Tuesday 1 October 2013

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Dhanusu

தனுசு: ஐயையையோ ஆனந்தமே! கோடி நன்மை ஆரம்பமே!

குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரித்த குரு, மே28 முதல் 7ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவருடைய பார்வை பலத்தால் 1,3,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சனி ராசிக்கு 11ல் அமர்ந்து 1,5,8 ஆகிய ராசிகளை பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இது இவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். குரு பதினொன்றுஏழ் ஒன்பான் கூறும்ஐந்து இரண்டில் நிற்க திருமகள் கிருபை உண்டாம் தீர்த்த யாத்திரை உண்டாம் தரும தானங்கள் உண்டாம் தந்தை தாய் உதவி உண்டாம்அருமையும் பெருமையும் உண்டாம்அரசர் சேவையும் உண்டாமே!என்று ஏழாம் இட குரு தரும் நற்பலன்களைப் பட்டியலிடுகிறது இந்த ஜோதிட வெண்பா. இதன்படி, வாழ்வில் எல்லாவழிகளிலும் நன்மை பெறுவீர்கள். ஆயுள் அதிகரிக்கும். தொல்லை கொடுத்த நோய்நொடி நீங்கும். கடந்த காலத்தில் உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் கூட வலியவந்து உங்களின் நட்பைத் தேடுவர். வருமானம் தாராளமாக இருக்கும். ஆனால், ஆடம்பர சிந்தனையால் செலவும் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்கும். அளவுக்கு மீறி வாக்களித்துவிட்டு சிரமத்திற்கு ஆளாகலாம், கவனம். தைரிய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால், மனோதிடம் அதிகரிக்கும். இருந்தாலும் தைரியத்தோடு புத்திசாலித்தனத்தையும் வளர்த்துக் கொள்வது நல்லது. கருத்துவேறுபாடு நீங்கி சகோதரர்களிடம் இணக்கம் கூடும். சகோதர வழியில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடத்திட யோகமுண்டு. தாயின் ஆரோக்கியம் சீர்பெறும். அவரது தேவைஅறிந்து உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய மனை, வீடு வாங்கவோ அல்லது கட்டவோ வழி பிறக்கும். வாகன வகையிலும் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். பிள்ளைகள் கல்வியில் மந்தகதியில் செயல்படுவர். அவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. அவர்களுக்கு தேவையான அறிவுரைகளைக் கூறி நெறிப்படுத்துவது அவசியம். அலைச்சலைத் தவிர்க்க முடியாது. தொல்லை அளித்து வந்த கடன் பிரச்னையிலிருந்து பெருமளவு விடுபடுவீர்கள். ஏழாம் வீட்டில் குரு இருப்பதால், திருமணத்திற்கு காத்திருப்போருக்கு இது சுபமான காலகட்டம். உறவினர்களின் ஒத்துழைப்போடு சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துபேதம் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் பயந்தோடுவர். மறைமுக எதிரிகளை இனம் கண்டு கொள்வீர்கள். உங்களின் வளர்ச்சியைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவர். தந்தையின் உடல்நிலையில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டாலும், பாதிப்பு ஏதும் நேராது. தந்தையுடன் உறவு சீராக இருக்கும். தடைபட்ட உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு உருவாகும். சிலர் கல்வி பெறும் நோக்கில் வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு தாராள பணவசதி அமைவதுடன், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: தொழிலில் எல்லா நிலைகளிலும் நன்மைகளை வாரி வழங்க மிதுனகுரு காத்திருக்கிறார் என்றால் மிகையில்லை. அமோக வளர்ச்சி காணலாம். கல்வியை முடித்துவிட்டு, புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் குருபலத்தால் நற்பலன் காண்பர். உற்பத்தி, தர உயர்வில் சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமான அளவில் கிடைக்கும். உற்பத்தி செழித்து பெரும் லாபம் அடைவீர்கள். புகழ், செல்வாக்கு வளரும். தொழிலதிபர் சங்கப்பணிகளில் ஆர்வமுடன் பங்கேற்று