Tuesday 1 October 2013

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Kadagam



கடகம்: நீங்க உண்டு! உங்க வேலையுண்டு!

காரியத்தில் கண்ணாய் இருக்கும் கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் சஞ்சரித்த குரு மே28 முதல் விரயஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தில் சஞ்ரிக்கப்போகிறார். குருவின் பார்வை 4,6,8 ஆகிய இடங்களில் விழுகிறது. சனி ராசிக்கு 4ல் இருந்து 1,6,10 ஆகிய இடங்களைப்  பார்க்கிறார்.  சொல்லவே பொன்னவனும் ஜென்மம் மூன்று சுகமான நாலாறு எட்டு பத்து வல்லவே பன்னிரண்டில் இருந்து வாழ அலைச்சலோடு சத்துரு நிஷ்டூர வாதம் புல்லவே சகோதரர் தாய் மனையா ள் புத்திரரின் நலம் கெடும் பொருளும் போகும்அல்லவே மன்னவரால் பதியும் சேதம் அரிவையர் தங்களால் வியாதியாமே!என்கிறது ஒரு வெண்பா.ராவணனுக்கு 12ல் குரு வந்த போது, பெண்ணாசையால் உயிரையே இழந்தான். பெண்கள், நண்பர்கள் விஷயத்தில் கவனம் அவசியம்.விரயகுரு, அர்த்தாஷ்டம சனி என முக்கிய கிரகங்கள் இரண்டையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். ஆயுள்பலம் அதிகரித்தாலும் மனதளவில் அவ்வப்போது சோர்வுக்கு ஆளாவீர்கள். அதன் தாக்கத்தை உடல்நிலையும் உணர்த்தும். அதனால், அதிகாலையே எழுவது, புத்துணர்ச்சி தரும் விஷயங்களில் மட்டும் ஈடுபடுவது நல்லது.  பணப்பற்றாக்குறை உண்டாக வாய்ப்புண்டு. குடும்பச் செலவை திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும். அநாவசிய விஷயங்களில் கவனம் செலுத்துவது கூடாது. குடும்பத்தினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். சகோதரர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முற்படுவீர்கள். ஆனால், அவர்களிடம் நீங்கள் எந்த விதமான உதவியையும் எதிர்பார்க்க இயலாது. தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கருத்து வேறுபாடு மறைந்து அன்னையின் அன்புக்குரியவராகத் திகழ்வீர்கள். வீடு, வாகன வகையில் நல்ல அனுகூலமான சூழ் நிலையும், வளர்ச்சியும் காத்திருக்கிறது. தேவையான புதிய மாறுதல்களைச் செய்து மகிழ்வீர்கள். புத்திரர்களின் உடல்நிலை, கல்வி வளர்ச்சியில் அக்கறை தேவைப்படும். படிப்பில் சோம்பல், ஞாபகமறதி போன்ற பிரச்னையை பிள்ளைகள் எதிர்கொள்வர். கடன் விஷயத்தில் கவனம் வைப்பது அவசியம். புதிதாக கடன்வாங்கும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள். திருமண முயற்சியில் விடாமுயற்சி தேவைப்படும். சுபவிஷயங்கள் நடத்துவதில் உறவினர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும். எதிரிவிஷயத்தில் விழிப்புணர்வு தேவை. அக்கம்பக்கத்தினரோடு அளவாகப் பழகுவது பிரச்னையைத் தவிர்க்க உதவும்.தந்தையின் உடல்நிலையில் அக்கறை செலுத்த நேரிடும். பூர்வீகச் சொத்தில் தேவையில்லாத பிரச்னை தலைதூக்கும். உயர்கல்வி பெறுவதற்கான யோகம் உண்டாகும். தடைபட்ட கல்வியைக் கூட தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். தொழிலதிபர்கள் தொழிலில் சற்று மந்தகதியை எதிர்கொள்வர். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும். பணியாளர்கள் சகபணியாளர்களால் பணிச்சுமைக்கு ஆளாவர். கல்வி முடித்து வேலைவாய்ப்பைத் தேடுபவர்கள் பொறுமையுடன் இருப்பது அவசியம். மூத்த சகோதரர்களின் உதவி ஓரளவே கிடைக்கும். குருவால் தானதர்மங்களில் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். கோயில் திருப்பணிகளுக்கு இயன்ற பணஉதவி செய்து புண்ணியத்தை தேடிக் கொள்வீர்கள். தானுண்டு தன்வேலையுண்டு என்று செயல்பட்டால் குருவின் சஞ்சாரமான ஓராண்டு காலத்தை நிம்மதியாக நடத்த முடியும்.
