Sunday 13 December 2009

Guru Peyarchi Palangal

குருபெயர்ச்சி பலன்கள் -மேஷம்


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். இதையொட்டி, 12 ராசிகளுக்கும் ஏற்படும் பலனைக் கணித்துள்ளார் ஜோதிடமாமணி மதுரை சங்கர்ஜி.


அசுவினி, பரணி, கார்த்திகை 1

+ பணவரவு அதிகரிக்கும்

- மூத்த சகோதரர்களுடன் பிரச்னை

தைரியம் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு 11ம் இடமான கும்பத்தில் அமர்வுபெறுகிறார். தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களை பார்க்கிறார். உங்கள் வாழ்க்கையில் பல்வேறு வசதிகள் நிறைந்து உயர்வு உண்டாகும். மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இளைய சகோதரர்கள் பாசத்துடன் உதவி செய்வர். ஆனால், மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வீடு, வாகன வகையில் தேவையான மாற்றம் செய்வீர்கள். புத்திரர் பெற்றோர் சொல் கேட்டு படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பூர்வீக சொத்தில் ஆதாய பணவரவு உண்டாகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். எதிரிகள் விலகிச் செல்வர். உடல்நலம் நன்றாக இருக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். சுபநிகழ்ச்சிகள் இனிதாக நிறைவேறும். நண்பர்களின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அனுகூலமும் தாராள பணவரவும் கிடைக்கும்.

தொழில்: தங்க நகை, மருத்துவ உபகரணங்கள், மோட்டார் வாகனம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கிரானைட் கற்கள், கட்டுமான பொருட்கள், பர்னிச்சர், உணவு பொருட்கள், ஜவுளி, விவசாய இடுபொருட்கள், இரும்பு, காகிதம் சார்ந்த தொழிலதிபர்கள் தொழிலில் வளர்ச்சியும் அதிக உற்பத்தியும் தாராள பணவரவும் கிடைக்கப்பெறுவர். லாபம் அதிகரிக்கும். தொழிற்சாலை அபிவிருத்திப்பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். ரியல் எஸ்டேட், நவீன மருத்துவமனை, தங்கும் விடுதிகள், தொழில்நுட்ப பயிற்சி, கல்லூரி நடத்துபவர்கள் கூடுதல் வளர்ச்சியும் உபதொழில் துவங்குவதுமான நன்னிலை பெறுவர். பணியாளர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக கிடைக்கும்.

வேலை: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் எளிதாக கிடைக்கும். தகுந்த சமயத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத் தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றி சந்தோஷப்படுவீர்கள். சிலர் எதிர்காலத்தேவை கருதி கொஞ்சம் சேமிக்கவும் இடமுண்டு.

வியாபாரம்: நகை, ஜவுளி, தான்யம், மளிகைப் பொருட்கள், சமையலறை சாதனங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், இறைச்சி, விவசாய இடுபொருட்கள், மருந்து, எண்ணெய், அழகுசாதனப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், காய்கறிகள், குளிர்பானம் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கும் இவர்களை விட அதிக லாபம் கிடைக்கும். புதிய கிளைகள் துவங்க வாய்ப்புண்டு. புது வியாபாரமும் தொடங்கலாம்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் அலுவலகத்தில் நற்பெயர் பெறுவார்கள். பணி உயர்வு, விண்ணப்பித்த கடன், விரும்பிய பணியிட மாற்றம் ஆகிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பப் பெண்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து சந்தோஷ வாழ்வு காண்பர். பணவரவு சிறப்பாக இருக்கும். கணவரின் ஒத்துழைப்பும் குடும்ப வளர்ச்சிக்கு கைகொடுக்கும். புத்திரப்பேறு வகையில் அனுகூல பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் போட்டி குறைவதால் உற்பத்தியிலும் விற்பனையிலும் நல்ல முன்னேற்றம் காண்பர். கூடுதல் பணவரவால் சேமிக்க வாய்ப்பு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கையால் மனம் மகிழ்வீர்கள்.

படிப்பு: மருத்துவம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், வணிகவியல், வங்கியியல், ஓட்டல் மேனேஜ்மென்ட், மாடலிங், ஜர்னலிசம் பயிற்சி பெறும் மாணவர்கள் திறம்பட செயல்பட்டு தேர்ச்சி பெறுவர். படிப்பு முடித்தவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்ற துறை மாணவர்களும் சிறப்பாகப் படித்து நல்ல மார்க் வாங்குவார்கள். கல்வி கடனுதவி சரியான நேரத்துக்கு கை கொடுக்கும். பெற்றவர்கள் பாராட்டும்படியான நிலையால் படிப்பில் ஆர்வம் மேலும் பெருகும். சிலர் விளையாட்டிலும் பரிசு பெறும் யோகமுண்டு.

அரசியல்: அரசியல்வாதிகளுக்கு ஆதரவாளர்களின் ஆதரவு பெருகும். புத்திரர்களின் செயல்பாடு அரசியல் பணிக்கு உதவுவதாக இருக்கும். எதிர்பார்த்த பதவிப் பொறுப்பு வந்து சேரும். எதிரிகளால் இருந்த தொல்லை பெருமளவில் குறையும். தலைமையிடம் நல்ல பெயர் உண்டாகும்.

விவசாயம்: பயிர்வளம் செழித்து அபரிமிதமான மகசூல் கிடைக்கும். அதிக பணவரவை சேமித்து வைப்பார்கள். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் காண்பர். புதிய கூடுதல் நிலம் வாங்க குருவின் அருள் பலமாக உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்: ரங்கநாதர்

பரிகாரப் பாடல்

பச்சைமா மலை போல் மேனி

பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரரேறே

ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான் போய்

இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகருளானே!


குருபெயர்ச்சி பலன்கள் -ரிஷபம்


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.









கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2

+ குழந்தைகளால் பெருமை

- பதவிக்கு ஆபத்து

இனிமையாகப் பேசி அனைவரையும் கவரும் ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 2,4,6ம் இடங்களைப் பார்க்கிறார். இந்த பெயர்ச்சி தொழில் சார்ந்த வகையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பத்தில் குரு, பதவிக்கு இடர் என்பது ஜோதிட மொழி.இருப்பினும் குருபார்வை பெறுகிற ஸ்தானங்களில் இருந்து ஓரளவு பலன்களை பெறுவீர்கள். பணவரவு ஓரளவுக்கு இருக்கும். கண் தொடர்பான குறையுள்ளவர்களுக்கு பார்வைத்திறன் வளர்ச்சி பெறும். சகோதர, சகோதரிகளின் உதவி கிடைக்காது. வீடு, வாகன பராமரிப்பு செலவுக்காக கடன் வாங்க வேண்டி வரும். தாயின் அன்பும், பாசமும் ஓரளவுக்கே கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் தொல்லை உண்டாகும். புத்திரர்கள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் பெறுவர். அவர்களால் உங்களுக்கு பெருமை உண்டாகும். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு சராசரிக்கும் குறைவான பணவரவு கிடைக்கும். நோய் தொந்தரவு விலகி ஆரோக்கியம் பெறுவீர்கள். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். நண்பர்கள் உதவும் மனப்பான்மையுடன் செயல்படுவர். வெளிநாடு வேலைவாய்ப்புக்கு முயற்சிப்பவர்களுக்கு நிலைமை சாதகமாக இல்லை. ஏற்கனவே பணிசெய்பவர்களுக்கும் வருமான நிலையில் அனுகூலம் அதிகமில்லை.

தொழில்: தொழிலதிபர்கள் கூடுதல் உழைப்பும், தகுந்த கவனமும் கொண்டால் மட்டுமே ஓரளவு லாபம் கிடைக்கும். டெக்ஸ்டைல்ஸ், தோல், சணல், காகிதம், இரும்பு, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், தண்ணீர் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் பிறர் பொறுப்பில் தொழிலை விட்டு வைப்பது நல்லதல்ல. போட்டி பெரிய அளவில் இடையூறு தராது. திறமைமிக்க பணியாளர்களை ஊக்கப்படுத்துவதால் உற்பத்தியில் வளர்ச்சியும், தரமும் அதிகரிக்கும். லாபம் சுமார் தான். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவு கையைக் கடிக்கும்.

