Showing posts with label சிம்மம். Show all posts
Showing posts with label சிம்மம். Show all posts

Wednesday, 16 September 2009

சனிப் பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

பொல்லாதவர்களைக் கண்டால் பொங்கி எழும் நீங்கள் கண்ணியமானவர்களைக் கண்டால் கை எடுத்துக் கும்பிடுவீர்கள்.

இதுவரை ஜென்மச்சனியாய் இருந்து திக்கு திசையறியாது சிதறடித்தாரே! ஸ்கேன், எக்ஸ்ரே, மருந்து, மாத்திரை என்று மருத்துவமனைக்கே பாதி செலவு செய்தீர்களே! இனி நோய் விலகும்.

யார் நல்லவர்? யார் கெட்டவர் என்பதை புரிந்து கொள்ளாமல் எல்லோரிடமும் எல்லாமும் பேசி சிக்கிக் கொண்டீர்களே! குடும்பம் இருந்தும் தனிமரமாய் தவித்தீர்களே! இப்பொழுது 26.09.2009 முதல் 21.12.2011 வரை உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். மனோ பலம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல், அறிவுப்பூர்வமாக யோசிப்பீர்கள்.

உங்களை எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். சோகமே வடிவாய் இருந்த உங்கள் மனைவி முகத்தில் இனி லஷ்மி குடிகொள்வாள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். என்றாலும் சனி பகவான் இப்போது 2ஆம் வீட்டிற்கு வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், கருத்து மோதல்கள் வரும்.

வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். கண்வலி, பல்வலி வந்து போகும். காசோலை தருவதற்கு முன் பணம் இருக்கிறதா? என்று பார்த்து கொள்ளுங்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். எந்த வேலையிலும் நிலைக்காமல் இருந்த உங்கள் மகனுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ராசிநாதனான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வழக்குகள் சாதகமாகும்.

உங்களின் விரையஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும்.

உங்களின் சுகபாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். பணம், பதவிகள் தேடி வரும்.

வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை உள்ள கால கட்டத்தில் சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வீண் சந்தேகம், ஏமாற்றங்கள், மனக் குழப்பம் வரக்கூடும்.

உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்துதக்க வைத்துக் கொள்ள நேரிடும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். தங்க நகைகளை இரவல் தர வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். வாகனத்தில் கவனம் தேவை. வாயுக்கோளாறால் நெஞ்சு வலிக்கும். பெரிய நோய் என்று பயந்து விடாதீர்கள்.

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை இனி அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

உத்யோகத்தில் நிரந்திரமில்லாமல் தவித்தீர்களே! இனி நல்ல வேலை கிடைக்கும். உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! தடைப்பட்ட கல்வியை தொடர்வீர்கள். தோலில் நமைச்சல், பசியின்மை நீங்கும். பெற்றோருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். மாணவ, மாணவிகளே! சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். இனி லட்சியத்தோடு படிப்பீர்கள். விடைகளை எழுதி பாருங்கள். கலைஞர்களே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

இந்த சனிப் பெயர்ச்சி ஒதுங்கியிருந்த உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன் உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத் தருவதாகவும் அமையும்.