தொழிலதிபர்கள்: தொழிலில் அளவான உற்பத்தி, சுமாரான பணவரவு பெறுவீர்கள். சந்தையில் எதிர்ப்பாளர்களின் தொந்தரவு குறையும். புதியவர்கள் ஒப்பந்தம் செய்ய வருவர். அவர்களுக்கு திருப்திகரமான அளவில் சலுகை தருவதால் உற்பத்தி அதிகரிக்கவும், பண ஓட்டத்தை சரிக்கட்டி செல்லவும் வழி பிறக்கும். பணியாளர்களின் கோரிக்கைகளை ஓரளவே நிறைவேற்ற முடியும். நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்த சொத்துக்களின் பேரில் கடன் பெற வேண்டி வரும். 
வியாபாரிகள்: விற்பனையை அதிகரிக்க முயற்சியும் அணுகுமுறையில் மாற்றமும் பின் பற்றுவது அவசியம். சந்தையில் கடந்த காலத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். தரமான பொருட்களை தருவதால் மட்டுமே விற்பனை, பணவரவின் அளவு அதிகரிக்கும். கூடுமானவரையில் ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் பணக்கஷ்டம் வராத நன்னிலை உருவாகும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவான செயல்களால் பணியில் குளறுபடியும், தாமத சூழ்நிலையும் எதிர்கொள்வர். பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே நிர்வாகத்தின் கண்டிப்பு, ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து தப்பலாம். சிலர் ஒழுங்கு நடவடிக்கை, சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஆகிய எதிர்மறை பலன்களுக்கு உள்ளாவர். குழுவாக பணி செய்பவர்கள் கருத்துபேதம் வராமல் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கு சீராக நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற முயற்சிக்கு எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, சீரான பணவசதி கிடைத்து வாழ்வை நலமுடன் நடத்துவர். மாங்கல்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவரின் ஆயுள், ஆரோக்கியம் பலம் பெறும். தாய்வழி உறவினர்கள் தேவையான உதவிகளை வழங்கி அன்பு கொள்வர். ஆரோக்கிய உடல்நலத்துடன் அன்றாட பணிகளில் ஈடுபடுவீர்கள். பணிபுரியும் பெண்கள் பணியில் எதிர்பாராமல் உருவாகிற குளறுபடியை பணிசார்ந்த அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை, உதவிபெற்று சரிசெய்வது நல்லது.  
மாணவர்கள்: படிப்பில் ஞாபகத்திறன் வளர குருவின் ஐந்தாம் பார்வை பலமாக துணைநிற்கும். லட்சிய மனதுடன் படிப்பதால் திட்டமிட்ட தேர்ச்சி இலக்கை எளிதில் பெறலாம். தாயின் அன்பும், சீரான பணவசதியும் உங்கள் படிப்பில் மனதில் ஊக்கத்தை உருவாக்கும். படிப்புக்கு கிடைக்கிற கடனை படிப்புக்கு பயன்படுத்துவது நல்லது.  வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற வகையில் பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: எதிரிகளின் தவறான கண்ணோட்டத்தால், பல சிரமங்களை முன்னர் அனுபவித்த நிலைமை மாறும். புதியவர்களின் அறிமுகம், உதவி கிடைத்து சேவைப்பணிகளை ஆர்வமுடன் மேற்கொள்வீர்கள். அலைச்சலும் அதிக செலவும் உருவாகும்.வழக்கு, விவகாரத்தில் அனுகூல தீர்வு பெற புதிய வழி பிறக்கும். 
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான பணவசதி குறைந்த அளவிலேயே இருக்கும். பருவகால சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு உரிய பயிர் வகைகளை விளைவிப்பது நல்லது. விளைபொருள் விற்பனையில் அளவான லாபம் கிடைக்கும். கால்நடைகள் மற்றும் பயிர் வகைகளுக்கு காப்பீட்டு வசதிகளை தவறாமல் பின்பற்றுவதால் நஷ்டம் வராமல் தவிர்க்கலாம். கால்நடை வாங்க எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
பரிகாரம்: அம்பாளை வழிபட்டால். தாயாக இருந்து தலைமேல் தாங்குவாள்.
பரிகாரப்பாடல்:
கார் ஒழுகும் குழலாளைக் கருணை வழிந்து
ஒழுகும் இரு கடைக் கண்ணாளை
மூரல் இளநிலவு ஒழுகப் புழுகு ஒழுக
அழகு ஒழுகும் முகத்தினாளை
வார் ஒழுகும் தனத்தாளை வடிவு ஒழுகி
தெரியாத மருங்கு லாளைச்
சீர்ஒழுகும் பதத்தாளை அருணை உண்ணா
முலையாளைச் சிந்தை சேர்ப்போம்.

No comments:

Post a Comment