வேலை: அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் கவனக்குறைவு காரணமாக வேலையில் ஏதாவது தவறு செய்யக்கூடும். இதன் காரணமாக நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். சிலர் பதவியை இழக்கும் நிலை வரலாம். சலுகைகளை அதிகம் எதிர்பார்க்க இயலாது. கூடுதல் நேரம் பணிபுரிவதால் மட்டுமே பணத்தேவை பூர்த்தியாகும்.

வியாபாரம்: ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், ஜவுளி, பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உணவு பண்டங்கள், ஸ்டேஷனரி, பேக்கரிபொருட்கள், நகை, பலசரக்கு வியாபாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே இருக்கிற வியாபாரத்தை தக்க வைக்க முடியும். பிற பொருட்களை விற்பவர்கள் ஓரளவு லாபமடைவர்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள், பொறுப்புணர்ந்து செயல்படுவது முக்கியம். மந்தநிலை காரணமாக பணியில் தாமதம் ஏற்பட்டு அதிகாரிகளின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வரும். சிலருக்கு இடமாற்றம், பொறுப்பு மாற்றம் போன்றவை இருக்கும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்குரிய தொகை சரிவர கிடைக்காமல் அவதிப்படும் நிலை வரலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால் தகுந்த ஓய்வு தேவை. தொழில், வியாபாரம் நடத்தும் பெண்களுக்கு அதிக வியாபாரம் இருக்காது.

படிப்பு: இன்ஜினியரிங், ஜர்னலிசம், சட்டம், மருத்துவம், விவசாயம் சார்ந்த துறைகளில் படிக்கும் மாணவர்கள் உயர்ந்த தேர்ச்சி பெற குருகிரக பார்வை அனுகூலமாக உள்ளது. சகமாணவர்கள் சுமூகநட்பு பாராட்டுவர். படிப்புக்காக வங்கிகளில் கடனுதவி கேட்டவர்களுக்கு கிடைத்து விட வாய்ப்பிருக்கிறது.

அரசியல்: அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்களின் ஆதரவை இழக்கக்கூடும். அதை தக்க வைக்க வேண்டுமானால் அளவுக்கதிகமாக செலவாகும். தொழில் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பில்லை. புதியவர்களை நியமிப்பதால் கூடுதல் செலவும் ஏற்படும்.

விவசாயம்: விவசாயிகளுக்கு அளவான மகசூலும், கால்நடை வளர்ப்பில் தாராள பணவரவும் கிடைக்கும். நிலம் தொடர்பான சிரமம் இருந்தால் விலகும். உழவுக்கருவிகள் பழுதாகி பராமரிப்பு செலவுக்கு வழிவகுக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

பரிகாரப் பாடல்

உடையாளை ஒல்கு செம்பட்டு

உடையாளை ஒளிமதி

செஞ்சடையாளை வஞ்சக நெஞ்சு

அடையாளை தயங்கும் நுண்ணூல்

இடையாளை எங்கள் பெண்மான்

இடையாளை இங்கு என்னை இனி

படையாளை உங்களையும்

படையாவண்ணம் பார்த்திருமே!




குருபெயர்ச்சி பலன்கள் -மிதுனம்


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.









மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3

+ கஷ்டம் தீர்ந்தது

- வீண் பழி

நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மிதுனராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசி, ராசிக்கு 3,5ம் இடங்களை பார்க்கிறார்.இந்த குருபெயர்ச்சி கடந்த காலத்தில் இருந்த கஷ்டநிலைமையை மாற்றும். உங்களின் இப்போதைய முயற்சி வெற்றியடைந்து குடும்பத்தில் வளமையும், சந்தோஷமும் நிறைந்திட வழி ஏற்படுத்தி தரும். மனதில் இருந்த தயக்கம் விலகும். பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். இளைய சகோதரர்கள் வாழ்வில் முன்னேறி உங்களுடன் இணக்கமாக செயல்படுவர். புதியவீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு.புத்திரர், பெற்றோர் சொல்கேட்டு நடந்து படிப்பில் முன்னேற்றம் பெறுவர். பூர்வ சொத்தில் வருமானம் அதிகரிக்கும். உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். கடன்களை பெருமளவில் அடைப்பீர்கள். வழக்கு, விவகாரம் தொந்தரவு தராத இனிய வாழ்க்கைமுறை உருவாகும். குருவின் அதிசார காலமான மே முதல் ஜூலை மத்தி வரையில் வீண்பழி உண்டாக வாய்ப்புண்டு. இதையடுத்து வரும் வக்ரகதி காலத்திலும் நவம்பர் வரை மனைவி வழியில் மருத்துவச் செலவு உண்டாக வாய்ப்புண்டு.கணவன், மனைவி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்வர். நண்பர்களிடம் சிறப்பான நட்புறவு இருக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பில் வளர்ச்சியும், முன்னேற்றமும் உண்டு. சுபநிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள்.

தொழில்: கல்வி, நிதிநிறுவனம், ஓட்டல், லாட்ஜ், மருத்துவமனை, சுற்றுலா நிறுவனம், டிராவல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், கட்டுமானப்பொருள், இரும்பு, காகிதம், தண்ணீர் சார்ந்த தொழில் செய்பவர்கள் தாராள லாபம் பெறுவர். மற்றவர்களுக்கும் ஓரளவு லாபமே. பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக கிடைக்கும்.

வேலை: அரசு மற்றும் தனியார்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். சக பணியாளர்கள் அன்புடன் நடந்து கொள்வர். குடும்பத்தேவைகளை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரம்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை, காகிதம், உணவு பண்டங்கள், பர்னிச்சர், ரெடிமேட் ஆடை, மருந்து, பூஜை பொருட்கள், தண்ணீர் சார்ந்த பொருட்கள், பாத்திரம், தானிய வகைகள், விற்பவர்கள், அபரிமிதமான வளர்ச்சி காண்பர். லாபம் அதிகரிக்கும்.சரக்கு வாகனங்களாலும் லாபமே. வியாபாரம் சார்ந்த சங்கங்களில் சிலருக்கு பதவி பொறுப்பு கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு பணிஉயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்ற சலுகைகளை எளிதாகப் பெறுவர். பணியிடத்தில் சுமூகநட்பு இருக்கும். குடும்ப பெண்கள், குடும்பத்தின் எதிர்கால தேவைகளை கணவரின் உதவியுடன் நிறைவேற்றுவர். புத்திரர்களை நல்லவிதமாக வளர்த்து படிப்பில் முன்னேற்றம் பெறச் செய்வீர்கள். தாய்வீட்டு உதவி ஓரளவுக்கு கிடைக்கும். ஆபரண சேர்க்கை உண்டு. தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள், கூடுதல் மூலதனத்துடன் தொழிலை அபிவிருத்தி செய்வர். வியாபாரம் சிறந்து உபரி வருமானம் கிடைக்கும்.

படிப்பு: மருத்துவம், வங்கியியல், சட்டம், விவசாயம், ரசாயனம், இன்ஜினியரிங், இசை, ஆராய்ச்சி, ஆசிரியர் பயிற்சி, இலக்கியம், தத்துவம், ஜானலிசம், கேட்டரிங், அனிமேஷன், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள், தரத்தேர்ச்சி பெறுவர். படிப்புக்கான பணவசதி சீராக இருக்கும். தந்தையுடன் பாசம் அதிகரிக்கும். சுற்றுலா பயண வாய்ப்பு உருவாகி நிறைவேறும். சகமாணவர்களுடன் நட்பு சீராகும்.

அரசியல்வாதி: அரசியல்வாதிகள் ஆர்வமுடன் செயல்படுவர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசு அதிகாரிகள் மனம் உவந்து உதவுவர். பதவிப்பொறுப்பு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். புத்திரர்களுக்கும் அரசியலில் புதிய முகவரி உருவாகும். எதிரிகளின் தொல்லை படிப்படியாக குறையும்.

விவசாயம்: விவசாயிகள், பயிர்வளர்க்க தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெறுவர். மகசூல் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் குறைந்த அளவில் அனுகூலம் ஏற்படும். கூடுதல் நிலம் வாங்க யோகம் உண்டு.

வணங்க வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி.

பரிகாரப் பாடல்

கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை

ஆறங்கம் முதல் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த

பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை

இருந்தபடி இருந்து காட்டி

சொல்லாமல் சொன்னவரை நினையாமல்

நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்

குருபெயர்ச்சி பலன்கள் -கடகம்


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.









புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்

+ ஓரளவு பணவரவு

- சட்ட சிக்கல் வரலாம்

நல்ல எண்ணங்களால் உயர்ந்து நிற்கும் கடகராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி, உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு, 12,2,4 ம் இடங்களை பார்க்கிறார். இந்த குருபெயர்ச்சி உங்கள் வாழ்வில் சில சிரமமான பலன்களை உருவாக்கும் வகையில் உள்ளது. ஆனாலும், குருபகவானின் பார்வைகளை பெறுகிற இடங்களின் வழியாக ஓரளவு நன்மை கிடைக்கும். பணவரவு அதிகம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது. இளைய சகோதரருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். வீடு, வாகன வகையில் தற்போதைய நிலை தொடரும். புத்திரர்கள் உங்கள் சொல்கேட்டு நடப்பர்.

பூர்வ சொத்தில் இடைத்தரகர்களால் வருமானம் குறையும். வாகனங்களை இயக்கும்போது மிதவேகம் அவசியம். நெருப்பு, மின்சாதனங்களை கையாளும் போது கவனம் அவசியம். உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. கவனம். வழக்கு விவகாரம் சாதகமாக இராது. கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படும். நண்பர்களும் உங்களை எதிர்த்து நிற்கும் நிலை வரலாம். வெளிநாடு வேலைவாய்ப்பில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். ஏழரைச் சனி கழிந்து விட்டதால் குருவால் ஏற்படும் சிரமங்களின் தன்மை குறைவாகவே இருக்கும்.

தொழில்: தொழில் சார்ந்த வகையில் இருக்கிற அனுகூலத்தை தக்கவைப்பதே எதிர்கால பாதுகாப்பிற்கு உதவும். வாகனம், மின்சார, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மருந்து, மருத்துவ உபகரணங்கள், இரும்பு, காகிதம், டெக்ஸ்டைல்ஸ் அதிபர்கள், லாட்ஜ், கல்விநிறுவனம், நிதி நிறுவன அதிபர்கள் ஓரளவு லாபம் பெறுவர். மற்றவர்களுக்கு பரவாயில்லை என்ற நிலை உள்ளது. நிர்வாகச்செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

வேலை: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணியில் குளறுபடி காரணமாக ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட வேண்டிய சூழ்நிலை வரும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சலுகைகள் குறைய வாய்ப்பிருக்கிறது. சக பணியாளர்களுடன் விவாதம்கூடாது. சிலருக்கு பணியிட மாற்றம் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் குடும்பத்தில் பணநிலையில் பாதிப்பு வரலாம்.

வியாபாரம்: நகை, ஜவுளி, கட்டுமானப் பொருட்கள், மளிகை, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்து, ரப்பர், தோல் பொருட்கள், எண்ணெய் வித்து, தண்ணீர் சார்ந்த பொருட்கள், கண்கண்ணாடி, இறைச்சி, மீன் வியாபாரிகள் ஓரளவே லாபமடைவர். பழைய கடன் வசூலாகும். சரக்கு வாகனத்தின் மூலமாக உபரிபணவரவு கிடைக்கும். எவருடனும் புதிய தொழில்களில் கூட்டுசேரவேண்டாம்.

பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும், சலுகைகளை அவ்வளவு எளிதில் பெற இயலாது. குடும்பப் பெண்கள், வீட்டுச் செலவுக்கு திண்டாட வேண்டியிருக்கும். மாங்கல்ய ஸ்தானத்தில் குருபகவான் இருப்பதால் கணவரின் உடல்நலம் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் சுமாரான வியாபாரமும், குறைந்த லாபமும் பெறுவர். தங்க நகைகளை இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது. தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும்.

படிப்பு: மருத்துவம், சிவில், ஏரோநாட்டிக்கல், மரைன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் படிப்பு, பயோ கெமிஸ்டிரி, விவசாயம், கேட்டரிங், சட்டம் படிக்கும் மாணவர்கள், குருபகவானின் அனுகூல பார்வையினால் உயர்ந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறை மாணவர்கள் இவர்களை விட சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். தந்தையிடம் கருத்து வேறுபாடு வரும்.

அரசியல்: அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் நடக்கும். புத்திரர்களின் செயல்பாடு அரசியல்பணியில் பெரிய அளவில் மாற்றத்தைத் தராது. எதிரிகளிடமும், வம்பு வழக்குகளிலும் முன்யோசனை நடவடிக்கை அவசியம்.

விவசாயம்: விவசாயிகள் பயிர்வளர்ப்பில் உரிய பாதுகாப்பு நடைமுறையை கவனமுடன் பின்பற்ற வேண்டும். கால்நடை பெருக்கமும், அதன் மூலம் கூடுதல் பணவரவும் கிடைக்கும். சொத்து தொடர்பான ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது.

வணங்க வேண்டிய தெய்வம்: லட்சுமி தாயார்.

பரிகாரப் பாடல்

உலகளந்த திருமாலின்

வலமார்பில் உறைபவளே

உலகமெல்லாம் காத்துநிற்கும்

தேவி மகாலட்சுமியே!

உலகெங்கும் ஆட்சி செய்யும்

அஷ்ட லட்சுமியே! நிலையான

அருள் செல்வம் அருள்பவளே!

உன் பாதம் சரணடைந்தோம்

நலம் தருவாய் அம்மா!


குருபெயர்ச்சி பலன்கள் -சிம்மம்


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.









மகம், பூரம், உத்திரம் - 1

+ ஏழரையின் தாக்கம் குறையும்

- அதிகாரிகளுடன் மோதல்

சோதனைகளையும் சாதகமாக மாற்றும் திறனுடைய சிம்ம ராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 3,5,7 ம் இடங்களைப் பார்க்கிறார். இந்த குரு பெயர்ச்சி உங்களின் செயல்பாடுகளில் வெற்றியைத் தரும். ஏழரைச் சனியினால் ஏற்பட்டு வரும் கெடு பலன்களை குறைத்து ஆறுதல் தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். இளைய சசோதரர்கள் ஓரளவுக்கு அனுசரணையாக நடந்து கொள்வர். வீட்டில் தேவையான வளர்ச்சிமாற்றம் செய்வீர்கள். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் தகுதி, திறமையை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தாய்வழி உறவினர்கள் அன்புடன் நடந்து கொள்வர். எதிரிகளால் ஏற்படும் துன்பம் கட்டுக்குள் இருக்கும். உடல்நலக்குறைவு சரியாகி விடும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

மின்சாரம், பயணம் தொடர்பான இனங்களில் கவனமாக இருக்க வேண்டும். மூத்த சகோதரர்கள், உங்கள் பணநிலை வளர உதவி செய்வர். வெளிநாடு வேலைவாய்ப்பில் அனுகூலமும், தாராள பணவரவும் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கு பணச்செலவு அதிகரிக்கும்.

தொழில்: தொழில்சார்ந்த வகையில், கூடுதல் முன்னேற்றமும், தாராள பணவரவும் கிடைக்கும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், பீங்கான், பிளாஸ்டிக், பால்பொருட்கள், இசைக்கருவி, அழகுசாதனப்பொருட்கள், பட்டாசு, தீப்பெட்டி, சோப்பு, இரும்பு, காகிதம், தோல் தொழில் சார்ந்தவர்கள் கூடுதல் உற்பத்தியால் ஆதாயம் காண்பர். தொழில் சார்ந்த அமைப்புகளில் கவுரவப்பதவி சிலருக்கு கிடைக்கும். உபதொழில் துவங்கவும் வாய்ப்பு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர்.

வேலை: அரசு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இதுவரை கிடைக்காமல் இருந்த சலுகைகள் வந்து சேரும். அதிகாரிகளுடன் அவ்வப்போது கருத்து மோதல் ஏற்பட வாய்ப்புண்டு. அவர்களிடம் அடங்கிச் செல்வது நல்லது. சகபணியாளர்களுடன் நல்அன்பு வளரும்.

