Saturday 4 January 2014

2014 RISHABAM ரிஷபம்

Source: www.dailythanthi.com

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்?1,? 2 பாதங்கள்? வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
ராகு–கேது மாற்றத்தால் நல்ல மாற்றம் வந்து சேரும்!
தான் மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களும் ஆனந்தமாக வாழ விரும்பும் ரிஷப ராசி நேயர்களே!
புத்தாண்டு பிறக்கப் போகிறது. பொன்னான காலம் வரப் போகிறது. ஞானகாரகன் கேதுவின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. வானளாவிய புகழை வழங்கும் சனி உச்சம் பெற்றிருக்கிறார். வக்ர கதியில் வியாழனும், சுக்ரனும் சஞ்சரிக்கிறார்கள்.
தக்க விதத்தில் பலன் கூறும் தனாதிபதி புதனோ வலிமையிழந்து அஷ்டமத்தில் மறைந்திருக்கிறார். ராகு–கேதுக்கள் 6–லும், 12–லும் இருக்கிறார்கள். இத்தனைக்கும் மத்தியில் இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை உங்களுக்கு வழங்கப் போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாகவே நீங்கள் மற்றவர்களை உற்சாகமூட்டப் பிறந்தவர்கள். ராசிநாதன் சுக்ரனாக இருப்பதால் வசீகர சக்தி உங்களுக்கு உண்டு. உங்களிடம் ஒரு செயலை ஒப்படைத்தால் எப்பாடுபட்டாவது முடித்து விடுவீர்கள். உங்கள் பேச்சில் நகைச்சுவையும் நிறைந்திருக்கும். இடையிடையே பகைச் சுவையும் கலந்திருக்கும். வீரத்தைக் காட்டிலும் விவேகம் கூடுதலாகவே உங்களிடம் குடியிருக்கும்.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட உங்களுக்கு சுயஜாதகத்தில் உள்ள கட்டங்களையும், 2014–ம் ஆண்டு புத்தாண்டு கட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  
2014–ம்  ஆண்டு  கேதுவிற்குரிய ‘7’ எண் ஆதிக்கத்தில் வருவதால் உங்கள் சுய ஜாதகத்தில் கேதுவின் பாதசார பலம் மற்றும் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதன் ஆகியவற்றின் பலமறிந்து பாக்யாதிபதி அம்சத்தி லிருக்கும் நிலையறிந்து அதற்குரிய ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து  யோக பலம்பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தேகநலம் சிறப்பாக இருக்கும். உங்கள் பெயர் எண் ஆதிக்கமும், தொழில் நிலையத்தின் பெயரும் அதிர்ஷ்ட எண் ஆதிக்கத்தில் நீங்கள் அமைத்துக் கொண்டால் வெற்றி தேவதை வீடுதேடி வந்து வரம் தரும்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் ‘வக்ரம்’ பெற்று சஞ்சரிக்கிறார். சுக்ரன் 6–ம் இடத்திற்கு அதிபதியாவதால் வாங்கல்–கொடுக்கல்களில் பற்றாக்குறை ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் உங்களுக்கு விரிவடைந்திருப்பதால் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
தனாதிபதி புதனும், அஷ்டம லாபாதிபதியான குருவும் பரிவர்த்தனை பெற்று வருடம் தொடங்குவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி      வரும். மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சிலருக்கு கூடுதல் பணம் தேவைப்படலாம்.
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரிப்பு திருப்திகரமாகயிருக்கும். புத–ஆதித்ய யோகம் செயல்படுவதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். ராகு பலத்தால் அரசு வேலைக்காக விண்ணப்பித்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் அது கிடைக்கலாம்.
விரய ஸ்தானத்தில் கேது வீற்றிருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, வாங்கல்–கொடுக்கல்களில் ஒழுங்கு செய்து கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். நேர்மையான வழியில் செல்லும் உங்களுக்கு நிகழ்காலத்தேவைகள் பூர்த்தியாவதில் தாமதம் ஏற்பட்டாலும், நண்பர்களின் ஒத்துழைப்புடன் கடைசி நேரத்தில் காரியங்கள் கூடி  விடும்.
எப்படி இருக்கும் சனிப்பெயர்ச்சி?
