்ததே! இனி உற்சாகமாகப் படிப்பீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசும் பாராட்டும் உண்டு. 


வியாபாரிகளே! முதலீடுகள் அதிகமிட்டு விழிபிதுங்கி நின்றீர்களே, இரவு பகலாக உழைத்தும் லாபம் பார்க்க முடியவில்லையே, கவலை வேண்டாம். இனி அந்த நிலை மாறும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை புதுப்பிப்பீர்கள். ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரம் அறிந்து புதிய சரக்குகளை கொள்முதல் செய்யுங்கள். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். 

ரியல் எஸ்டேட், கண்ணாடி, துணி, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த பிணக்கு விலகும். உத்யோகஸ்தர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் பகையை மறந்து இனி உங்களுக்கு உதவுவார். நெடுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். சம்பளம் கூடும். 


பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட் மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடிவரும். கணினி துறையினருக்கு வேறு நிறுவனங்களிலிருந்து புது வேலை கிடைக்கும். 
அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்படாதீர்கள். கலைத்துறையினரே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.  அவ்வப்போது வீண் வதந்திகளும் வரக்கூடும். புது வாய்ப்புகள் தேடிவரும். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அடகில் வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். இந்தப் புத்தாண்டு எடுத்த காரியங்களை 
முடித்துக் காட்டும் வல்லமையையும் வசதி  வாய்ப்புகளையும் தருவதாக அமையும். 
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அஷ்டபுஜ காளியை அஷ்டமி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Kanni


எறும்பைப்போல் சுறுசுறுப்பும் எதுகை, மோனையான பேச்சும் சிந்தனை ஆற்றலும்,பகுத்தறிவுத் திறனும் கொண்ட நீங்கள், நல்ல நிர்வாகியாகவும் திகழ்வீர்கள்.   உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் 5ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். இதுவரை வராமல் வெளியில் நின்ற தொகை கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியம் முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். மனைவி வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகளுக்காக சொத்து சேர்ப்பீர்கள்.

 
அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். பாதியிலேயே நின்றுபோன வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உங்கள் ராசியை சந்திரன் பார்ப்பதால் புத்துணர்ச்சி ததும்பும். எதிலும் ஆர்வம் பிறக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் குரு மறைந்திருப்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். என்றாலும் சமாளிப்பீர்கள். சிலரால் வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள், எச்சரிக்கை தேவை.

  
17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.  குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக அலைந்தீர்களே, கவலை வேண்டாம்; அழகான வாரிசு உண்டாகும். 


புது வேலைக்கும் முயற்சி செய்தீர்களே! இதைவிட அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவான புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாடு பயணம் 
சாதகமாக அமையும்.        

    
செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை 12ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். 


வருடம் பிறக்கும்போது உங்கள் ராசிக்கு 3ல் ராகு அமர்ந்திருப்பதால் புதுச் சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் அமர்வீர்கள். சவால்களை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்று மதம், மொழி, இனத்தவரால் திடீர் திருப்பம் உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 


9ம் வீட்டில் கேது நிற்பதால் தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும். தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துபோகும். அவருடன் மனத்தாங்கலும் வந்து நீங்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் பேச்சில் தடுமாற்றம், விரக்தி, ஏமாற்றம் வந்து போகும். யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். 


சனிபகவான் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாக தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். ஆனால், யோகாதிபதி சனி உச்சமாகி அமர்வதால் திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. இருந்தாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கத்தான் செய்யும்.  சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். 


ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். பார்வைக் கோளாறு, பல் வலி வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்டதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். 


சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக  அமர்வதால் இக்கால 
கட்டத்தில் மனஇறுக்கம், ஏமாற்றம், வீண் விரயம், ஒருவித படபடப்பு, நம்பிக்கையின்மை வந்துபோகும்.கன்னிப் பெண்களே! தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். இனி உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமைவார். விடுபட்ட பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். முகப்பரு, தோலில் நமைச்சல், கனவுத் தொல்லை வந்து நீங்கும்.


மாணவர்களே! படிப்பைத்தவிர மற்றதில் கவனம் செலுத்த வேண்டாம். பெற்றோரின் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள். 
வியாபாரிகளே! தொழிலில்  போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். மே, ஜூன், ஜூலை, நவம்பர் மாதங்களில்  திடீர் திருப்பங்களும் அதிரடி லாபங்களும் உண்டாகும். 