வியாபாரம்: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், நகை, ஜவுளி, மளிகை, அடுப்பு, பட்டாசு, பர்னிச்சர், அழகுசாதனப்பொருட்கள், காகிதம், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், கட்டுமானப் பொருள், சோப்பு வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் விற்பனையும், சேமிக்கும் அளவு உபரி வருமானமும் காண்பர். சரக்கு வாகனத்தின் மூலமாகவும் பணவரவு கிடைக்கும். சந்தையில் இருந்த போட்டி குறையும். புதிய கிளை துவங்கவும் அனுகூலம் உண்டு.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள், சுறுசுறுப்பாகவும், விவேகத்துடனும் செயல்பட்டு பணி இலக்கை பூர்த்தி செய்வர். நிர்வாகத்திடம் நன்மதிப்பு கிடைக்கும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், பணக்கடன் போன்றவை பெறலாம். குடும்பப் பெண்கள், கணவரின் அன்பையும், சீரான பொருளாதார வசதியும் பெற்று குடும்பத்தை சந்தோஷ பாதையில் வழி நடத்துவர். ஆபரணச் சேர்க்கை உண்டு. தாய்வழி உறவினர்களுக்கு உரிய மரியாதையும், தேவையான உதவியும் புரிவீர்கள். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். வியாபாரம் அதிகமாகி லாபம் பணவரவு அதிகரிக்கும்.

படிப்பு: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மரைன், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், சினிமா தொழில்நுட்பம், மாடலிங், நிதி மேலாண்மை, நிர்வாகப் படிப்புகள், கேட்டரிங், கம்ப்யூட்டர் அனிமேஷன், தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர்கள் ஆர்வமுடன் படித்து உயர்ந்த தேர்ச்சி பெறுவர். படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு சீக்கிரம் வேலை கிடைக்கும். சக மாணவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். பெற்றோரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும்.

அரசியல்: அரசியல்வாதிகள் புதிய திட்டங்களை திறம்பட வகுத்து லட்சியத்துடன் செயல்புரிந்து வெற்றி இலக்கை அடைவர். ஆதரவாளர்களின் உதவியுடன் புதிய பதவிப்பொறுப்புகளை பெறுவீர்கள். புத்திரர்களும் அரசியல்பணி சிறக்க உதவுவர். எதிரிகளே வியப்படையும் வகையில் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

விவசாயம்: விவசாயிகளுக்கு அதிக மகசூலும், உபரி பணவருமானமும் வந்து சேரும். கால்நடை வளர்ப்பிலும், முன்னேற்றம் உண்டு. நிலம் தொடர்பான சிரமம் இருந்தால் விலகும்.

வணங்க வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரப் பாடல்

புத்தியும் பலமும் தூய புகழோடு

துணிவும் நெஞ்சில் பக்தியும்

அச்சமிலாப் பணிவும் நோய் இல்லா

வாழ்வும் உத்தம ஞானச்சொல்லின்

ஆற்றலும் இம்மை வாழ்வில்

அத்தனை பொருளும் சேரும்

அனுமனை நினைப்பவர்க்கே!


குருபெயர்ச்சி பலன்கள் -கன்னி


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.









உத்திரம் - 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2

+ தம்பதியர் ஒற்றுமை

- உடல்நலக்குறைவு

எந்த சமயத்திலும் உஷாராக இருக்கும் கன்னி ராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 10, 12, 2ம் இடங்களை பார்க்கிறார். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சில கஷ்டங்களைத் தரும் வகையில் உள்ளது. இருந்தாலும், தொழில் ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் தொழிலில் இடைஞ்சல் இருக்காது. பணவரவு ஓரளவுக்கு இருக்கும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்காது. வீட்டில் பாதுகாப்பு வசதியை மேம்படுத்துவது நல்லது. பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் உண்டாகும். புத்திரர்கள் உங்களுடன் ஒத்துழைப்பர். அவர்களது படிப்பு சுமாராக இருக்கும். உங்களுக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவு அதிகரிக்க வாய்ப்புண்டு.

கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். நண்பர்களின் உதவி கிடைப்பதற்குரிய அறிகுறி இல்லை. நெருப்பு, மின்சாரம் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிக கவனம் வேண்டும். சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். வெளிநாடு வேலைவாய்ப்பில் முன்னேற்றமும், எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும்.

தொழில்: கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், விவசாய இடுபொருட்கள், இரும்பு, எண்ணெய், காகிதத் தொழில் செய்பவர்கள், கல்வி, நிதிநிறுவனம், லாட்ஜ், ஓட்டல் நடத்துபவர்கள் சுமாரான லாபம் பெறுவர். இயந்திரங்களை பராமரிப்பதிலும், பணியாட்கள் வகையிலும் கூடுதல் செலவு ஏற்படும்.

வேலை: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணியில் தேவையற்ற தடங்கல் ஏற்படும். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகைகளில் ஒரு சில மட்டுமே கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வது எதிர்காலத்திற்கு நல்லது.

வியாபாரம்: ஸ்டேஷனரி, அழகுசாதனப் பொருட்கள், கட்டுமானப்பொருட்கள், நகை, ஜவுளி, பலசரக்கு, எண்ணெய், தென்னை, பனை பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்து, ஜவுளி, விளையாட்டுசாதனங்கள், காகித வியாபாரிகள் கடும் போட்டியைச் சந்திப்பர். இருப்பினும் ஓரளவு லாபம் கிடைக்கும். பொருட்களை ரொக்கத்திற்கு விற்பது நல்லது. சரக்கு வாகன பராமரிப்பு செலவு கூடும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை நிறைவேற்றுவதில் சிறு தடைகளை எதிர்கொள்வர். சலுகைகள் பெறுவதிலும் இடைஞ்சல் இருக்கும். இந்த காலகட்டத்தில் பொறுமை மிகத் தேவை. குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு சிரமப்பட வேண்டிய சூழல் இருக்கும். குழந்தைகளின் ஒத்துழைப்பு காரணமாக மனநிறைவு இருக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் சுமாரான வியாபாரமும், அதற்கேற்ப லாபமும் பெறுவர். பாக்கிப் பணம் வசூலாகும்.

படிப்பு: ஓட்டல் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங், கேட்டரிங், அனிமேஷன், வங்கியில், தணிக்கையில், சினிமா தொழில்நுட்பம், மாடலிங், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், மரைன், ஏரோநாட்டிக்கல், மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங், ரசாயனம், பவுதிகம், மருத்துவம், விவசாய மாணவர்கள், கூடுதல் கவனத்துடன் படிப்பதால் மட்டுமே தேற முடியும். படிப்புக்கான பணவரவு ஓரளவுக்கு கிடைக்கும். அனுபவம் இல்லாத சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. சக மாணவர்களுடன் சுமூக நட்பு திகழும்.

அரசியல்: அரசியல்வாதிகள் ஆதரவாளர்களிடம் பெற்ற நற்பெயரை இழக்க வேண்டி வரலாம். எதிரிகளின் செயல்களால் மனவருத்தம் கொள்வீர்கள். புத்திரர்களை அரசியல்பணிக்கு பயன்படுத்தி அதன் மூலமும் சிக்கல் வரலாம். கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளின் தயவைப் பெறுவதிலும் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.

விவசாயம்: விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். சாகுபடி செலவுக்கு கடன் வாங்க வேண்டி வரலாம். கால்நடை வளர்ப்பினால் ஓரளவு பயன் உண்டு. நில விவகாரங்களில் சட்டச்சிக்கல் தொடரும்.

வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சியம்மன்

பரிகாரப் பாடல்

பூத்தவளே, புவனம் பதினான்கையும்

பூத்த வண்ணம் காத்தவளே!

பின் கரந்தவளே! கறைக்கண்டனுக்கு

மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு

இளையவளே! மாத்தவளே!

உன்னையன்றி

மற்றோர் தெய்வம் வந்திப்பதே!


குருபெயர்ச்சி பலன்கள் -துலாம்


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.









சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3

+ வீடு வாங்கலாம்

- எதிரிகள் ஜாக்கிரதை

தர்மம் தவறாமல் நடக்க விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 9,11 மற்றும் ராசியை பார்க்கிறார்.

இந்த குருபெயர்ச்சி உங்கள் வாழ்வில் பல முன்னேற்ற பலன்களை அள்ளித்தரும். மனதில் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். குருவின் பார்வை பெறுகிற ஸ்தானங்கள் பாக்கியங்களை அள்ளித்தருவதாகவும், திருமணம், புதுவீடு குடி புகுதல் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளை நடத்தி வைக்கும் நிலையிலும் உள்ளது. பேச்சில் அன்பு கூடும்.

