Saturday 4 January 2014

2014 கன்னி: சக்கை போடு போடுங்க! இனிமே சூப்பர் தானுங்க!

Source: www.dinamalar.com


 
அனைவரிடமும் பண்புடன் நடந்து கொள்ளும் கன்னிராசி அன்பர்களே! 

புதனை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் வாக்கு வன்மையால் பிறரைக் கவருவீர்கள்.  புத்திசாலித்தனமாக பேசுவீர்கள். கடந்த ஆண்டு  நீங்கள் எண்ணற்ற இன்னலுக்கு ஆளாகி  இருப்பீர்கள். இது ஏழரை சனி காலம் என்பதால், உங்கள் கஷ்டம் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இருந்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆண்டு பிற்போக்கான நிலை மாறி வாழ்வின் எல்லா நிலை களிலும் நற்பலனைப் பெற்று மகிழ்வீர்கள்.  உங்கள் ஆட்சி நாயகன் புதன் நட்பு வீடான  தனுசுவில் சாதக நிலையில் இருக்க, இந்த புதிய ஆண்டு பிறக்கிறது. இதனால் பொருளாதார வளம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடந்த ஆண்டு சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான துலாமில் இருக்கிறார். அவரால் குடும்பத்தில் பிரச்னையை சந்தித்து இருப்பீர்கள். பொருள் களவு கொடுக்க நேரிட்டிருக்கலாம்.  இந்த ஆண்டும் சனிபகவான் அதே இடத்தில் தான் இருக்கிறார். இருந்தாலும், சாதகமற்ற பலனை தருவாரோ என்று அஞ்ச வேண்டாம். சனி  பகவானின் 10-ம்இடத்துப் பார்வை மூலம் நற்பலன் மேலோங்கும். குறிப்பாக பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி  நிலைத்திருக்கும். உங்களின் வளர்ச்சிக்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர்.  குரு பகவான் கடந்த ஆண்டு மிதுன ராசியில்  சஞ்சரித்த காலத்தில், பொருள் நஷ்டம், மன சஞ்சலத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இந்த ஆண்டு தொடக்கத்திலும் அவர் அதே இடத்தில் இருக்கிறார் என்றாலும், மார்ச் வரை வக்கிர நிலையில்  இருப்பதால் கெடுபலன் உண்டாகாது. குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் நன்மை அதிகரிக்கும். ஆற்றல் மேம்படும். பண வரவு சீராகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பகைவர்களின் மறைமுக சூழ்ச்சியை  முறியடிப்பீர்கள்.  ஜூன் 12ல் குருபகவான் இடம் பெயர்ந்து கடக ராசிக்கு செல்கிறார். அவரால் நன்மை உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். குருவின் 5, 7 , 9-ம் இடத்துப் பார்வைகளால் நற்பலன்  உண்டாகும். குடும்பத்தில் குதூகலத்தை  காண்பீர்கள். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அதிர்ஷ்ட வசமாக பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை உண்டாகும். 9-ம் இடத்துப்  பார்வையால் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.  ஆடம்பர வசதி மேலோங்கும்.  நிழல் கிரகமான ராகு  தற்போது சனியோடு இணைந்து துலாமில்  இருக்கிறார். இதனால்,  அவரால் நன்மை தர முடியாது. ஆனால் அவர் மீது குருவின் பார்வை விழுவதால்  கெடுபலனைத் தர மாட்டார்கள். ஜூன்20ல் ராகு உங்கள் ஜென்ம ராசியான கன்னிக்கு வருகிறார். அதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இதனால் உடல்நலக்குறைவு, உறவினர் வகையில் மனக் கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு.  நிழல் கிரகமான கேதுவும் தற்போது 8ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இதனால், உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற தொந்தரவு வரலாம். ஜூன் 20ல் கேது 7-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகி றார். அங்கும் அவரால் நன்மை கிடைக்காது. தேவையற்ற அலைச்சலும், மனவேதனையும் ஏற்படலாம். மனைவியுடன் கருத்துவேறுபாடு உருவாகும். அதேநேரம் குருவின் பார்வை கேது மீது விழுவதால் கெடுபலன் ஓரளவு குறையும்.  முயற்சியில் குறுக்கிடும் தடை அனைத்தும் ஜூன் மாதம் முதல் விலகும். புதிய முயற்சியில் வெற்றி ஏற்படும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து மதிப்பு கூடும். உறவினர் மத்தியில்  செல்வாக்கு உயரும்.  குடும்பத்திற்கு தேவையான வசதி அதிகரிக்கும். தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சி ஜூன் மாதத்திற்கு பிறகு கைகூடும். புதிய நிலம் வாங்க அக்டோபர் மாதத்திற்குப் பின் வாய்ப்புண்டாகும்.

தொழில் வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்பட்டாலும், வருமானத்திற்கு குறைவிருக்காது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த சலுகை ஜூன் முதல் கிடைக்கும். யாரையும் நம்பி முக்கிய ஆவணம், பணம் ஒப்படைப்பது கூடாது. தொழில், வியாபார ரீதியான வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். விரிவாக்கம், புதிய தொழில் முயற்சி ஆகியவற்றை ஜூன் மாதத்திற்குப் பிறகு மேற்கொள்வது நன்மை தரும்.

பணியாளர்கள்: பணியில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். வேலை மீதான வெறுப்புணர்ச்சி ஜூன் முதல் இருக்காது. அதன்பின் உயர்ந்த நிலையை காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றத்தைக் கேட்டுப் பெறுவீர்கள்.

கலைஞர்கள்:  சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். முயற்சியின் பேரில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மக்கள் மத்தியில் புகழுடன் திகழ்வீர்கள். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

பெண்கள்:  கணவர் வீட்டாரின் ஆதரவு சீராக கிடைக்கும். பிள்ளைகளால் அவ்வப்போது சிரமம் ஏற்பட்டாலும், அவர்களின் வளர்ச்சி கண்டு  சந்தோஷம் காண்பீர்கள்.  உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு.ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

மாணவர்கள்:  இந்த கல்வி ஆண்டில் சற்று முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலை பின்பற்றி நன்மை காண்பர். கல்வியோடு கலை, விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் உண்டாகும். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் வளர்ச்சி காண்பீர்கள்.

விவசாயிகள்:  விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் ஆதாயம் காண்பர். நவீன உழவுக்கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு லாபம் கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த பணப்பற்றாக்குறை நீங்கும்.

பரிகாரம்:சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர், பெருமாளை வழிபட்டு வாருங்கள். ஜூன் முதல் குரு பகவானுக்கு முல்லை மலர்மாலை சூட்டி அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைப்பான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்.

No comments:

Post a Comment