Saturday 4 January 2014

2014 விருச்சிகம்: வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

Source: www.dinamalar.com


 
எதிலும் போராடி வெற்றி காணும் விருச்சிகராசி அன்பர்களே!

நீங்கள் சுறுசுறுப்புக்கு பெயர்போனவர்கள். ராசி நாயகன் செவ்வாய் 11-ம் இடத்தில் சிறப்பான  நிலையில் இருக்க இந்த ஆண்டு பிறக்கிறது. அவரால் செயல்பாடுகளில் வெற்றி ஏற்படும். நாளைய தலைமுறை கூட, உங்கள் வெற்றி குறித்து பெருமையாக பேசுமளவுக்குரிய நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், மேலும், முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த ஆண்டு நன்மைகள் அதிகரிக்கவே வாய்ப்பு உண்டு. குரு பகவான்,  தற்போது 8-ம் இடமான மிதுனத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை அல்ல. 8-ல் குரு பகவானால் வீண் மனவேதனை உருவாகி இருக்கும்.  பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக  இருந்திருக்க மாட்டார்கள். அதேநேரம் குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் அந்த இடர்ப்பாடுகள் சற்று குறைந்திருக்கும். தடைகள் அனைத்தும்  முறியடிக்கப்படும். உங்களது ஆற்றல் மேம்படும். பணவரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். குரு பகவான் மார்ச் 12 வரை வக்கிரம் அடைந்து உள்ளார். அதுவரை அவரால் கெடுபலன்கள்  நடக்காது. இந்த நிலையில் குருபகவான், ஜூன் 12ல், 9-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். இது மிகச் சிறப்பான இடம். அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். ஏழரைச் சனியின் ஆதிக்கம் குறையும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள்  உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. மேலும், குருவின் 9-ம் இடத்துப் பார்வையாலும் நன்மை கிடைக்கும். அவர் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் அவர் அதே இடத்தில்தான் இருப்பார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். சனிபகவான்  சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரின் 7-ம் இடத்து பார்வை 6-ம் வீடான மேஷத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். மேலும் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை சனிபகவான்  வக்கிரம் அடைகிறார். இந்த  காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே! மேலும் அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. நிழல் கிரகமான ராகு,  தற்போது சனிபகவானுடன் இணைந்திருக்கிறார். அவருடன் சேர்ந்து பிற்போக்கான பலனையே தருவார். ஆனால், அவர்கள் மீது குருவின் பார்வை விழுவதால் கெடுபலன்கள் தாக்கம் இருக்காது. மேலும் ஜூன் 20ல், ராகு இடம்மாறி 11-ம் இடமான கன்னிக்கு செல்கிறார். அங்கு சென்ற பின் நன்மைகள் தருவார். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக  உறுதுணையாக இருப்பர்.  இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 6-ம் இடத்தில் இருப்பது உங்களுக்கு சிறப்பானது.  அவரால் பொன்னும் பொருளும் தாராளமாக  கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். ஜூன் மாதம் 20-ந் தேதி அவர் இடமாறி மீனத்திற்கு  வருவார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு  அவரால் சில தொல்லைகள் வரலாம். உடல்நலம் லேசாகப் பாதிக்கப்படலாம். மேற்கண்ட நிலையை பார்க்கும்போது ஆண்டின் தொடக்கத்தில் கேதுவாலும், பிற்பகுதியில் குரு  மற்றும் ராகுவாலும் நன்மை நடக்கும். அந்த வகையில் பொருளாதார நிலைமை தொடர்ந்து சிறப்பாகவே இருக்கும். உங்களின் முயற்சி வெற்றி அடையும். மதிப்பு, மரியாதை ஆண்டின் முற்பகுதியில்  சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். ஆனால், ஜூன் மாதம் முதல்  செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தம்பதியினரிடையே அன்பு  நீடிக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் ஜூன் மாதம் முதல் தடையின்றி நடக்கும். புதிய வீடு வாங்கலாம்.

தொழில், வியாபாரம்: அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். அரசின் உதவி ஜூனுக்கு பிறகு கிடைக்கும். புதிய தொழிலை தவிர்க்கவும். பணவிஷயத்தில் எந்த கஷ்டமும் வராது. அதே நேரம் சில விரயங்கள் வரலாம்.

பணியாளர்கள்: சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. எதிர்பார்த்த உயர் பதவி, ஜூன் மாதத்திற்குப் பிறகு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். வேலையின்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் மேம்பாடு காண்பர்.

கலைஞர்கள்: அதிகபட்சமாக சான்ஸ் கிடைக்காவிட்டாலும், இருப்பதைக் கொண்டு சாதித்து விடலாம். பணவரவு சரளமாக இருக்கும்.

பெண்கள்: உங்களுக்கு சேர வேண்டிய பழைய பாக்கி கிடைக்கும். இரவல் அல்லது காணாமல் போன முக்கிய பொருள் திரும்ப வந்து விட வாய்ப்புண்டு. புதிய நகை வாங்கலாம். உங்கள்  பெயரில், கணவர் சொத்து  வாங்கிக் கொடுக்க வாய்ப்புண்டு. திருமணமாகாதவர்களுக்கு ஜூனுக்குப் பிறகு நிச்சயமாகும்.

மாணவர்கள்: நன்றாகப் படிப்பீர்கள். ஜூன் வரை கவனச்சிதறல் கூடாது. இந்த காலகட்டத்தில் தான் தேர்வுகள் நடக்கும் என்பதால், நண்பர்களுடன் அரட்டை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத்  தவிர்க்கவும்.

விவசாயிகள்: மகசூல் நன்றாக இருக்கும். நவீன விவசாயக் கருவிகள் வாங்குவீர்கள். புதிய நிலம் வாங்கும் போது பத்திரங்களைக் கவனமாகப் படிக்கவும்.

பரிகாரம்:நரசிம்மர் வழிபாட்டால் நல்லது நடக்கும். தொடர்ந்து சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் திருநள்ளாறு, தேனி குச்சனூர், மதுரை திருவாதவூர் ஆகிய ஏதாவது ஒரு தலத்திற்கு சென்று வரலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஞானிகள், மடங்களுக்கு காணிக்கை கொடுங்கள்.

பரிகாரப் பாடல்:
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்
வாயிலோர் ஆயிர நாமம்,
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக்கு
ஒன்றுமோர் பொறுப்பில னாகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப்
பிறையெயிற்று அனல்விழிப் பேழ்வாய்,
தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே

No comments:

Post a Comment