இளைய சகோதரர்கள், உங்களின் சொல்லை வேதமென கருதி நடந்து கொள்வர். வீடு, வாகனத்தில் வளர்ச்சி மாற்றம் செய்து மகிழ்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டமும் நிறைவேறும்.தாய்வழி உறவினர்கள் விரும்பி வந்து சொந்தம் கொண்டாடுவர். பூர்வ சொத்தின் வழியாக அதிக வருமானம் கிடைக்கும். புத்திரர்களுக்கு படிப்பில் உயர்ந்த தேர்ச்சியும், பாராட்டு, விருதும் கிடைக்கும். எதிரிகள் உங்களிடம் பாசத்துடன் நடப்பது போல் நடித்து கவிழ்க்க நினைக்கலாம். கவனமாக இருங்கள். உடல்நலம் பலமுடன் இருக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பண

வரவு நன்றாக இருக்கும் என்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை வளரும். நண்பர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். கடந்த காலங்களில் பெறவேண்டிய ஆதாய பலன்கள் தேடி வரும். வாழ்க்கை வசதி அதிகரிக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பிலும் அனுகூலம் உண்டு.

தொழில்: தொழில்சார்ந்த வகையில் உங்களின் எதிர்பார்ப்பு பெருமளவில் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, காகிதம், தோல், கட்டுமானப்பொருள், பிளாஸ்டிக், தண்ணீர் சார்ந்த தொழில் செய்வோர், ரியல் எஸ்டேட், டிராவல் ஏஜென்சி, லாட்ஜ், மருத்துவமனை சார்ந்த தொழில் செய்பவர்கள் தாராள பணவரவு காண்பர். மற்றவர்களுக்கும் லாபத்திற்கு பஞ்சமில்லை. பணியாளர்கள் நம்பிக்கையுடன் பணிபுரிந்து நிறுவனத்திற்கு கூடுதல் நற்பெயர் உருவாக்குவர். வேலை: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறும் வகையில் பணியாற்றுவர். பதவி உயர்வு, சம்பள உயர்வு, விரும்பிய இடத்துக்கு மாற்றம் ஆகிய சலுகைகள் எளிதாக கிடைக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு நல்குவர்.

வியாபாரம்: ஜவுளி, நகை, பலசரக்கு, கண்கண்ணாடி, தண்ணீர் சார்ந்த பொருட்கள், அழகுசாதனங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அலங்காரப் பொருள், வலை, மீன், தானியம், ரப்பர், தோல் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள், அபரிமிதமான லாபம் பெறுவர். புதிய கிளைகள் துவங்கும் முயற்சி நிறைவேறும். சரக்கு வாகனங்களால் நிறைந்த பணவசதி கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள், அதிகாரிகளிடம் நற்பெயர் பெறும் வகையில் பணி செய்வர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை எளிதாக கிடைக்கும். குடும்பப் பெண்கள், கணவரின் நல்அன்பை பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பர். நகை, ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகமுண்டு. புத்திரப்பேறு தாமதமானவர்களுக்கு சுபபலன் உண்டு. தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பர். லாபவிகிதம் அதிகமாகும். அபிவிருத்தி பணிகள் சிறப்புற நிறைவேறும்.

படிப்பு: மருத்துவம், சட்டம், விவசாயம், ஏரோநாட்டிக்கல், மரைன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள், படிப்பில் சிறந்துசாதனை நிகழ்த்துவர். மற்ற துறையினரும் சிறப்பாகவே படிப்பர். படிப்பு தொடர்பான கூடுதல் பயிற்சிக்காக வெளியூர்களுக்கு சென்று பயனடைவீர்கள்.

அரசியல்: அரசியல்வாதிகள் சமூகப்பணியில் கூடுதல் முன்னேற்றம் காண்பர். ஆதரவாளர்கள் உங்கள் செயல்களுக்கு மதிப்பு தருவர். அதிகாரிகளிடமும் ஆதரவு கிடைக்கும். புத்திரர்களும், அரசியலில் பிரகாசிக்க நல்வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயம்: விவசாயிகளுக்கு மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் உண்டு. கூடுதல்நிலம் வாங்க யோகம் வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரப் பாடல்

அல்லல் போம் வல்வினை போம்

அன்னை வயிற்றிற் பிறந்த

தொல்லை போம் போகாத்துயரம்

போம்- நல்ல குணமதிகமாம்

அருணைக் கோபுரத்தில்

வீற்றிருக்கும் கணபதியை

கை தொழுதக் கால்.


குருபெயர்ச்சி பலன்கள் -விருச்சிகம்


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.









விசாகம் 4, அனுஷம், கேட்டை

+தொழிலில் வளர்ச்சி

- உறவினர்களுடன் பிரச்னை

நேர்மையான செயல்பாடு நிறைந்த விருச்சிக ராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு நான்காம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 8,10,12 ம் இடங்களை பார்க்கிறார். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சில சிரமமான பலன்களைத் தரஉள்ளது. இருப்பினும் குருவின் பார்வை பெறுகிற ஸ்தானங்களில் இருந்து தேவையான ஓரளவு பலன் பெறுவீர்கள். மனதில் நம்பிக்கை குறைய வாய்ப்புண்டு. மனதிடத்தை வளர்க்கும் பயிற்சியை மேற்கொண்டால் வெற்றிக்கனியைப் பறிக்கலாம். பேச்சால் குடும்பத்திலும், வெளியிடங்களிலும் பிரச்னை வரும். இளைய சகோதரர்களுடன் தேவையான விஷயங்களில் கலந்தாலோசனை செய்து கொண்டால் பரஸ்பரம் ஒற்றுமை அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் புதிதாக பராமரிப்பு செய்ய முயற்சிக்க வேண்டாம். தாய்வழி உறவினர்கள் எதையாவது எதிர்பார்த்து வருவார்கள். எதிரிகள் உங்களது கவனக்குறைவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிடுவர். உடல் நலம் தொடர்பான சில பிரச்னைகளும் மருத்துவச்செலவை உயர்த்தும். வழக்கு விவகாரங்களில் சமரசமாக சென்று விடுவது தேவையற்ற பிரச்னைகளைக் குறைக்கும்.இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், பணவரவில் பாதிப்பு இராது. புத்திரர்களும், பெற்றோரின் உணர்வுகளை புரிந்து நடந்து தம்மால் ஆன உதவிபுரிவர். கணவன், மனைவி குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றுமையுடன் செயல்படுவர். ஆனால், நண்பர்களிடம் அபிப்ராய பேதம் உருவாகும்.

தொழில்: குருவின் பார்வையால் தொழில் அபரிமிதமான முன்னேற்றம் பெறும். வாகனம், தீப்பெட்டி, பட்டாசு, இரும்பு, காகிதம், மருத்துவ உபகரணங்கள், மருந்து, மின்சாதனங்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள், கல்குவாரி, மரஅறுவை மில், ரியல் எஸ்டேட் தொழில், மலைத்தோட்டபயிர் உற்பத்தி செய்பவர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்துவர். தொழில் அபிவிருத்தியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதே சமயம் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். கிட்டங்களிகளில் கடும் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்துங்கள். பொருட்களுக்கு சேதம் வரலாம்.

வேலை: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணியில் குறுக்கிடும் தடைகளை உறுதியான மனதுடன் கடந்திடுவர். சக பணியாளர்கள் அன்புடன் நடந்து கொள்வர். சலுகைகள் எதிர்பார்த்த அளவு கிடைக்கும். திடீரென இடமாற்றம் வந்து பிரச்னைகளை உருவாக்கும். வியாபாரம்: நகை, ஜவுளி, பலசரக்கு, தானியங்கள், மருந்து, மருத்துவ உபகரணம், இறைச்சி, பயிர் வகைகள், காய், கனி, பூ, பர்னிச்சர், விவசாய இடுபொருட்கள், மின்சார உபகரணங்கள், பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் கடும் போட்டியை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் புதிய வாடிக்கையாளர்களின் வரவால் லாபத்திற்கு குறைவிருக்காது. சரக்கு வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் சில சிரமங்களுக்கு ஆளாகும் வாய்ப்புண்டு. நிர்வாகத்திடம் கேட்ட சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு ஓரளவே பணம் கிடைப்பதால், சில தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவர். தாய் வழியில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்களுக்கு அதிக பிரச்னையில்லை. தொழில் ஓரளவு நன்றாகவே நடக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டு.

