Showing posts with label கன்னி. Show all posts
Showing posts with label கன்னி. Show all posts

Wednesday, 16 September 2009

சனிப் பெயர்ச்சி பலன்கள் - கன்னி

மகேசனின் படைப்பில் யாரும் மட்டமானவர்கள் இல்லை என்பதை அறிந்த நீங்கள் எல்லோரையும் மதிப்பீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 12இல் அமர்ந்து கொண்டு பணத்தை வரவிடாமல் தடுத்த சனி பகவான் இப்போது 26.09.2009 முதல் 21.12.2011 முடிய உள்ள காலத்தில் உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.

அடுக்கடுக்காகப் பிரச்சனைகளையும், அவமானங்களையும் சந்தித்தீர்களே! எந்த ஒரு வேலையையும் எளிதில் முடிக்க விடாமல் உங்களை கலங்கச் செய்தாரே! குடும்பத்திலும் அடுக்கடுக்கான சிக்கல்களையும், தொந்தரவுகளையும் கொடுத்து வந்தாரே! அதற்கெல்லாம் அவரே விமோசனம் அளிக்கப் போகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் கூச்சல், குழப்பங்கள் விலகும். கணவன்-மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தாம்பத்யம் இனிக்கும். அவசரத்துக்கு வட்டிக்கு வாங்கி விட்டு கட்ட முடியாமல் திணறினீர்களே! இனி கொஞ்சம் கொஞ்சமாக அதனைத் தந்து முடிப்பீர்கள். எதிர்பாராத பண வரவும் உண்டு. ஆனால் சேமித்து வைக்க முடியாது.

ஜென்மச்சனி என்பதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வறுத்த, பொறித்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. மனைவி மற்றும் அவர்வழி உறவினர்களால் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் விரையாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் கொஞ்சம் செலவும், அலைச்சலும் இருக்கும். உத்திரம் நட்சத்திக்காரர்களின் உடல் நிலையும் பாதிக்கும். குடும்பத்திலும் பிரச்சனைகள் வந்து நீங்கும்.

உங்களின் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் திடீர் திருப்பங்களால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். ஆனால் அஸ்தம் நட்சத்திரக் காரர்களுக்கு விபத்துகள், இழப்புகள், சளித்தொந்தரவு, மூட்டுவலி வந்து செல்லும்.

உங்களின் திருதிய,அட்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகவான் செல்வதால் நெருங்கிய உறவினர், நண்பர்களின் இழப்பும், சொத்துப் பிரச்சனையும், சகோதரர்களுக்கிடையே மன வருத்தமும் வந்து நீங்கும்.

வரும் 10.01.2010 முதல் 08.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். தூரத்து உறவினர்கள் உதவுவர். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கல்யாணம் தடைபட்டுக் கொண்டிருந்த மகனுக்கு, இனி திருமணம் கைகூடி வரும். ஊரே மெச்சும்படி திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். உடன் பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனத்தை மாற்றுவீர்கள். என்றாலும் சின்ன சின்ன விபத்துகள் வரக்கூடும்.

வியாபாரத்தில் வெகுளித்தனமாக இருந்து பல விதத்தில் நட்டப்பட்டீர்களே! இனி நுணுக்கங்களை கற்று லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது உங்களை ஏமாற்ற முயற்சி செய்வர். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்.

உத்தியோகத்தில் உங்களை அலைக்கழித்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காக பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் உங்களுக்காக பரிந்து பேசுவர். அலுவலக விஷயங்களை பிறரிடம் வெளியிட வேண்டாம்.

கன்னிப் பெண்களே! காதல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். கல்யாணம் கூடி வரும். மாணவ-மாணவியர்களே! உயர் கல்வியில் வெற்றியுண்டு. கலைஞர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தச் சனிப் பெயர்ச்சி தோய்ந்து துவண்டிருந்த உங்களை உற்சாகப்படுத்துவதாக அமையும்.