கவுரவமான பதவியில் அமருவீர்கள். நவீன இயந்திரங்கள் வாங்குவீர்கள். தொழிற்சாலை அபிவிருத்தி பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரிகள்: அனுபவசாலிகளின் ஆலோசனை வரப்பிரசாதமாக கிடைத்து வியாபார நடைமுறையில் சில மாற்றங்களை செயல்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவினால் விற்பனை, பணவரவில் முன்னேற்றம் அடைவீர்கள். சந்தையில் நன்மதிப்பு, புகழ் பெறுவீர்கள். பாக்கிப் பணத்தை எந்த வித சிரமமும் இன்றி எளிதில் வசூல் செய்வீர்கள். புதிய கிளை துவங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும். வங்கி நிதியுதவி எதிர்பார்த்த அளவில் கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் பணித்திறனை வளர்த்து ஆர்வமுடன் செயல்படுவர். குறிப்பிடத்தக்க அளவு சம்பளம் உயரும். பணிச்சுமை குறையும். ஓவர்டைம் போன்ற வகைகளால்வருமானம் கூடும். குறித்த காலத்தில் வேலைகளை முடிப்பதால், அதற்குரிய சலுகைகளையும் பெறுவீர்கள். நிர்வாகத்தின் பார்வையில் உங்கள் மீதான மதிப்பு உயர்ந்து பொறுப்பான பதவி கிடைக்கும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு இருக்கும். அதிக வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை தாராள செலவில் பூர்த்தி செய்வீர்கள்.
பெண்கள்: குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகரமான வாழ்வு நடத்துவர். எதிர்கால வாழ்வு நடைமுறை பற்றிய நம்பிக்கை வளரும். சேமிப்பு உயரும். நீண்ட காலமாக வாங்க விரும்பிய நகை அல்லது ஆடம்பரப் பொருட்களை இந்த கால கட்டத்தில் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக இப்போது இடும் திட்டம் வெற்றி பெறும். பணிபுரியும் பெண்கள் பணித்திறமையை வளர்த்துக் கொள்வர். வேலைப்பளு குறைந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் அதிக ஆர்டர் பெறுவர். உற்பத்தி, விற்பனையில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். லாபம் அபரிமிதமாக இருக்கும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் கைகூடும்.
மாணவர்கள்: அறிவுத்திறன், ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். சக மாணவர்கள் சுமூக உறவு கொள்வர். ஆசிரியர்களும், பெற்றோரும் படிப்புக்கு தேவையான உதவி வழங்குவர். பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அதிக மார்க் பெறுவீர்கள். உங்கள் தனித்திறமை பாராட்டப்பட்டு, வெகுமதி கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு கவுரவமான சம்பளத்தில் பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: சமயோசிதமாக செயல்பட்டு ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். நன்மதிப்பும் புகழும் அதிகரிக்கும். எதிர்ப்பாளர்களால் இருந்த தொல்லை விலகும். கவுரவமான பதவி, பொறுப்பு கிடைக்கும். புத்திரர்களின் நுட்பமான ஆலோசனை உங்களை முன்னேற்ற பாதையில் நடைபோட வைக்கும். சமரச பேச்சுக்களில் நல்ல தீர்வு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும்.
விவசாயிகள்: தாராள பணவசதி கிடைத்து விவசாயப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். மகசூல் அதிகரித்து உபரி வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் திருப்திகரமான லாபம் வந்துசேரும். புதிய நிலம் வாங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை தாராள பணச்செலவில் நடத்துவீர்கள்.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் வசதிகள் மேலும் மேலும் உயரும்.
பரிகாரப் பாடல்:
மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலி வாகனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
புஷ்கலா நாதனே வருக வருக
பூரணை துணைவா வருக வருகவே!

No comments:

Post a Comment