Tuesday 1 October 2013

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Kanni

கன்னி: யானையின் பலம் தும்பிக்கை உங்களின் பலம் நம்பிக்கை!


இனிமையான சுபாவம் கொண்ட கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல்  சஞ்சரித்த குரு, மே28 முதல் 10ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவர் பார்வை 2,4,6ம் இடங்களில் பதிகிறது. சனி ராசிக்கு இரண்டில் உச்சத்தில் இருந்து 4,8,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  ஓங்கவே குருவேதான் ஒன்று மூன்று உகந்த நாலாறு எட்டுபத்து ஈறாறில் தீங்காக நின்றிடிலோ பலனைக்கேளு,தேடிய பொருள் பூமி சேதமாகும் வாங்கவே அகத்தினிலே அலைச்சலோடுவாதபித்த ரோகமது வந்து வாட்டும்தாங்கவே தந்தையொடு புத்திரக்கும்தேடிவரும் தீமையது திகில் உண்டாமே! என்கிறது ஒரு வெண்பா.பத்தாம் இட குருவால்  பிரச்னை உண்டு என்று இந்த வெண்பா சொன்னாலும் அவரது பார்வை பலத்தால், உடல்நலமும், ஆயுள்பலமும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பீர்கள். இந்த பிரச்னையும் தற்காலிகமானதே. தடைபட்டு வந்த பணநிலை குருவின் பார்வையால் சீர்படும். வருமானம் அதிகரிப்பதால் சேமிக்கவும் வாய்ப்புண்டு. யாருக்கும் வாக்குறுதி அளிக்காமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் வேண்டாத வம்பில் மாட்டிக் கொள்வீர்கள்.சகோதர வகையில் செலவு அதிகரிக்கும். அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான ஆலோசனை வழங்குவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். தாய்வழி சொத்து கிடைக்கும். வீடு, வாகனத்தில் மராமத்துப்பணி மேற்கொள்வீர்கள். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மனை, வீடு வாங்கும் முயற்சியில் விடாமுயற்சி தேவைப்படும். சிலர் வீடு கட்டும் வகையில், அகலக்கால் வைத்து பணச்சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். உங்களிடம் இருக்கும் பணத்துக்கு மட்டும் பட்ஜெட்டை தீட்டுங்கள். பிள்ளைகள் படிப்பில் மந்தகதியில் செயல்படுவர். அவர்களுக்கு தக்க அறிவுரை கூறி வழிகாட்டுவது அவசியம். அவர்களின் சேர்க்கை விஷயத்தில் எச்சரிக்கை கொள்வது நல்லது. குறிப்பாக, பெண் குழந்தைகள் ஆண் நண்பர்களிடம் பழகுவது தெரிந்தால், பக்குவமாக எடுத்துச் சொல்லி சிக்கலில் இருந்து மீளுங்கள். கடன்பிரச்னையால் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவீர்கள். கடன் பெறும்போது நம்பகமானவர்களை அணுகுவது முக்கியம். உடல்நலனில் அக்கறை தேவை. கடந்த காலத்தில் இருந்து குணமான சில வியாதிகள் தலைதூக்கும். சளி, இருமல் போன்ற பிரச்னைக்கு ஆளாவீர்கள். திருமண முயற்சியில் தடைகளைச் சந்திப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட இடமுண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே வீட்டில் நிம்மதி நிலைக்கும். சனியின் பார்வையால் ஆயுள்பலம் அதிகரிக்கும். ஆனால், உடல்ரீதியான பிரச்னை அவ்வப்போது உருவாகும். எதிரிகளின் தொல்லை மறையும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். நண்பர்களின் செயல்பாடு மனதிற்கு ஆறுதல் தரும்.தந்தைவழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகும். தந்தையின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணத்தின் போது பணம், பொருட்களை விழிப்புடன் கவனிப்பது நல்லது. பிரதான கிரகங்களான குரு, சனி இரண்டும் சாதகமாக இல்லாவிட்டாலும் யானை தம் தும்பிக்கையை நம்பியிருப்பதைப் போல, நீங்கள் தன்னம்பிக்கையுடன் சாதிப்பீர்கள்.
தொழிலதிபர்கள்: விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே லாபத்தை தக்கவைக்க இயலும். தொழிலாளிகளின் ஒத்துழைப்பும் ஓரளவே கிடைக்கும். நிர்வாகச் செலவைக் கட்டுப்படுத்த போராட வேண்டியிருக்கும். நிர்வாக நடைமுறையை சரியான பாதையில் கொண்டு செல்வதில் சில இடையூறுகளை சந்திப்பீர்கள். லாபம் சுமாராக இருக்கும். கட்டட விஸ்தரிப்பு பணி மேற்கொள்வீர்கள். கடந்த காலத்தில் போட்டியாக செயல்பட்டவர்கள் விலகுவர்.
