Saturday 4 January 2014

2014 ரிஷபம்: 1+1=2 ஊர்க்கணக்கு 1+1=4 உங்க கணக்கு

Source: www.dinamalar.com
 

Temple images
வெற்றி சிகரத்தை நோக்கி வீறுநடை போடும் ரிஷபராசி அன்பர்களே! 

சுக்கிரன் உங்கள் ஆட்சி நாயகன். எனவே நீங்கள் கலை அம்சங்கள் நிறைந்தவராகவும் கலைத் துறையை ரசிப்பவர்களாகவும் இருப்பீர்கள். மென்மையான அணுகுமுறையை கொண்டவர்கள். இந்த ஆண்டு சுக்கிரன் தனது நட்பு வீடான மகரத்தில் இருக்க மலர்கிறது. அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவார். பெண்களால் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் சிறக்கும். முக்கிய கிரகங்களின் நிலையை கொண்டு  பார்த்தால் கடந்த ஆண்டு முற்பகுதியில் சுமாரான பலனை பெற்றிருப்பீர்கள். ஆனால் பிற்பகுதியில் முன்னேற்றத்திற்கான வழியை கண்டிருப்பீர்கள். இந்த ஆண்டு முன்னேற்றங்கள் காத்திருக்கின்றன. சிறு முயற்சிக்குக் கூட பன்மடங்கு பலன் கிடைத்திடும்.  கடந்த ஆண்டு பிற்பகுதியில் குருபகவான்  உங்கள் ராசிக்கு 2-ம் இடமான மிதுனத்திற்கு வந்தார். குடும்பத்தில் இருந்து வந்த கருத்துவேறுபாடு, மனவருத்தம் போன்றவை மறைந்து மகிழ்ச்சி உருவாகும். மேலும் குருவால் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறி துணிச்சல் மனதில் பிறந்திருக்கும். நல்ல பண வரவு இருக்கும். நெடுநாளாக வாங்க நினைத்து பொருட்களை வாங்கலாம்.மற்றவர்களுக்கு ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றால், உங்கள் கணக்கு நான்காக இருக்கும் வகையில் லாபம் வரும்.  குருபகவானின் இந்த நற்பலன்கள் இந்த ஆண்டும் தொடரும். ஆனால் குருபகவான் ஜூன் 12-ந் தேதி உங்கள் ராசிக்கு 3-ம் இடமான  கடகத்திற்கு செல்கிறார். அதன்பின் குருபகவானின் நன்மைகள் கிடைக்காது. குறிப்பாக உங்கள்  முயற்சியில் தடை ஏற்படலாம். வேலையில் பின்தங்கிய நிலை உருவாகலாம். ஆனால் குருபகவானின் மூன்று பார்வைகளால் நன்மை கிடைக்கும். 5-ம் இடத்துப் பார்வை 7-ம் இடமான விருச்சிகத்தில் விழும். அதனால் மதிப்பு செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து  முடிக்கலாம். 7-ம் இடத்துப் பார்வை 9-ம் இடமான மகரத்தில் விழுகிறது. அதன்மூலம் வளர்ச்சியைக் காணலாம். பொருளாதார வளம் சிறப்படையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 9-ம் இடத்துப்பார்வை 11-ம் இடமான மீனத்தில் விழுகிறது. இது வேலையில் முன்னேற்றத்தை தரும்.  சனிபகவானின் நன்மைகள் இந்த ஆண்டு  முழுவதும் தொடர்ந்து கிடைக்கும். அவர் உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான துலாமில் இருந்து  முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறலாம். நிழல் கிரகமான ராகு தற்போது 6-ம் இடமான துலாமில் உள்ளார். சனிபகவானுடன் இணைந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். காரிய அனுகூலத்தை  தருவதோடு, திறமையையும் அதிகரிக்கச் செய்வார். ஜூன் 20ல் ராகு கன்னிக்கு செல்கிறார். 5-ம் இடமாக அங்கு அவரால் நன்மை தர இயலாது. அவரால் குடும்பத்தில் சில பிரச்னைகள் உருவாகலாம்.  இன்னொரு நிழல் கிரகமான கேது  தற்போது 12-ம் இடமான மேஷத்தில் உள்ளார். இங்கு அவர் உடல்  நலத்தில் உபாதைகளை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் ஜூன் 20ல் அவர் 11-ம் இடமான மீனத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு நன்மைகளை தருவார். அவரால் குடும்பத்தில் மகிழ்ச்சியும்,  செயலில்வெற்றியும் கிடைக்கும். இந்த ஆண்டு பிற்பகுதியில் குருபகவான் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும்,  அவரால் நன்மைகள் கிடைக்கும். அதேபோல் ஆண்டின் முற்பகுதியில் ராகு செய்த நன்மைகளை பிற்பகுதியில் கேது செய்வார். பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இருப்பதால், இந்த ஆண்டு பொற்காலமாக அமையும். ஜூலை16 முதல் செப். வரை செவ்வாயால் நன்மையை எதிர்பார்க்கலாம். அந்த காலத்தில் புதிய நிலம் வாங்கும் யோகம்  உண்டாகும். சிலருக்கு புதிய வீடு கட்டவும்  வாய்ப்புண்டு. சிலர் தற்போதுள்ள வீட்டை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவீர்கள். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

தொழில் வியாபாரம்: 
 தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்கி, ஆதாயத்தை அதிகரிக்கச் செய்வர். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் கிடைக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு பயணம் சென்று வர நேரிடும். வியாபாரிகள் புதிய உத்திகளைச் செயல்படுத்தி, வாடிக்கையாளரைக் கவர்ந்திழுப்பர். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

பணியாளர்கள்:  பணியில் நல்ல முன்னேற்றம் காத்திருக்கிறது. சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். ஜூலை 16 முதல் செப். வரை செவ்வாய் சாதகமான நிலையில் இருக்கிறார். இந்த காலம் போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

கலைஞர்கள்:  புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். பண வரவு சிறப்பாக இருக்கும். புகழ், பாராட்டு வந்து சேரும்.

பெண்கள்: குடும்பத்தில் வசதி அதிகரிக்கும். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணம் இனிதே நிறைவேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதுமணத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

மாணவர்கள்:  இந்த ஆண்டு சிறப்பான பலனை காணலாம். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் விதத்தில் நன்கு படிப்பர். கல்வியோடு விளையாட்டிலும் சாதனை படைப்பர். அடுத்த கல்வி ஆண்டில் சற்று கவனம் செலுத்தி படிக்க வேண்டியதுஇருக்கும். ஆனாலும் பாதிப்பேதும் ஏற்படாது.

விவசாயிகள்:  முன்னேற்றமான பலனை காணலாம். புதிய சொத்துக்களை வாங்கலாம். வழக்கு விவகாரம் சாதகமாக இருக்கும். கைவிட்டுப்போன சொத்து, பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் வரு மானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு லாபம் பெறுவர்.

பரிகாரம்:இந்த ஆண்டு தொடக்கத்தில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சித்ரபுத்திர நாயனாரை வணங்குங்கள். சிவபெருமானை தரிசனம் செய்வதால் நன்மை  அதிகரிக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு குரு பகவானுக்கும், ராகுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் ஏழைக்குழந்தைகள் படிக்கவும் இயன்ற உதவியைச் செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

No comments:

Post a Comment