Wednesday 16 September 2009

சனிப் பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி பளிச்சென்று பேசும் குணமுடைய நீங்கள் எதையும் சரியாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 3ஆவது வீட்டில் அமர்ந்து, தைரியத்தையும், விடாமுயற்சியையும் தந்த சனிபகவான் இப்போது சுகவீடான 4வது வீட்டில் 26.09.2009 முதல் 21.12.2011 வரை வந்து அமர்வதால் அர்த்தாஷ்டமச்சனியாச்சே என்று வருத்தப்படாதீர்கள். அல்லல்படுத்துமே, என்றெல்லாம் கவலைப் படாதீர்கள்.

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியே சனிபகவான்தான். அவர் 4வது வீட்டுக்கு வந்தாலும் ஓரளவு நல்லதையே செய்வார். குருபகவானின் பார்வையையும் சனி பகவான் பெறுவதால் சனியால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். சனியின் பார்வை 6ஆம் வீட்டில் விழுவதால் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும். எதிரிகள் பலவீனமடைவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

சனி உங்கள் ராசியையும் பார்ப்பதால் வயிற்றுவலி, பைல்ஸ் வந்து நீங்கும். சிலருக்கு முடி உதிரும். தேமல், முகப்பரு வந்து செல்லும். பெரிய நோய்க்கான அறிகுறிகள் தெரியும். ஆனால் அஞ்சாதீர்கள்.

கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகங்களும், விவாதங்களும் வந்து போகும். ஒருவரையருவர் அனுசரித்துப் போவது நல்லது. இளைய சகோதரர் எடுத்தெறிந்து பேசினாரே! இனி உங்களின் தியாக உணர்வை புரிந்துக் கொள்வார். தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கும்.

பூர்வபுண்ய ஸ்தானத்தின் மீது இருந்த சனியின் பார்வை விலகுவதால், குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் கூடாப்பழக்கம் விலகும். பொறுப்பாக நடந்து கொள்வர். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தைரிய ஸ்தானதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். அரசியலில் செல்வாக்கு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

உங்களின் தனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். திடீர் செல்வாக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சி என யாவும் கிட்டும்.

வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை உள்ள காலக்கட்டத்தில் சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் முக்கிய ஆவணங்களில் கையெத்திடும் போது கவனம் தேவை. கர்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

உங்களின் யோக லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகவான் செல்வதால் புது வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். ஆனால் மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல், கடன் பிரச்சனை, சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.

வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் என ஒருபக்கம் தொந்தரவு கொடுத்தாலும், மற்றொரு பக்கம் புது வாகனம் வாங்கும் யோகமுண்டு. புதிதாக வீடு கட்டி குடிபுகுவீர்கள். என்றாலும் புது சொத்துக்கள் வாங்கும் போது பத்திரங்களை வழக்கறிஞர்கள் மூலம் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

வங்கிக் கடன் கிடைக்கும். உணவு விஷயத்தில் கண்டிப்பு தேவை. எண்ணெய் பதார்த்தம், அசைவ உணவுகளை அறவே ஒதுக்கிவிடுங்கள். கீரை, பழ வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிராத்தனையையும் நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். பாக்கிகளை முடிந்த வரையில் கனிவாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். பங்குதாரர்களும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். புது வாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்க வேண்டாம். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பெற்றோருடன் கருத்து மோதல்கள் வரும். மாணவ-மாணவிகளே! மறதி, மந்தம் வந்து நீங்கும். கணிதம், வேதியியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். கலைஞர்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விமர்சனங்களை கண்டு கவலைப்படாதீர்கள்.

இந்தச் சனிப்பெயர்ச்சி மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவதுடன் வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுத்தருவதாக அமையும்.

No comments:

Post a Comment