Saturday 4 January 2014

2014 THULAM துலாம்

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)
விலகப் போகிறது  ஜென்மச் சனி!
ஒப்பனை செய்து கொள்வதிலேயே எப்பொழுதும் விருப்பம் கொள்ளும் துலாம் ராசி நேயர்களே!
இப்பொழுது வரப்போகிற புத்தாண்டு உங்களுக்கு ஏராளமான நற்பலன்களை வழங்கப் போகின்றன. காரணம் சனியின் ஆதிக்கம் வருடக் கடைசியில் விலகுகிறது. ஜென்ம ராகுவும் 12–ம் இடத்தை நோக்கிச் செல்கிறது. சப்தம கேது 6–ல் சஞ்சரிக்கப் போகிறார். இதற்கிடையில் 10–ல் குரு பெயர்ச்சியானாலும் கூட அதன் பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கப் போகிறது. எனவே இந்தப் புத்தாண்டு பொன்    கொழிக்கும் ஆண்டாக அமையப் போகிறது.
ஜென்மச் சனியின் ஆதிக்கமும் விரய ஸ்தானத்தில் செவ்வாயின் பலமும் கூடுதலாக உள்ளது. தனாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசிநாதன் சுக்ரன் வக்ரம் பெற்றிருக்கிறார். ஜென்மத்தில் ராகுவும், 7–ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.  
பொதுவாக உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் உடலை அலங்கரித்துக்கொள்வதிலும், உன்னதமாகப் பேசி மற்றவர்கள் மனதைக் கவர்வதிலும் கெட்டிக்காரராக விளங்குவீர்கள். நல்ல சந்தர்ப்பங்களை விடக்கூடாது என்று நினைப்பீர்கள்.
எதையும் மேலோட்டமாக பார்க்காமல், ஆழ்ந்து பார்ப்பது உங்கள் அதிசய குணம். அடிமைத் தொழில் உங்களுக்குப் பிடிக்காது. மற்றவர்கள் உங்களை அடக்கி வைக்க நினைத்தால் அவர்களை இரண்டில் ஒன்று பார்த்து விடுவீர்கள்.  
இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த 2014 புத்தாண்டு எப்படிப்பட்ட பலன் தரும் என்பதை பார்க்கலாம்.  
1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். எனவே, ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். உழைப்புக் கேற்ற பலன் கிடைக்க வேண்டுமானால் ராசிநாதன் பலம் பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில் குரு வக்ரம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பது ஒரு வழிக்கு நன்மைதான்.
வழக்குகளில் வெற்றி கிட்டும். வளர்ச்சிக்கு வித்திட உறவினர்களும், உடன்பிறப்புகளும் ஒத்துழைப்புச் செய்வர். வீடுமாற்றம், இடமாற்றங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கம் உங்கள் ராசியிலும், 7–ம் இடத்திலும் இருப்பதால் எதையும் தீர்க்கமாக முடிவெடுக்க இயலாது. எனவே, வருடத் தொடக்கத்தில் கொஞ்சம் பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
மற்றவர்களின் பேச்சை நம்பி செயல்பட்டு வீண் விரயங்களையும் ஒரு சிலர் சந்திக்க நேரிடும்.
விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த சனி பகவான் இந்த ஆண்டு கடைசியில் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இது உங்களுக்கு மிகுந்த நன்மையை வழங்கும். பொதுவாக ஏழரைச் சனியில் குடும்பச் சனி நடைபெறும் பொழுது, குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடை      பெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். வளமான தொழில் அமைய நண்பர்கள் வழிகாட்டுவர். உறவினர் பகை அகல எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஒரு சிலருக்கு வந்து சேரலாம். இடம், பூமி வாங்கி வீடு கட்டும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. இல்லத்தில் நீண்ட நாட்களாக நடைபெற வேண்டிய சுபகாரிய நிகழ்வுகள் படிப்படியாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
ஆரோக்கியத்திற்காக ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகலாம். சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனிக்கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது.
குரு மற்றும் சனியின் வக்ர காலம்!
புத்தாண்டில் குருவின் வக்ரமும், சனியின் வக்ரமும் நிகழவிருக்கிறது. பொதுவாகவே ஒரு சில கிரகங்கள் வக்ரம் பெறும்பொழுது நன்மையே செய்யும். ஒரு சில கிரகங்கள் வக்ர இயக்கத்தின் போது செயல்பாடுகளில் கொஞ்சம் தாமதத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உங்கள் ராசியைப் பொறுத்த வரை குருவின் வக்ர காலம் உங்களுக்கு நன்மை தரும் விதத்திலேயே இருக்கும்.
அதே நேரத்தில் சனியின் வக்ர காலத்தில் சஞ்சலங்கள் குடிகொள்ளும். விரயம் கூடுதலாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். பிள்ளைகள் வழியிலும் ஏற்பாடு செய்த முயற்சிக்கு இடையூறுகள் வந்து அகலும்.
துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு!
துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு புதிய வாய்ப்புகளை வரவழைத்துக் கொடுக்கப் போகிறது. ஜென்மச் சனி விலகப் போகிற நேரம் என்பதால், நன்மையை அதிகம் எதிர்பார்க்கலாம். 10–ல் சஞ்சரிக்கும் குரு பலம் பெறுவதால், முத்தாய்ப்பாக தொடங்கும் தொழிலுக்கு மூலதனம் கிடைக்கும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகம், தொழிலில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றம், இலாகா மாற்றம் உருவாகலாம். வெற்றிக்குரிய செய்திகள் வருடக் கடைசியில் வந்து சேரும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று கனிவு கூடும். குடும்ப உறவில் குழப்பத்தை உருவாக்கியவர்கள் விலகிச் செல்வர். ராகு–கேது பெயர்ச்சியின் விளைவாக ஒரு சிலருக்கு தூர தேசங்களிலிருந்து அழைப்புகள் வரலாம். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய திருமால், திருமகள், ஆஞ்சநேயர் வழிபாட்டோடு ராகு–கேது பிரீதியும் செய்வது நல்லது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோகபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நேரத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் பி.அழகாபுரியில் வீற்றிருந்து அருள்வழங்கும் மகிஷாசுர மர்த்தினியின் அவதாரமான பொன்னழகியம்மனை வழிபட்டு பொருள் வளம் பெருகும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
நலம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசியில் ராகுவும், 7–ல் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்தப் புத்தாண்டில் ராகு–கேது பெயர்ச்சி ஜூன் 21–ம் தேதி நிகழவிருக்கிறது. 12–ல் ராகுவும், 6–ல் கேதுவும் மாறப் போகிறார்கள். இதன் விளைவாக வருடத்தொடக்கத்திலேயே நற்பலன்கள் வந்து சேர, யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்தியை செய்வது நல்லது.
மறைந்த கேதுவால் நிறைந்த தன லாபம் கிடைக்கும் என்றாலும், விரயங்களும் கூடுதலாகவே இருக்கும். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். ஒருசிலருக்கு அந்நிய நாடு, அந்நிய மாநிலங்களுக்கு உத்தியோக ரீதியாக செல்லும் வாய்ப்பு கிட்டும். எதிரிகளின் பலம் குறையும். தொழில் கூட்டாளிகளை மாற்ற முன்வருவீர்கள். புதிய தொழில்தொடங்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்பவர்களுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தோடு குதூகலப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அருமைப் புதல்வர்களால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். குழந்தைகளின் திருமணத்தை முன்னிட்டு ஆபரணங்களை வாங்க முன்வருவீர்கள். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது.
குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெறப் போகிறார். இதுவரை 9–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் இப்பொழுது 10–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த நிகழ்வு ஜூன் 13–ம் தேதி நிகழவிருக்கிறது. 10–ல் குரு வந்தால் பதவி மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகும் என்பது ஒரு நியதி. அவரவர் சுய ஜாதகத்தைப் பொறுத்தும், திசாபுத்தி அடிப்படையிலும் அது நிகழலாம்.
3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கடன்களை வாங்க வைப்பவரும் குரு தான். அதே நேரத்தில் கடன்களை நிவர்த்தி செய்ய வைப்பவரும் குரு தான். எதிர்ப்புகளை உருவாக்குவதும் குரு தான். அந்த எதிரிகளை சம்ஹாரம் செய்ய வைப்பவரும் குரு தான். 10–ல் வந்த குருவை வரவேற்றுக் கொண்டாடி, பதிகம் பாடி வழிபட்டால் முத்தான வாழ்க்கைக்கு முன்னேற்றத்தை வழங்குவார்.
பொதுவாக குரு இருக்குமிடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகமல்லவா? எனவே அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, குருவின் பார்வை பதியுமிடங்களான 2, 4, 6 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் தீரும். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். சேமிப்பின் மூலம் தங்கம், வெள்ளி ஆபரணங்களையோ, இடம், பூமிகளையோ வாங்க முன்வருவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும்.
தாய்வழி ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர். நடந்து வரும் தொழிலில் ஈடுபாடு குறையலாம். நாகரீக தொழில்களில் மோகம் அதிகரிக்கும். கடந்து வந்த பாதைகளிலிருந்த  குறுக்கீடுகள் அகலும். காலம், காலமாக பகைமை உணர்வோடு விலகியிருந்த உறவினர்கள் இப்            பொழுது உங்களை தேடி வந்து ஆச்சரியப்பட வைப்பர். ரேஸ் குதிரையைப் போல உங்கள் மனவேகம் அதிகரிக்கும். செயல்வேகம் கூடும். திறமை பளிச்சிடும். திசைமாறிய தென்முகக் கடவுளை முறையாக  வழிபடுவது முன்னேற்றத்திற்கு வித்திடும்.

No comments:

Post a Comment