Saturday 4 January 2014

2014 MAKARAM மகரம்

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)
பார்க்கும்  குருவை  பலப்படுத்தினால்  யோகம்!
செய்த உதவியை கடைசிவரை மனதில் வைத்துக் கொண்டு நன்றி காட்டும் மகர ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு பெருமைகளை குவிக்கும் விதத்தில் உங்கள் ராசிநாதன் சனியின் உச்சத்தோடு பிறக்கிறது. எனவே, தொழில் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கப் போகிறீர்கள். உழைப்பின் பயனால் உயர்ந்த நிலையை அடையும் விதம், குருப்பெயர்ச்சியும் இந்த ஆண்டில் நிகழவிருக்கிறது.
சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து அதன் நேர் பார்வையை உங்கள் ராசியின் மீது குரு பதிக்கும் பொழுது கொற்றவரும், மற்றவரும் பாராட்டுவர். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆண்டின் தொடக்கத்தில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். 12–க்கு அதிபதியான குரு வக்ரம் பெறும் பொழுது விபரீத ராஜயோக அடிப்படையில் பலன் கொடுப்பார்.
செவ்வாய் 9–ல் சஞ்சரிக்கிறார். விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன் ஆகிய மூன்றும் சஞ்சரித்து, ராசியிலேயே சுக்ரன் வக்ரம் பெறும் நேரத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. சுக்ரன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குழந்தைகள் வழியில் வருடத் தொடக்கத்தில் செலவு கூடுதலாக இருக்கும். குடும்பச் சுமை கூடும்.
கிரகங்களில் அதிக வலிமையானவர் சனி பகவான். ‘ஆயுள்காரகன்’ என்று போற்றப்படுபவர். அவரை ராசிநாதனாகப் பெற்ற நீங்கள் சிறந்த உழைப்பாளிகளாக இருப்பீர்கள். நிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு மத்தியில் நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக          விளங்குவீர்கள்.
உதவி செய்தவர்களுக்கு நன்றிகாட்டத் தயங்க மாட்டீர்கள். குடும்பத்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்களின் பட்டியலில் இடம் பெறுவீர்கள். உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் ராசிநாதன் சனி உச்சம் பெறுகிறார். அவரோடு ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால் தொழில் மேன்மையுண்டு. வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். வக்ர வியாழனின் ஆதிக்கத்தால் திட்டமிடாமல் செய்த காரியங்கள் வெற்றி பெறும். தேக நலனும் சீராகும்.
செவ்வாய் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதி 9–ல் சஞ்சரிக்கும் பொழுது வீடுகட்டும் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். நீண்ட நாட்களுக்கு முன்பு வாங்கிப்போட்ட இடம் விற்பனையாகி மகிழ்ச்சியை வழங்கும். சகோதரர்கள் சகாயமாக நடந்து கொள்வார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.
சந்திர பலம் குறைவாக இருப்பதால் தாய் வழி உறவினர்களின் பகையை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தொல்லை ஏற்பட்டு வைத்தியச் செலவை உருவாக்கலாம். இடமாற்றம் செய்வதாக முடிவெடுத்து பிறகு பின்வாங்கி விடுவீர்கள். ராகு–கேதுக்களின் ஆதிக்கம் மாறுவதற்குள் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொண்டால் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படாது. ஆதாயமும் அதிக   ரிக்கும்.
சந்தோஷம் தரும் சனிப்பெயர்ச்சி!
இதுவரை சனி உங்கள் ராசிக்கு 10–ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரித்து வந்தார். இந்தப் புத்தாண்டின் கடைசியில் அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் விதத்தில் தொழிலில் லாபம் அதிகரிக்கும். இளைய சகோதரத்தோடு ஏற்பட்ட பகை மாறும்.
அந்தச் சனியின் பார்வை உங்கள் ராசியிலேயே பதியப் போவதால் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதுமட்டுமல்லாமல் ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியப் பாதிப்பிலிருந்து அகல வழி பிறக்கும்.
ஐந்தாமிடத்தில் சனியின் பார்வை பதிவதால் பிள்ளைகள் வழியில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரிய நிகழ்வுகள் இப்பொழுது நடைபெறத் துவங்கும். கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினையும் நல்ல முடிவிற்கு வரும்.  இக்காலத்தில் சனியின் வழிபாடு சஞ்சலம் தீர்க்கும்.
குருவக்ரமும், சனி வக்ரமும்!
குருவின் வக்ரமும், சனி வக்ரமும் வரும் புத்தாண்டில் நிகழவிருக்கிறது. குருவின் வக்ரம் உங்களுக்கு நன்மை தரும் விதத்தில் அமையும். காரணம் குரு உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். சனியோ உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்குகிறார். எனவே, இதன் வக்ரம் உங்களுக்குப் பல இடையூறுகளை வழங்கலாம். இக்காலத்தில் அமைதியைக் கடைப்பிடித்து வந்தால் தான் ஆனந்தத்தை வரவழைத்துக் கொள்ள இயலும்.
மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு!
மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் ஆண்டாக அமையப் போகிறது. சுப விரயங்கள் அதிகரிக்கும். சுகங்களும், சந்தோஷங்களும் குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் வந்து சேரும்.
ஜூன் மாதம் 13–ம் தேதிக்கு மேல் உங்கள் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புகழ்கூடும்.  கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்ல பெயர் எடுத்துக்கொள்வர். குறைகள் தீர அப்போதைக்கப்போது ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வருடக் கடைசியில் உங்கள் லட்சியங்கள் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஆச்சரியப்படத்தக்க பொறுப்புகள் வந்து சேரும். ராகு–கேதுக்களுக்கு பிரீதியும், குரு வழிபாடும் செய்வது உங்களுக்கு நன்மையை வழங்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
இந்தப் புத்தாண்டு பொன் கொழிக்கும் ஆண்டாக மாற சனிக் கிழமை தோறும் சனீஸ்வர வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோகபலம் பெற்ற நட்சத்திரம் சேரும் நாளில் சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் வைரவன் பட்டியிலுள்ள வைரவர், வளரொளிநாதர், வடிவுடையம்மனை வழிபட்டு வளர்ச்சியைக் கூட்டிக்கொள்ளுங்கள்.
யோகம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை மேஷத்தில் சஞ்சரித்து வந்த கேதுவும், துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், ஜூன் 21–ம் தேதி பெயர்ச்சியாகி பின்னோக்கிச் செல்கிறார்கள். உங்கள் ராசிக்கு 3–ல் கேதுவும், 9–ல் ராகுவுமாக சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். அரசு வழி அனுகூலம் கிடைக்கும். பங்காளிப் பகை மாறும்.
மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். தந்தை வழி உறவில் விரிசல் அகலும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதிலிருந்த மனஸ்தாபம் மாறும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்களை வாங்கும் எண்ணம் வரும்.
கேதுவின் ஆதிக்கத்தால் கூட்டு முயற்சியில் மாற்றம் செய்வீர்கள். உதாசீனப்படுத்திய உடன்பிறப்புகள் உங்களிடம் வந்து உதவி கேட்பர். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறிநிலை இருக்கும். உடன்பிறப்புகளில் ஒரு கோஷ்டியினர் விலகிச் செல்லலாம். மற்றொரு கோஷ்டியினர் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவர். துர்க்கை வழிபாடு துணிவும், தன்னம்பிக்கையும் வழங்கும்.
குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி!
இதுவரை 6–ம் இடத்தில் சஞ்சரித்து ஆதாயத்தை அளவோடு கொடுத்து வந்த குரு பகவான் இந்த புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சப்தம  ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். குருவின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். நிச்சயித்த கல்யாணங்கள் நிச்சயித்தபடியே நடைபெறும்.
‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதற்கிணங்க அதன் அருட்பார்வை பதியும் ராசிகளில் உங்கள் ராசியும் ஒன்றாக இருப்பதால் கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.   காவல் துறையில் ஏற்பட்ட கலக்கம் அகலும்.  கோவில் திருப்பணிக்கு அள்ளிக் கொடுப்பீர்கள். குடும்பச் சுமை குறையவும் வழிவகுப்பீர்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிகப் பொறுப்புகளும், பதவி வாய்ப்புகளும் வந்து சேரும். இலாகா மாற்றங்கள் உங்களுக்கு இனிமை தரும்.
உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கடன் சுமை படிப்படியாகக் குறையும். குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். மின்சாதனப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்கால முன்னேற்றம் கருதி ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும்.
இதுபோன்ற காலங்களில் திசைமாறிய தென்முகக் கடவுளை சேவித்து வழிபட்டு வருவது நல்லது.  அதுமட்டுமல்லாமல் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து உள்ளூரில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு மல்லிகைப்பூ அல்லது முல்லைப் பூ மாலை சூட்டி, மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி, சுண்டல் நைவேத்தியமிட்டு, 16 முறை பிரகாரம் சுற்றி வந்தால் வெற்றி வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கும்.

No comments:

Post a Comment