கடையை வசதியான இடத்திற்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். ஹோட்டல், புரோக்கரேஜ், கமிஷன், எலக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய பங்குதாரர்களையும் 
சேர்ப்பீர்கள். உத்யோகஸ்தர்களே! உங்களைவிட தகுதி குறைந்தவருக்குக்கூட பதவி உயர்வு கிடைத்ததே! சம்பள உயர்வு இல்லாமல் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சக ஊழியர்களாலும் தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டீர்களே! 

இனி இந்த அவலநிலை மாறும். எல்லோரும் மதிப்பார்கள். ஏழரைச் சனி இருப்பதால் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள். முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள். அநாவசியமான விடுப்புகளை இனி குறையுங்கள். காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். கணினி துறையினர்களுக்கு புது வாய்ப்புகள் வரும். என்றாலும் யோசித்து ஏற்பது நல்லது.


அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தெரிவியுங்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். சகாக்கள் மத்தியில் மதிப்பு கூடும். கலைத்துறையினரே! ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொரு புறம் கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவீர்கள். வருமானம் உயரும். விவசாயிகளே! வங்கியில் கடன் கிடைக்கும். அவ்வப்போது வீண் செலவுகளை வைத்த மோட்டார் பம்புசெட்டை புதிதாக மாற்றுவீர்கள்.இந்தப் புத்தாண்டு தத்தளித்துக் கொண்டிருந்த உங்களை தலை நிமிர வைப்பதுடன்  புகழையும் பணத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
சென்னை-மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் கபாலீஸ்வரருக்கு தும்பைப் பூ மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Simham


காய்த்த மரம் வளைந்து நிற்கும்; கல்லடியும்படும் என்பதை அறிந்த நீங்கள், ஏச்சுப் பேச்சுக்கள் எத்தனை வந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டீர்கள். தன்மானம் மிக்க நீங்கள், தலைவனாக இருந்தாலும் தவறு செய்துவிட்டால் தட்டிக் கேட்கத் தயங்கமாட்டீர்கள். 
உங்கள் யோகாதிபதி செவ்வாய் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் இனி வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள். வாடிய முகம் மலரும். 

சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய சொந்த-பந்தங்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பிள்ளைகளிடமிருந்த பிடிவாத குணம் நீங்கும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்களுக்கு 8வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப் பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். 

குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். சுக்கிரன் 6ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 16.5.2012 வரை குருபகவான் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பணப்
புழக்கம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சொத்து வாங்க பாதி பணம் தந்து மீதி பணம் தேடினீர்களே! இனி அது கிடைக்கும். 

நெஞ்சு வலியால் சோர்ந்திருந்த தந்தையாரின் உடல் நிலை சீராகும். பேச்சு வார்த்தையில்லாமல் தனித்திருந்த அப்பா இனி உங்களுடன் சேர்ந்து கொள்வார். வங்கியில் வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரகப் பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். நாடாளுபவர்கள் உதவுவார்கள்.

 
கோயில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனம் வாங்குவீர்கள். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்வதால் எதிலும் அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள். அடுத்தவர்களை விமர்சித்துப் பேசுவதை நிறுத்துங்கள். வறட்டு கௌரவத்திற்காக ஆடம்பரச் செலவுகள் செய்து கொண்டிருக்காதீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் பாக்கி வைக்காதீர்கள். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். 

பிள்ளைகளின் நட்பு வட்டங்களை கண்காணியுங்கள். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். அவசரப்பட்டு வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டாம். அரசு அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் வைப்புத் தொகை வைக்க வேண்டாம். செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை ராசிக்குள்ளேயே வக்ரமாகி நிற்பதால் சில நேரங்களில் எதிலும் ஆர்வமில்லாமல் போகும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான 
வீடுகளில் செல்வதால் மனஇறுக்கம் விலகும். 


புத்துணர்ச்சி பெருகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்னைகள் நீங்கும். வருடம் பிறக்கும்போது ராகு 4ம் வீட்டில் நிற்பதால் தாயாருக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள், மூட்டுவலி வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் மீண்டும் தலை தூக்கும். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். கேது 10ம் வீட்டில் தொடர்வதால் மறைமுக எதிர்ப்பு, உத்யோகத்தில் வேலைச்சுமை, ஒருவித படபடப்பு, கண் எரிச்சல், ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும். 