வியாபாரிகள்: விற்பனையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்வீர்கள். சுமாரான விற்பனை, பணவரவு கிடைக்கும். கடந்த காலத்தில் சேர்த்து வைத்த பணம் மூலதன தேவைகளுக்கு பயன்படும். வியாபார நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு வசதியாக புதிய வாகனம் வாங்குவீர்கள். போட்டி குறைந்து வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பும் நிறுவனத்தில் தகுந்த புகழும் பெறுவீர்கள். குடும்பத்தேவைகளை சிக்கன செலவில் நிறைவேற்றுவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே, குளறுபடி வராமல் குறித்த காலத்தில் பணிகளை நிறைவேற்ற முடியும். வேலைபளுவால் சிரமம் ஏற்படும். நியாயமாக பெற வேண்டிய சலுகைகள் கூட ஓரளவே கிடைக்கும். வீடு, வாகன கடன் பெற அனுகூலம் உண்டு. சக பணியாளர்களிடம் உங்கள் மீதான நல் அபிப்பிராயம் வளர்ந்து நட்பை பலப்படுத்தும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையை அக்கறையுடன் பின்பற்றுவதால் மட்டுமே சிரமம் வராமல் தவிர்க்கலாம். சிலர் ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் ஆகிய பலன்களை பெறுகிற நிலை உள்ளது.
பெண்கள்: குடும்பப் பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படும். கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவதுடன் சிக்கனமாக இருப்பதும் அவசியம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவதில் தடை ஏற்படும். தாய்வீட்டு உதவி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சிலர் கவனக்குறைவாக பணிபுரிந்து ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம். சுயதொழில் புரியும் பெண்கள் ஆரோக்கிய உடல்நலத்துடன் உற்பத்தி, விற்பனையில் தகுந்த கவனம் கொள்வர். சுமாரான பணவரவு கிடைக்கும். தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.
மாணவர்கள்: படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். ஞாபகத்திறன் வளர்ந்து தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பு, பாசம் உங்களை மகிழ்ச்சிகரமாக்கும். தனித்திறனை வளர்த்து பேச்சுப்போட்டி, விளையாட்டுகளில் பாராட்டு, பரிசு பெறுவீர்கள். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணையாக செயல்படுவர். படித்து முடித்து வேலை வாய்ப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களிடம் பெற்ற நம்பிக்கைக்கு குறையேதும் வராத அளவில் செயல்படுவது நல்லது. புகழைத் தற்காத்துக் கொள்ள அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். அரசியல் பணியில் புத்திரர்கள் ஓரளவே உதவுவர்.எதிரிகளால் தொந்தரவு எதுவும் வராத நன்னிலை உண்டு. அலட்சியம், கவனக்குறைவாக செய்கிற செயல்கள் கஷ்ட சூழ்நிலையை உருவாக்கும். நடைமுறையை சீராக்குவது நல்லது.
விவசாயிகள்: விவசாயப் பணிகளுக்கு செலவு செய்கிற பணத்தின் அளவு முன்பை விட அதிகரிக்கும். சுமாரான மகசூல் கிடைக்கும். விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகிற விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் ஓரளவு பணவரவும் பெறுவீர்கள். நிலம் தொடர்பான விவகாரம் இருந்தால் சமரச தீர்வு கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் சிரமங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.
பரிகாரப்பாடல்:
கடல்கடைந்து அமுதம் கொண்டு
கலசத்தை நிறைந்தாற் போல்
உடல் உருகி வாய் திறந்து
மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும்என்
கோலாடி குறுகப்பெறா
தடவரைத் தோள் சக்ரபாணீ
சாரங்க வில் சேவகனே!

No comments:

Post a Comment