படிப்பு: விவசாயம், மருத்துவம், ஓவியம், சினிமாதொழில்நுட்பம், சிவில், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜினியரிங், சட்டம், பயோகெமிஸ்ட்ரி துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் மிக நன்றாகப் படிப்பர். மற்ற துறைகளில் படிப்பவர்களுக்கும் படிப்பில் பாதிப்பு இராது. ஆசிரியர், பெற்றோர், உறவினர்களிடம் பாராட்டு, பரிசு பெறுவீர்கள். இறுதி ஆண்டை முடிப்பவர்களுக்கு குருவருளால் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு.

அரசியல்: அரசியல்வாதிகளுக்கு சொந்த வேலை அதிகரிக்கும். இதனால் ஆதரவாளர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். எதிரிகளிடம் மோதல் போக்கால் மனம் சஞ்சலப்படும். பணவரவு திருப்திகரமாகும். வெளியூர் பயணம் இனிய

அனுபவங்களை பெற்றுத்தரும்.

விவசாயம்: விவசாயிகள் சுமாரான மகசூல் பெறுவர். கால்நடைகளால், நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. புதியநிலம் வாங்கும் முயற்சியில் பத்திரங்கள் தொடர்பான பிரச்னை வரலாம். கவனமாக வாங்கவும். நிலம் தொடர்பான சட்ட பிரச்னைகளும் இழுத்தடிக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரப் பாடல்

மூவிரு முகங்கள் போற்றி

முகம் பொழி கருணை போற்றி

யாவரும் துதிக்க நின்ற

ஈரறு தோள் போற்றி அன்னாள்

சேவலும் மயிலும் போற்றி

திருக்கை வேல் போற்றி! போற்றி!!

குருபெயர்ச்சி பலன்கள் -தனுசு


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.









மூலம், பூராடம், உத்திராடம் 1

+ உறவினர் ஒத்துழைப்பு

- சுமாரான பணநிலை

நினைத்ததை முடிக்கும் ஆற்றல் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 7,9,11-ம் இடங்களை பார்க்கிறார். ஏற்கனவே சனியின் தாக்கமும் இருக்கும் வேளையில், இந்த குருபெயர்ச்சியும், சில எதிர்மறை பலன்களை தரும் வகையில் உள்ளது. இருப்பினும் குருவின் பார்வை பெறுகிற நட்பு பிதா, பாக்ய, ஆதாய ஸ்தானங்களின் வழியாக ஓரளவு பலன் பெறுவீர்கள். பேச்சில் கடுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் நற்பெயர் பெற இயலாது. வீடு, வாகன வகையில் புதிதாக வசதி செய்ய நினைத்தால், பணநிலை ஒத்துழைக்காது. இருப்பதைத் தக்க வைத்தாலே போதும். வாகனம் ஓட்டும்போது மிதவேகம் அவசியம். புத்திரர்கள் நன்றாகப் படிப்பர். சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். பூர்வ சொத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். பிறருக்காக எந்தவகையிலும் பொறுப்பு ஏற்கக்கூடாது. எதிரிகளிடம் இருந்து விலகுவது நல்லது.

கணவன், மனைவி அன்புடன் நடந்து குடும்பநலம் பேணுவர். நண்பர்களிடம் இணக்கமான நட்பு இருக்கும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பில் அதிக வருமானம் கிடைக்காது. வெளிநாட்டுக்குச் செல்ல விரும்புவோருக்கும் அவ்வளவு அனுகூலமான சூழல் இல்லை.

தொழில்: தொழில் சார்ந்த வகையில் அக்கறையுடன் செயல்படுவதால் மட்டுமே இருப்பதையாவது தக்க வைக்கலாம். ஜவுளி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பர்னிச்சர், கட்டுமானப்பொருள், காகிதம், வாகனம், எண்ணெய் ஆலை, கல்வி, நிதிநிறுவனம், அச்சகம், டிராவல் ஏஜன்ஸி, ரியல் எஸ்டேட், லாட்ஜ், ஓட்டல், ஆஸ்பத்திரி நடத்துவோருக்கு சுமாரான லாபமே கிடைக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு ஓரளவுக்கு பரவாயில்லை. பணியாளர்களிடம் இனிய அணுகுமுறையுடன் நடந்து கொள்வதால் பொருள் உற்பத்தி அதிகரிக்கும்.

வேலை: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், கவனக்குறைவு காரணமாக அதிகாரிகளின் கண்டனத்துக்கு ஆளாகலாம். ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் போன்றவை ஏற்படவும் வாய்ப்புண்டு. சகபணியாளர்கள் நட்புடன் இருப்பர். சலுகைகள் ஓரளவுக்கு கிடைக்கும்.

வியாபாரம்: ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமான பொருட்கள், ஜவுளி, பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், புத்தகம், பலசரக்கு, எண்ணெய், வாசனை திரவியம், தோல், பிளாஸ்டிக் பொருள் விற்பவர்களுக்கு எதிர்பார்த்த வளர்ச்சியும், பணவரவும் கிடைக்கும். மற்றவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். சரக்கு வாகன பராமரிப்புச் செலவு கூடும். பழைய கடன்கள் வசூலாகும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கவனச்சிதறல் காரணமாக அதிகாரிகளின் கண்டனக்கணைக்கு ஆளாவர். சலுகைகளை கேட்டுப்பெறுவதில் நிதானம் நல்லது. விண்ணப்பித்த கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு பணியிட மாற்றம் வரும். குடும்பப் பெண்கள், கணவரின் அன்பையும், பாசத்தையும் நிறைவாகப் பெறுவர். குடும்பச்செலவுக்கு சிரமமாக இருக்கும். தந்தைவழி உறவினர்கள் உதவி செய்வர். நகைகளைப் பாதுகாப்பதில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் கடன் வாங்க வேண்டிய நிலை வந்தாலும், அதை அடைக்குமளவு வியாபாரம் இருக்கும். பொருட்களை ரொக்கத்திற்கு விற்பனை செய்வது நல்லது.

படிப்பு: வணிகவியல், வங்கியியல், ஆடிட்டிங், தகவல் தொழில்நுட்பம், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மருத்துவம், கேட்டரிங், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, இதழியல் துறை மாணவர்கள் சுமாராக படிப்பர். மற்றவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் படித்தால் மட்டுமே தரத்தேர்ச்சி பெற இயலும். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணை புரிவர். தாயின் கண்டிப்பையும், தந்தையின் அரவணைப்பையும் பெறுகிற கிரகநிலை உள்ளது. படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும்.

அரசியல்: அரசியல்வாதிகள் நல்லமுறையில் சேவை புரிந்தாலும், உங்கள் செயல்களை குறைசொல்வதற்கு சிலர் வருவர். ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பணம் அதிகமாகச் செலவாகும். வழக்கு விவகாரங்கள் தொல்லை கொடுக்கும். விவசாயம்: விவசாயிகள் பயிர்வளர்ப்பில் உரிய பாதுகாப்பு நடைமுறையை மேற்கொள்வது அவசியம். கால்நடை வளர்ப்பு எதிர்பார்த்த பணவரவைத் தரும். மகசூல் சுமாராகவே இருக்கும். சொத்து ஆவணங்களை பிறரிடம் ஒப்படைக்க கூடாது.

வணங்க வேண்டிய தெய்வம்: கிருஷ்ணர்

பரிகாரப் பாடல்

உலகம் உண்ட பெருவாயா!

உவப்பில் கீர்த்தி யம்மானே!

நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி

நெடியாய் அடியேன் ஆருயிரே!

திலதம் உலகுக்காய் நின்ற

திருவேங்கடத்து எம்பெருமானே!

சூழத்தொல்லடியேன் உன் பாதம்

கூறுமாறு கூறாயே!

குருபெயர்ச்சி பலன்கள் -மகரம்


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.









உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2

+ கோடி நன்மை

- நற்குணமே பலவீனம்

மனசாட்சிக்கு முக்கியத்துவம் தரும் மகர ராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 6,8,10ம் இடங்களை பார்க்கிறார். அஷ்டமத்து சனி, ஜென்ம ராகு, ஜென்ம குரு என்ற மோசமான நிலையில் சிக்கியிருந்த நீங்கள், சிறையில் இருந்து விடுபட்டது போல, இந்த குரு பெயர்ச்சி காலத்தில் சுதந்திர உணர்வு பெறுவீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். உங்களின் பேச்சை பிறர் மதித்து கேட்கும் நன்னிலை உண்டு. உடன்பிறந்தவர்கள் பாசத்துடன் நடந்து கொள்வர். அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

வீட்டிற்கு வரும் நல்லவர்கள், உறவினர்களின் வருகையால் சந்தோஷம் நிறைந்திடும். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் சிறப்பாக படிப்பதுடன் ஒழுக்கமாகவும் நடந்து கொள்வர். பூர்வ சொத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிரிகளின் தொந்தரவு குறையும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமை மனதுடன் நடந்து குடும்பத்தின் நன்மதிப்பை உயர்த்துவர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். நண்பர்களும் உதவி செய்வர். நீங்கள் எவ்வளவு தான் நல்லவிதமாக நடந்துகொண்டாலும், அதை பலவீனமாகக் கருதி உங்களைத் தொல்லை செய்யும் உறவினர்களைக் கண்டு எரிச்சல் ஏற்படும். வெளிநாடு வேலை வாய்ப்பில் முன்னேற்றமும், எதிர்பார்ப்பும் நிறைவேறும்.

தொழில்: தொழில் சார்ந்த வகையில் அபரிமிதமான வளர்ச்சியும், தாராள பணவரவும் கிடைக்கும். எலக்ட்ரிக்கல். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், டெக்ஸ்டைல்ஸ், கட்டுமானப்பொருள், தோல், பிளாஸ்டிக், குளிர்பானம், இரும்பு, வாகனம் சார்ந்த தொழில் செய்பவர்கள் வளர்ச்சியும் மிக அதிக லாபமும் பெறுவர். மருத்துவமனை, பால்பண்ணை, அரிசி, மாவு ஆலை, டிராவல்ஸ், ஓட்டல், லாட்ஜ், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் தாராள லாபம் கிடைக்கும். மற்றவர்கள் இவர்களை விட நல்ல லாபம் அடைவர். அபிவிருத்தி பணிகள் நிறைவேறும். கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டம் சரியாகும்.

வேலை: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர். சக பணியாளர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தாராளமான வருமானம் கிடைக்கும்.

வியாபாரம்: வாகன உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஜவுளி,நகை, பலசரக்கு, பால் பொருட்கள், மீன், அழகுசாதனப் பொருட்கள், பாத்திர வியாபாரிகள் தாராள விற்பனையும் கூடுதல் லாபமும் கிடைக்கப் பெறுவர். போட்டி பெருமளவில் குறைந்துவிடும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் வேகமாகப் பணிகளை முடித்து அதிகாரிகளிடம் "சபாஷ்' பெறுவர். பதவி உயர்வு மற்றும் சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் அன்றாடப் பணிகளை திறம்பட நிறைவேற்றுவர். மாங்கல்ய ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் கணவரின் உடல்நலமும், ஆயுள் பலமும் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை கிடைக்கும். தொழில் வியாபாரம் நடத்தும் பெண்கள் அதிக வியாபாரமும், சேமிக்கும் அளவில் தாராள பணவரவும் காண்பர். போட்டி குறையும்.

படிப்பு: மருத்துவம், இதழியல், கேட்டரிங், பாங்கிங், மரைன், ஏரோநாட்டிக்கல், கம்ப்யூட்டர் அனிமேஷன், மூலிகை வளர்ப்பு, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிகல், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், ஓட்டல் மேனேஜ்மென்ட் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு சாதகமான நிலை உள்ளது. பெற்றோரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும்.

அரசியல்: அரசியல்வாதிகள் குழப்பங்கள் நீங்கி உற்சாகத்துடன் பணி புரிவர். ஆதரவாளர்கள், நல் எண்ணத்துடன் நடந்து கொள்வர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். எதிரிகள் விலகிச்செல்வர். வாழ்க்கைத் தரம் உயரும்.

விவசாயம்: விவசாயிகளுக்கு சாகுபடி செலவுக்கு தட்டுப்பாடு வராது. மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பினாலும் பலன் ஏற்படும். நிலம் தொடர்பான சிரமம் இருந்தால் சரியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்: நடராஜர்

பரிகாரப் பாடல்

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி

மேலவர்க்கும் மேலாகி நின்றாய போற்றி

கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி

இமையாது உயிராய் இருந்தாய் போற்றி

கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி! போற்றி!

குருபெயர்ச்சி பலன்கள் -கும்பம்


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.









அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3

+ உடன்பிறந்தவர்களால் நன்மை

- பணவரவில் மந்தம்

தியாக மனோபாவத்துடன் செயல்படும் கும்பராசி அன்பர்களே!

குருபகவான் மகர ராசியிலிருந்து பெயர்ச்சியாகி உங்களின் ராசியாகிய கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு பூர்வ புண்ணிய, புத்திர, சப்தம, பிதா பாக்ய ஸ்தானங்களை பார்க்கிறார். ஜென்ம குரு என்கிற இந்த நிலை உங்கள் வாழ்வில் சில அசவுகரியங்களை ஏற்படுத்தும். ஏற்கனவே அஷ்டமச் சனியின் பிடியிலும் சிக்கியிருக்கிறீர்கள். இருப்பினும் குருவின் பார்வை பெறுகிற இடங்களின் வழியாக ஓரளவு பலன் பெறுவீர்கள். மனதில் குழப்பமும், செயலில் மந்தநிலையும் இருக்கும். உங்கள் குடும்பநலனில் அக்கறை உள்ள உறவினர், நண்பர்களின் ஆலோசனை மற்றும் உதவியுடன் செயல்களை சீரமைத்துக் கொள்ளலாம். மற்றவர்களை நம்பக்கூடாது. எவ்வளவு பாடுபட்டாலும் பணவரவு மந்தமாகவே இருக்கும். உடன்பிறந்தவர்கள் வளர்ச்சி பெற்று உங்களுக்கும் உதவுவர்.

வீடு, வாகன வகையில் பெரிய அளவிலான வளர்ச்சி இராது. இதுவரை சேஷ்டை செய்த புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடக்கும் சூழ்நிலை உருவாகும். அவர்களுக்கு ஆன்மிக அறிவைப் புகட்ட இது உகந்த நேரம். இதனால் எதிர்காலத்தில் அவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர வழி பிறக்கும். அவர்களது படிப்பு நன்றாக இருக்கும். பூர்வ சொத்தில் வருமானம் ஓரளவு அதிகரிக்கும். எதிரிகளிடம் இருந்து விலகிப்போவதால் பலவிதத்திலும் நன்மை பெறலாம். உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவச் செலவுக்கு இடமுண்டு. கணவன், மனைவி குருபகவானின் நல்லருள் பெற்று ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். அறிவும், உதவும் மனப்பான்மையும் கொண்ட புதியவர்களின் நட்பைப் பெறுவீர்கள். ஆபத்தான இடங்களுக்குச் செல்லக்கூடாது. மின்சாரத்தைக் கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டி வரும். வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு குறைந்த அனுகூலமே உண்டு.

தொழில்: தொழில் சார்ந்த வகையில் இருப்பதைப் பாதுகாத்தாலே போதுமென்ற நிலையே இருக்கிறது. ரியல் எஸ்டேட், மருத்துவமனை, திருமண மண்டபம், ஓட்டல், லாட்ஜ், நிதிநிறுவனம் நடத்துவோர், வாகனம், டெக்ஸ்டைல்ஸ், தோல், காகிதம், பிளாஸ்டிக், குளிர்பானம், இரும்பு சார்ந்த தொழில் செய்வோர் சில மாற்றங்களைச் செயல்படுத்துவதன் மூலமே ஓரளவு லாபம் பெறலாம். மற்ற தொழில் செய்வோருக்கும் குறைந்த லாபமே கிடைக்கும். நண்பர்கள் தொழில்நுட்ப உதவிகளை மனமுவந்து உதவுவர்.

வேலை: அரசு, தனியார்துறையில் பணிபுரிபவர்கள் மிகக் கவனமாக செயல்படாவிட்டால் ஏதாவது குளறுபடி ஏற்பட்டு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு மனதுடன் நடந்து கொள்வர். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம். பணியிடங்களில் நடக்கும் விவாதங்களில் கருத்து சொல்வதை தவிர்ப்பதால் நற்பலன் ஏற்படும்.

