Tuesday 1 October 2013

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Makaram

மகரம்: வருமானம் கூடினாலும் மனசுக்கு பிரச்னைதான்!

உழைப்பில் உறுதி மிக்க மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் 6ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவரின் பார்வை ராசிக்கு 2,10,12 ஆகிய இடங்களில் பதிகிறது. 10ல் சஞ்சரிக்கும் சனியின் பார்வை, 4,7,12 ஆகிய இடங்களில் விழுகிறது.கேளப்பா குருபதியும் ஆறில் ஏற கெடுதி மிகச்செய்வன் மாபலியாம் மன்னன்சீரப்பா சிறைக்கூடம் சென்றாரய்யாசிவசிவா தேவர்களின் கொடுமையினாலேஈரப்பா ராஜபயம் கலகம் துன்பம் இல்லதனில் களவும் போம் கிலேசம் மெத்தவீரப்பா வெகுபயமாய் சர்ப்பதோஷம் வேந்தன் நின்ற பதியறிந்து வினையை மூட்டே!என்கிறது ஒரு வெண்பா.இதன்படி, ஆறாம் இடத்து குரு மூலம் சிரமங்களைச் சந்திக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஓராண்டுகாலமாக குருவின் சுபஸ்தானத்தால் நன்மையைப் பெற்ற நீங்கள், இப்போது சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். தன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். இருந்தாலும் மனதளவில் பிரச்னைக்கு உள்ளாவீர்கள். மனதில் தைரியம் குறைய அனுமதிக்காதீர்கள். சகோதர, சகோதரிகள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட இடமுண்டு. அவர்களிடம் ஒதுங்கி நடந்து கொள்வது நல்லது. தாயின் உடல்நிலை பாதிக்கலாம். அவருடன் கருத்துவேறுபாடு கொள்ளவும் வாய்ப்புண்டு. வீடு,வாகனத்தில் புதிய மாற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்வது பிரச்னையைக் குறைக்க உதவும். குழந்தைகள் கல்வி,வேலைவாய்ப்பில் பின்தங்க வாய்ப்புண்டு. தக்க அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்துங்கள். அவர்களின் உடல்நிலையிலும் அக்கறை தேவைப்படும். உடல்ரீதியான பிரச்னைக்கு உள்ளாவீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையை உடனுக்குடன் சரிசெய்வது அவசியம். திருமணம் போன்ற சுபவிஷயங்களில் விடாமுயற்சி தேவைப்படும். உறவினர்களின் ஆதரவும் சுமாராகவே இருக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குடும்ப அமைதியைக் குலைக்கும் சூழ்நிலை உள்ளது. அக்கம்பக்கத்தினரோடு அளவாக பழக்கம் வைத்துக் கொள்வது நன்மைஅளிக்கும். எதிரி ஸ்தானம் பலம் பெறுவதால் நண்பர்கள் கூட பகைவர்களாக மாற இடமுண்டு. அதனால், எதிலும் நிதானமாக இருப்பது அவசியம். பூர்வீகச் சொத்தில் பிரச்னை உருவாகும். பாகப்பிரிவினை போன்ற முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. என்ன தான் கஷ்டசூழ்நிலை இருந்தாலும், பணப்புழக்கம் ஓரளவு கைகொடுக்கும். இதனால், மனதை சலனப்படுத்திக் கொள்ளாமல், இறை வணக்கத்தில் தீவிரமாகக் கவனம் செலுத்தி ஆறுதல் பெறலாம். ஆறாமிட குரு காலத்தில், கடன் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். வாங்கினால் அதை அடைக்க படாதபாடு பட வேண்டியிருக்கும்.இந்த சமயத்தில், ஏதாவது புண்ணியத்தலத்துக்கு சென்று வருவது நல்லது. குடும்பத்துடன் சென்று வந்தால் இன்னும் சிறப்பு. பணவிஷயத்தில் வாழ்க்கைத்துணை நீங்கலாக பிறரை நம்ப வேண்டாம்
தொழிலதிபர்கள்: கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். சுமாரான உற்பத்தியும், அதற்கேற்ற மிதமான பணவரவும் இருக்கும். சிலர் தொழிலுக்காக கடன் வாங்கவும் செய்வர். நிர்வாக நடைமுறைகளில் கூடுதல் கவனம் கொள்வதால் உற்பத்தி, தரத்தின் அளவை சராசரிக்கு கொண்டுவர இயலும்.பணியாளர்களின் ஒத்துழைப்பு காரணமாக, இக்கட்டான சமயங்களில் தப்பி விடலாம். ஆனால், அவர்களுக்கு சலுகை தரும் போது செலவு கூடும். 