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்க விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது மனதை வாட்டும். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும் 9ல் கேதுவும் நுழைவதால் வழக்கு விரைந்து முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை தந்து முடிப்பீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவியுண்டு. தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும்.


சனிபகவான் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி சில பிரச்னைகளுக்கு யதார்த்தமான தீர்வு காண்பீர்கள். வேற்றுமதத்தினர், மொழியினர் உதவுவார்கள். வழக்கால் பணம் வரும். ஆனால், சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் பாதச் சனியாக அமர்வதால் சிறுசிறு விபத்துகள், குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். 

  
கன்னிப் பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும். மாதவிடாய்க் கோளாறு, தலைச்சுற்றல், தூக்கமின்மை நீங்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மாணவர்களே! தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். கணிதம், அறிவியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். ஓவியம், கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள். நல்ல நட்புச் சூழல் உருவாகும். 


வியாபாரிகளே! சந்தை நிலவரம் அறிந்து புது கொள்முதல் செய்வீர்கள். புதிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். கடையை விரிவுபடுத்தி அழகு
படுத்துவீர்கள். ஹோட்டல், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி, மர வகைகளால் அதிக லாபமடைவீர்கள். அனுபவமுள்ள வேலையாட்கள் அமைவார்கள். சிலரை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். புதிதாக முதலீடு செய்யலாம். ஜனவரி, மே, ஜூன் மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். உங்களிடத்தில் முற்பகுதியில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.    


உத்யோகஸ்தர்களே! உங்களை அலட்சியப் படுத்திய மேலதிகாரியின் மனம் மாறும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அலுவலகப் பிரச்னைகள் மட்டுமல்லாது அதிகாரியின் சொந்த பிரச்னைகளையும் தீர்த்து வைப்பீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். சம்பளம் உயரும். பணிகளையும் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்க வைப்பீர்கள். இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், முகவரி இல்லாத குற்றச்சாட்டு கடிதங்களின் அடிப்படையில் சின்னச் சின்ன விசாரணைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும். கணினி துறையினருக்கு பதவி உயரும். 


அரசியல் வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள்.  கலைத்துறையினரே! கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  விவசாயிகளே! தண்ணீர் கிடைக்கும். மகசூல் பெருகும். வீட்டில் நல்லது நடக்கும். இந்தப் புத்தாண்டு தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட வைத்து சவால்களில் வெற்றி பெற வைப்பதாகவும் அமையும். 
பரிகாரம்:
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வியாழக் கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். பழுதடைந்த பள்ளியை புதுப்பிக்க உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Kadakam


வீடு-வாசல் என்று அடங்கி விடாமல், நாடு-நகரம் என யோசிப்பவர்களே! ஆர்ப்பாட்டம் செய்யாமல் அகிம்சை வழியில் சென்று நினைத்ததை அடையும் நீங்கள், எதிரியின் உணர்வுக்கும் மதிப்பளிப்பவர்கள். ஆறாவது அறிவுக்கு அடிக்கடி வேலைதரும் நீங்கள், நீதி நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். 
உங்கள் 9வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். 


வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தீர்களே, இப்போது உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொடர்வதால் அதுவரை நான்கைந்து வேலைகளை ஒன்றாக சேர்த்து பார்க்க வேண்டியது இருக்கும். உத்யோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும் இடமாற்றங்களும் வரக்கூடும். 


எனவே அலுவலகத்தில் அதிக பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களிடம் கேட்டால் மட்டும் ஆலோசனையோ, கருத்தோ சொல்லுங்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டிவரும். பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். 
குடும்ப விஷயங்களை நெருங்கியவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய நண்பர்களை வீடுவரை அனுமதிக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனதை வாட்டும். 

ஊர் பொது விவகாரங்களில் உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வீர்கள். வங்கிக் காசோலைகளில் முன்பே கையெழுத்திட வேண்டாம். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. ஏதோ ஒன்றை இழந்ததைப்போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். மகனின் கல்யாணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வங்கிக் 
கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். 

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். செவ்வாய், வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை 2ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் புது சொத்து வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வெளிநாடு சென்று வர விசா கிடைக்கும். 

சகோதர, சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். வருடம் பிறக்கும்போது ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். ஒற்றைத் தலைவலி, ரத்த சோகை, மூட்டு வலி வரக்கூடும். தாய்மாமன், அத்தை வகையில் செலவுகள் வந்துபோகும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். கேது 11ம் வீட்டில் தொடர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். 

பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் ராகுவும் 10ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். நெருங்கிய உறவினர், நண்பரை இழக்க நேரிடும். வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்கள் சுக ஸ்தானமான 4ம் வீட்டிலேயே தொடர்வதால் நெடுந்தூர, இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். 


யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வேற்றுமதத்தினர்கள் உதவுவார்கள். இலவசமாக அறிமுகமாகும் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. கன்னிப்பெண்களே! தடைபட்ட படிப்பை முடிக்க முடியாமல் திணறினீர்களே! எந்த பாடப் பிரிவிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இந்த ஆண்டில் படிப்பை முடிப்பீர்கள். 

வருடப் பிற்பகுதியில் நல்லவேலையும் கிடைக்கும். காதல் தோல்வியால் கலங்கியிருந்தீர்களே! இனி பெற்றோர் பார்க்கும் வரன் உங்களுக்கும் பிடித்தமாக இருக்கும். மாணவர்களே! கணிதம், அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கெட்ட நண்பர்களை விட்டு பிரிவீர்கள். மதிப்பெண் கூடும். போராடி புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். வியாபாரிகளே! மார்ச் மாதத்திலிருந்து கணிசமாக லாபம் உயரும். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று தொந்தரவு தருவார்கள். 


8.5.2012லிருந்து பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வரவேண்டிய பாக்கிகளையும் வசூலிப்பீர்கள். புது சலுகை திட்டங்கள் மூலம் புது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும் ஒத்துழைப்பார்கள். ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதுக் கிளைகள் தொடங்கும் வாய்ப்பும் வரும். ஹோட்டல், கமிஷன், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். 


உத்யோகஸ்தர்களே! 16.5.2012 வரை நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியது வரும். இருந்தாலும் கடைசியில் கெட்ட பெயர் தான் மிஞ்சும். கவலை வேண்டாம் 17.5.2012 முதல் குருபகவான் உத்யோக ஸ்தானத்தை விட்டு விலகுவதால் உங்களை பாடாய்படுத்திய உயரதிகாரி இடம் மாறுவார். நல்ல மேலதிகாரி பணியில் வந்து சேர்வார். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். ஜூன், செப்டம்பர், நவம்பர் 
மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. கணினி துறையினருக்கு பணிச்சுமை குறையும். புது சலுகைகளும் கிடைக்கும்.


அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகள் வந்தாலும் யோசித்து ஏற்பது நல்லது. வீண் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். தலைமையிடம் பேசும் போது பணிவு அவசியம்.கலைஞர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களின் ஆதரவு உண்டு. விவசாயிகளே! நவீனரக உரங்களை பயன்படுத்தி மகசூலை இரட்டிப்பாக்குவீர்கள். கூட்டுறவு வங்கியில் 
கடனுதவி கிடைக்கும்.இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் பணப் பற்றாக்குறையையும் மன உளைச்சலையும் தந்தாலும் 17.5.2012 முதல் எதிலும் வெற்றியையும், யோகத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
திருவக்கரை வக்ரகாளியம்மனை பஞ்சமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Mithunam


எந்தச் சூழ்நிலையிலும் கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாத நீங்கள், மற்றவர்களை வழி நடத்திச் செல்லும் அளவிற்கு மதியூகமும் தலைமைப் பண்பும் கொண்டவர்கள். கடுமையாக தாக்கிப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாமல் காய்களை நகர்த்தும் நீங்கள், ஒட்டுமொத்த குடும்ப பாரத்தையும் சுமக்கும் சுமைதாங்கிகள்.உங்கள் ராசிநாதனான புதன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர், நண்பர் வருகையால் வீட்டில் ஆனந்தம் பொங்கும்.

 புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. மகளுக்கு பல இடங்களிலும் வரன் தேடி அலைந்தீர்களே, இப்பொழுது நல்ல வரன் கிட்டும். சொந்தபந்தங்கள் மெச்சும்படி கோலாகலமாக திருமணத்தை முடிப்பீர்கள். மகனிடமிருந்த கூடாப் பழக்கங்கள் விலகும். அவர்கள் விரும்பியபடி அயல்நாட்டில் தரமான பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெற உங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பு வரும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். 