வியாபாரம்: விவசாய விளைபொருட்கள், உணவு பண்டங்கள், கட்டுமானப் பொருள், நகை, ஜவுளி, பலசரக்கு, விவசாய இடுபொருட்கள், உழவுக்கருவிகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், வாகன உதிரிபாகங்கள், பாத்திரம், இறைச்சி, மருந்து, மருத்துவ உபகரணம், எண்ணெய் வித்து, காலணி, அடுப்பு விற்பவர்கள் கடுமையாக முயற்சித்தால் தான் குறைந்த லாபத்தை எதிர்பார்க்கலாம். மற்றவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு கவனச்சிதறல் காரணமாக அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். சிலருக்கு இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை போன்ற பலன்கள் நிகழலாம். குடும்பப் பெண்கள் செலவுக்கு திண்டாடினாலும், கணவரின் ஆதரவு காரணமாக நிம்மதியான மனநிலையைப் பெறுவர். புத்திரர், கணவர், தந்தை ஸ்தான பலன்கள் உங்களுக்கு மிகுந்த பயன்களைத் தரும் என்பதால் பிரச்னைகள் குறைவாகவே இருக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்களுக்கு சுமாரான லாபமே கிடைக்கும்.

படிப்பு: மருத்துவம், விவசாயம், ரசாயனம், பவுதிகம், சிவில், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜனியரிங், சட்டம், ஜர்னலிசம், கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு படிப்பு சுமாராகவே இருக்கும். மற்றவர்களும் மந்தநிலை காரணமாக படிப்பில் பின்தங்கும் நிலை ஏற்படும். படிப்புக்கான செலவுக்கும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

அரசியல்: அரசியல்வாதிகளுக்கு அனைத்து செயல்பாடுகளிலும் தடை ஏற்பட்டு மனக்கஷ்டத்தை உருவாக்கும். ஆதரவாளர்கள் பணம் கேட்டு நச்சரிப்பர். பணம் பெற்ற சிலர் கூட கவிழ்த்து விட வாய்ப்புண்டு. எதிரிகளால் தொல்லை ஏற்படும்.

விவசாயம்: விவசாயிகள் அளவான மகசூல் பெறுவர். கால்நடை வளர்ப்பிலும், சுமாரான பணவரவு தான் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரம் இருந்தால் இழுத்தடிக்கும் நிலை இருக்கிறது.

வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை

பரிகாரப் பாடல்

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை

ஒளிமதி செஞ்சடையாளை

வஞ்சகர் நெஞ்சடையாளை

தயங்கும் நுண்ணூல் இடையாளை

எங்கள் பெம்மான் இடையாளை

இங்கு என்னை இனி படையாளை

உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே!

குருபெயர்ச்சி பலன்கள் -மீனம்


குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.









பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி

+ உடல்நிலையில் முன்னேற்றம்

- பேச்சால் சிரமம்

வாய்ப்புகளை தவறவிடாத மீன ராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி, உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 4,6,8ம் இடங்களைப் பார்க்கிறார். இந்த குருபெயர்ச்சி உங்கள் எண்ணத்தில் சில மாற்றங்களையும், கூடுதல் பணத்தேவையையும் உருவாக்கும். பேச்சில் தடுமாற்றமும், பிறர் ஏற்றுக் கொள்ளாத வகையிலான கருத்துக்களும் வெளிப்படும் வாய்ப்பு உண்டு. எனவே பேச்சைக் குறையுங்கள். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் அதிக செலவு உண்டாகும். புத்திரர்கள் பெற்றோரின் நிலையறிந்து பொறுப்புடன் நடந்து கொள்வர். பூர்வ சொத்தில் வருமானம் குறையும். எதிரிகளின் தொல்லை குறைந்துவிடும். அலட்சியமான செயல்பாடுகளால் சிரமத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. கவனம். உடல்நலம் படிப்படியாக முன்னேறும். சில தேவைகளுக்காக கடன்பட நேரிடும்.

கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களிடம் கொடுக்கல், வாங்கலில் நிதானம் பின்பற்றவும். தந்தை வழி உறவினர்கள் ஆதரவு மனப்பான்மையுடன் நடந்து கொள்வர். வெளிநாடு வேலைவாய்ப்பில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தொழில்: தொழில் சார்ந்த வகையில் மந்தமான சூழ்நிலை இருக்கும். சிலர் தொழிலை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், தோல், பிளாஸ்டிக், தண்ணீர், விவசாயகருவிகள், கட்டுமானப் பொருள், வாகனம் சார்ந்த தொழில் செய்பவர்கள் உற்பத்தி இலக்கை எட்ட பல தடைகளைக் கடந்து கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும். இதர தொழிலில் உள்ளவர்களுக்கு பரவாயில்லை என்ற நிலை இருக்கும். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். பணியாளர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு நற்பலன் உண்டு.

வேலை: அரசு, தனியார்துறையில் பணிபுரிபவர்கள், பணியில் ஏற்படும் குளறுபடிகளை சரிசெய்ய காலதாமதம் ஏற்படும். சலுகைகளை அவ்வளவு எளிதில் பெற இயலாது. வேலைப்பளு இப்போதிருப்பதை விட இன்னும் கூடும். எரிச்சல் உணர்வை இன்னும் ஓராண்டுக்கு விட்டு விடுங்கள்.

வியாபாரம்: நகை, காகிதம், ஸ்டேஷனரி, தானியம், எண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், மளிகை, பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள், ஆடை, தோல், அலங்கார பொருட்கள், கட்டுமானப் பொருள், கடல்சார் பொருட்கள் விற்பவர்கள், சுமாரான வியாபாரமும், அதற்கேற்ற லாபமும் பெறுவர். மற்றவர்களுக்கு போட்டி குறைவு காரணமாக தற்போதைய வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். சரக்கு வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் வேலைப்பளு காரணமாக கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அதிகாரிகளின் அனுசரணையைப் பெறுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். தற்போதைய சலுகைகளுக்கு மேல் அதிகமாக எதிர்பார்க்க இயலாது. குடும்பப் பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாட நேரிடும். தாய்வழி உறவினர்கள் உதவுவர். மனதில் குழப்பமும், கவலையும் ஏற்படலாம். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள், சுமாரான வியாபாரமும், அளவான லாபமும் காண்பர். அதிக மூலதனம் தேவைப்படும்.

படிப்பு: ஆசிரியர், வங்கியியல், பிசினஸ் மேனேஜ்மென்ட், ஓட்டல் மேனேஜ்மென்ட், ஜர்னலிசம், ஆடிட்டிங், நிதிநிர்வாகம், விவசாயம், சட்டம், மரைன், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் படிப்பு, தகவல் தொழில்நுட்பம் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள், குழப்பமான நிலையில் செயல்படும் தன்மை உள்ளது. மற்ற துறை

மாணவர்கள் ஓரளவு நன்றாகப் படிப்பர். படிப்புக்கான பணத்துக்கு தட்டுப்பாடு வரும். சக மாணவர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். பெற்றோரின் எண்ணங்களை புரிந்து நடப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் தழைக்கும்.

அரசியல்: அரசியல்வாதிகள் முக்கிய ஆதரவாளர்களின் ஆதரவை இழக்க நேரிடும். எதிரிகளால் இருந்த தொந்தரவு படிப்படியாக குறையும். புத்திரர்கள் ஓரளவுக்கு உதவுவர். பதவிகள் கிடைப்பது சிரமமே.

விவசாயம்: விவசாயிகள் பயிர் வளர்க்க கூடுதல் பணத்தேவைக்கு உட்படுவர். அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் வரும் லாபத்தால் ஓரளவு குடும்பத்தை நடத்தலாம்.

வணங்க வேண்டிய தெய்வம்: நரசிம்மர்

பரிகாரப் பாடல்

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை

ஒளிமதி செஞ்சடையாளை

வஞ்சகர் நெஞ்சடையாளை

தயங்கும் நுண்ணூல் இடையாளை

எங்கள் பெம்மான் இடையாளை

இங்கு என்னை இனி படையாளை

உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே!

 

Source: http://www.dinamalar.com/rasi_head.asp?ncat=gur

No comments:

Post a Comment