Saturday 4 January 2014

2014 தனுசு: ஆள்பார்த்து பழகுங்க! ஆனந்தமாய் சிரியுங்க!


Source: www.dinamalar.com


 
பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் தனு” ராசி அன்பர்க@ள!

வாய் சாமர்த்தியத்திலேயே காரியம் சாதித்து விடும் திறமை கொண்ட நீங்கள், கொண்ட  குறிக்கோளில் இருந்து சிறிதும் விலகாதவர்கள். ஆன்மிக செயல்களில் அதிகமாக ஈடுபடுவீர்கள். உங்களுக்கு இந்த ஆண்டு முற்பகுதியில் அதிக நன்மைகள் நடக்கும். குருபகவான் 7-ம் இடத்தில் இருப்பது மிகவும் சிறப்பு. ஆண்டின் தொடக்கமே குருவின் பக்க பலத்தோடு தொடங்குகிறது. அவர் மூலம் உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்ததை நிறைவேற்றலாம். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார வளம் மேம்படும். வீடு மனை வாங்கலாம். மேலும், குரு பகவானின் 5-ம் இடத்துப்பார்வையும் சாதகமாக விழுகிறது. பொருளாதார வளம் மேம்படும்.  இந்த நிலையில் குருபகவான் ஜூன் மாதம்  20ல், 8-ம் இடமான கடகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. அங்கு அவரால் வீண் மன குழப்பம் வரலாம். பணவிரயம் ஆகலாம். இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து  பார்வைக்கு தனி சக்தி உண்டு. மகர ராசியில் விழும் அந்த பார்வை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் என்பது ஜோதிட வாக்கு. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறு வந்தாலும், அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என்று நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். அப்படியே குரு சிற்சில இடையூறுகள் தந்தாலும், அது உங்களுக்கு பாடம்  புகட்டுவதுபோலத்தான் இருக்குமே அன்றி, தண்டனை கொடுப்பதாக அமையாது. சனிபகவான், தற்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான துலாமில்  இருக்கிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளைத் தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம்  காணலாம். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் அதே இடத்தில் நின்று நன்மைகளை தருவார். சனிபகவான் மார்ச் 4-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை வக்கிர நிலையில் இருப்பார். சாதகமாக இருக்கும் கிரகம் வக்கிரமாகும் காலத்தில் மட்டும் அவரால் நன்மைகள் சற்று குறையும். நிழல் கிரகமான ராகு, தற்போது 11-ம் இடமான துலாமில் சனிபகவானோடு இணைந்து இருக்கிறார். அவரோடு இவரும் சேர்ந்து நன்மை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். ஜூன்20ல், ராகு 10-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு பொல்லாப்பையும், பெண்கள் வகையில் தொல்லைகளையும் தரலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 5-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால் எதிரிகளின் தொல்லை வரலாம். உடல்நலம் லேசாகப் பாதிக்கப்படலாம். அதிலும், பிள்ளைகள் நலனில் அக்கறை தேவைப்படும். கேது ஜூன் 20ல் 4-ம் இடமான மீனத்திற்கு மாறுகிறார். அதன் மூலம் சேர்க்கை சகவாசம் உங்களைக் கெடுக்கும் நிலையுண்டு. நல்ல  நண்பர்களிடம் கூட கவனமாக இருக்கவும். இந்த காலத்தில் ஆள் பார்த்து பழகினால், ஆனந்தமாய் சிரித்தபடியே காலத்தை ஓட்டலாம். உடல்நிலையில் பாதிப்பு வரலாம். குறிப்பாக, வயிறு பிரச்னை வரும். பயணத்தின் போது கவனம் தேவை. பொதுவாக இந்த ஆண்டு முக்கிய கிரகங்களின் பலத்தால் சிறப்பான பலனையே காணலாம்.  குறிப்பாக ஆண்டின் முற்பகுதியில் அதிக நன்மைகளைப் பெறலாம். பொருளாதார வளம்  அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும்  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்க்கவும்.  குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். வசதியான  வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஜூன் மாதத்திற்குள்  நடந்தேறும். உறவினர்கள்  வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு  வாங்கும் யோகம் தொடரும். இதற்கான அனுகூலம் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் வரும்.

தொழில், வியாபாரம்: நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். புதிய தொழில் தொடங்கலாம். அரசிடம் இருந்து, ஜூன் மாதத்திற்குள் உதவி கிடைக்கும். சிலர் தீயோர்  சேர்க்கைக்கு ஆளாகி அவதியடைய வாய்ப்பு உண்டு. இனம் தெரியாத நபர்களை நம்ப வேண்டாம். அவர்களிடம் பண விஷயத்திலும் எந்த தொடர்பும் வைக்க வேண்டாம்.

பணியாளர்கள்: வேலையில் நல்ல முன்னேற்றம்  காணலாம். ஆர்வமாகப் பணிசெய்யும் மனோபாவம் வளரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். இந்த அனைத்து நன்மைகளும் ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கும் அதற்குள் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அதன்பின் வேலையில் சற்று பளு அதிகரிக்கலாம். ஜூலை 17 முதல், போலீஸ், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நல்ல  முன்னேற்றம் காணலாம்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஜூன் மாதத்திற்கு பிறகு சற்று முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.

பெண்கள்: உங்களுக்கு ஆண்டின் ஆரம்பத்தில் பணத்திற்கு எந்தக் குறைவும் இல்லை. பின்னால், சிறு சிரமம் வரலாம். நகை வாங்கும் திட்டத்தை ஆண்டின் முற்பகுதியிலேயே முடித்து விடுங்கள். திருமணமாகாதவர்களுக்கு, முதல் ஆறுமாதங்களில் அதற்குரிய வாய்ப்பு உண்டு. பயன்படுத்திக் கொள்ளவும்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றம் காண்பர். அடுத்த கல்வி ஆண்டில் முயற்சி எடுத்து படிக்க வேண்டும்.

விவசாயிகள்: விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால், வளர்ச்சி காண்பர். முதல் ஆறு மாதங்களில் புதிய நிலம், நவீன விவசாயக்கருவிகள் வாங்கும் திட்டம் நிறைவேறும்.

பரிகாரம்: ஆண்டு முழுவதும் கேது சாதகமற்ற நிலையில்  உள்ளதால் அவருக்கு பரிகாரம் செய்யுங்கள்.  சாஸ்தாவை வணங்கி வாருங்கள். சித்திரபுத்திரநாயனாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் நன்மை அதிகரிக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு, குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். கால பைரவரையும் வழிபடுங்கள்.

பரிகாரப் பாடல்:
புலி வாகனனே வருக வருக!
புவியெல்லாம் காத்திட வருக!
பூரணை நாதனே வருக! வருக!
புண்ணியமூர்த்தியே வருக! வருக!
பூதநாயகா வருக! வருக!
புஷ்கலா பதியே வருக! வருக!
பொன்னம்பலத்துறை ஈசா வருக!
பொற்பதம் பிடிப்போம் வருக! வருக!

No comments:

Post a Comment