தாயாருக்கு இருந்த முதுகு வலி, மூட்டு வலி சரியாகும். தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும். அடிக்கடி தொல்லை கொடுத்த வாகனத்தை 
மாற்றிவிட்டு புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள்.  16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் வலுவாக காணப்படுவதால் திடீர் யோகம், பணவரவு உண்டு. நீண்ட நாட்களாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார். உங்களையும் அறியாமல் உங்களிடமிருந்து வந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். 

தன்னம்பிக்கையும் நேர்மறை எண்ணமும் உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிகள் தேடிவரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். ஆனால், 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். 

நன்கு அறிமுகமாகாதவர்களை, புதிய நண்பர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 
வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை செவ்வாய் 3ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவார்கள். 

கைமாற்றாக வாங்கியதை தந்து முடிப்பீர்கள். மகனின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். சிலநேரங்களில் உங்களையும் அறியாமல் சில தவறுகள் நேர்ந்ததல்லவா! இனி எதிலும் கவனமாக செயல்படுவீர்கள். சிலருக்கு இரண்டு சக்கர வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு காரில் செல்லும் யோகமும் உண்டு.


வருடம் பிறக்கும்போது 6ம் வீட்டில் ராகுவும் 12ம் வீட்டில் கேதுவும் அமர்ந்திருப்பதால் வெளிநாட்டுப் பயணம், வேற்று மதத்தினரால் உதவி எல்லாம் உண்டு. பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை உணருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் ராகுவும் 11ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் உங்களின் செயல்களில் தெளிவு பிறக்கும். எதையும் முதல் முயற்சியில் முடித்துவிட வேண்டுமென்பதில் கவனமாக இருப்பீர்கள்.

 பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் வந்துபோகும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிட்டும். இளைய சகோதரர் உங்களுக்கு பக்க
பலமாக இருப்பார். அரசாங்க வேலைகளில் வெற்றியுண்டு. சனிபகவான் ராசிக்கு 5ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். அவர்களின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து நிறைவேற்றப் பாருங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அவர்களை பிரிய வேண்டியது வரும். 


தாய்மாமன் வகையில் செலவுகளும் சின்னச் சின்ன மனஸ்தாபங்களும் வந்து போகும். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் வரும். கடுமையான வார்த்தைகளை தவிர்க்கப் பாருங்கள். சிலரின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சனம் செய்து கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்தாதீர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியானம், யோகா செய்வது நல்லது. 


கன்னிப் பெண்களே! சிலருக்கு கல்யாணம் ஏற்பாடாகியும் நின்று போனதே! இனி அந்த நிலை மாறும். வருடத்தின் முற்பகுதியிலேயே உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வாழ்க்கைத்துணை அமைவார். அழகு, அறிவு கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும்.மாணவர்களே! இரவில் சீக்கிரம் படுத்து, அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள். வியாபாரிகளே! இந்த வருடத்தில் அமோக லாபம் இருக்கும். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை இழுப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். 

ஏப்ரல் மாதத்திற்குள் வரவேண்டிய பாக்கிகளெல்லாம் வந்துசேரும். புது கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. உணவுவிடுதி, ரியல் எஸ்டேட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் தொந்தரவு குறையும். 


உத்யோகஸ்தர்களே! வீண் அவமானங்கள், வேலைச்சுமை, விருப்பமில்லாத இடமாற்றங்களையெல்லாம் சந்தித்தீர்களே! ஆனால், இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே உங்கள் கை மேலோங்கும். ஏப்ரல், மே மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். சிலருக்கு புதுவேலை 
அமையும். மேலதிகாரியுடன் இருந்த கருத்துமோதல்கள் நீங்கும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். 
கணினி துறையிலிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். 

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள். புதிய பொறுப்புகள் தேடிவரும். கலைத்துறையினரே! வர வேண்டிய சம்பளபாக்கி கைக்கு வரும். புகழடைவீர்கள்.    விவசாயிகளே! பூச்சித் தொல்லை, வண்டுக்கடியிலிருந்து பயிரைக் காப்பீர்கள். உங்கள் கடன் தள்ளுபடியாகும். 
இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் அதிரடி வளர்ச்சியை தருவதுடன், பிற்பகுதியில் கொஞ்சம் அலைச்சலையும் பக்குவத்தையும் தருவதாக அமையும். 
பரிகாரம்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் அருளும் சுகாசன பெருமாளை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.