வியாபாரிகள்: சந்தையில் உருவாகிற போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். விற்பனையில் சுமாரான இலக்கை அடைவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதால் நிறுவனத்திற்கு நற்பெயருடன் பணப்புழக்கத்தையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். சரக்கு கிட்டங்கியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது. வெளியூர் பயணம் மேற்கொண்டு புதியவர்களின் அறிமுகம் பெறுவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை, சலுகைப்பயன் பெறுவதில் தாமதம் தவிர்க்கலாம். பணிச்சுமைக்கு ஆளாவதோடு, எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். அதே நேரம், மிதுன குருவின் ஸ்தான பலத்தை விட, அதன் பார்வை பலம் உங்களுக்கு பணியிலுள்ள சிரமங்களைக் குறைத்து விடும். உழைப்புக்கேற்ற வகையில் சீரான ஓய்வு மேற்கொள்வதால் உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்வர். உடல்நலத்தை சரிவர பேணுவதால் மருத்துவ செலவு அதிகரிக்காமல் தவிர்க்கலாம். பணிபுரியும் பெண்கள் பணியிட சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் சீரான உழைப்பினால் உற்பத்தி, விற்பனை அளவை பாதுகாத்துக் கொள்வர். சுமாரான லாபம் கிடைக்கும்.
மாணவர்கள்: உயர்கல்வி முயற்சிகளில் பிற்போக்கான நிலை தென்படும். உடல் நலக்குறைவும், மனச்சோர்வும் கல்விவளர்ச்சிக்கு தடையாக அமையலாம். வெளியிடங்களில் சுற்றுவதை குறைத்து படிப்பில் தகுந்த கவனம் கொள்வதால் மட்டுமே தரதேர்ச்சி விகிதம் சீரான அளவில் கிடைக்கும். படிப்புக்கான பணவசதியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சக மாணவர்களுடன் படிப்பு தொடர்பான நல்ல கருத்துக்களை பகிர்ந்துகொள்வீர்கள்.  படிப்புக்குப் பின் வேலைவாய்ப்பு பெற விரும்புபவர்களுக்கு ஓரளவு சம்பளத்தில் வேலை அமையும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெற அதிக அக்கறையுடன் பணி புரிவது அவசியம்.அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எதிரிகள் தருகிற தொந்தரவிலிருந்து சில படிப்பினைகளை கற்றுக் கொள்வீர்கள். சமரச பேச்சுவார்த்தைகளில் இருதரப்பு நியாயம் உணர்ந்து பேச வேண்டும். இல்லாவிட்டால், சிரமம் தான் வரும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி  கிடைக்கும்.
விவசாயிகள்: அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் தேவையான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு அதிக லாபம் பெறுவீர்கள். நிலம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் முக்கியஸ்தரின் உதவியால் சமரச தீர்வு எளிதில் பெறலாம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை அளவான செலவில் நடத்துவீர்கள்.
பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் சகல நன்மையும் பெறுவீர்கள்.
பரிகாரப் பாடல்:
ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்
லலிதாம்பிகையே நமஸ்காரம்
துர்க்கா லட்சுமியே நமஸ்காரம்
புவனேஸ்வரியே நமஸ்காரம்
அன்னபூர்ணேஸ்வரியே நமஸ்காரம்
காமேஸ்வரியே நமஸ்காரம்
பக்தியுடனே உனை நாடி வந்தோம்
பண்புடனே உன்னை பார்க்க வந்தோம்

No comments:

Post a Comment