இதுவரை உங்கள் ராசிக்கு 6–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் உச்சம் பெற்று விளங்கினார். இந்த ஆண்டு கடைசியில் சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. 7–ம் இடத்தில் சஞ்சரித்து கண்டக சனி என்ற பெயரோடு உங்கள் ராசியில் பார்வை பதிக்கப் போகிறது.
உங்கள் ராசியைப் பொறுத்த வரை சனி நற்பலன்களைக் கொடுப்பவர். எனவே  பயப்படத் தேவையில்லை. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீட்டுப் பிரச்சினைகளை மற்றவர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம். நாட்டுப் பற்று மிக்க அரசியல்    வாதிகளுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். கூட்டு முயற்சியில் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்தவர் விலகலாம். குடியிருக்கும் வீட்டாலும், உடன் இருப்பவராலும் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.
குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
குருவின் வக்ர காலம் உங்களுக்கு கொடுக்கல்–வாங்கல்களில் திருப்தியைக் கொடுக்கும். நண்பர்கள் நல்ல காரியம் செய்ய உறுதுணை புரிவர். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். மக்கட் செல்வங்களால் உதிரி வருமானங்கள் கிடைக்கும். அதே நேரத்தில் சனியின் வக்ர காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. குடும்பச் சுமை கூடும். பொறுமை அவசியம்.
ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு!
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பூமியோகம் முதல் புனித யாத்திரைகளை அமைத்துக் கொடுக்கும் யோகம் வரை நல்ல வாய்ப்புகளை வழங்கப்போகிறது. வருடத் தொடக்கத்திலேயே வரவு திருப்திகரமாக இருக்கும். கணவன்–மனைவிக்குள் இருந்த பிணக்குகள் அகலும்.
குருப் பெயர்ச்சிக்குப் பின்னால் குழந்தைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். சிலருக்கு வேலையும் கிடைக்கும், விரும்பியபடியே மணமாலை சூடிக்கொள்ளும் வாய்ப்பும்  உருவாகும். ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் தொழில் தொடங்கும் முயற்சிக்கு பச்சைக்கொடி காட்டுவர். ஆபரண சேர்க்கைக்கு உண்டு. சனிப்       பெயர்ச்சிக்குப் பின்னால் கவனம் தேவை. சர்ப்ப சாந்தியும், அனுமன் வழிபாடும் சஞ்சலம் தீர்க்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
ராசிநாதன் சுக்ரன் என்பதால் வெள்ளிக்கிழமை தோறும் உள்ளூர் கோவில்களுக்குச் சென்று அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதியின் அடிப்படையில் சிறப்பு வழிபாடும், யோகபலம் பெற்ற நாளில் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்     பட்டியிலுள்ள நெய் நந்தீஸ்வரரை வழிபாடும் செய்தால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.
நலம்  தரும்  ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை துலாம் ராசியில் ராகுவும், விரய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்த புத்தாண்டில் ஜூன் 21–ம் தேதி பின்னோக்கிச்சென்று கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவுமாக சஞ்சரிக்கப் போகிறார்கள். பஞ்சம ஸ்தான ராகு உங்கள் பணத்தேவைகளை பூர்த்தியாக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள், சகோதரர்கள் வழி கருத்துவேறுபாடுகள் தீரும். இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு கிடைக்கும்.
கேதுவின் பலத்தால் ஆடம்பர சாதனங்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு மற்றும் எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். உங்களோடு பணிபுரிந்து கொண்டே உங்களுக்கு கெடுதல் செய்தவர்கள் விலகிச்செல்வர். மங்கலகரமான புத்தாண்டில் இந்த ராகு–கேதுப் பெயர்ச்சி மனக்கசப்புகளை மாற்றும். பணப்புழக்கத்தை அதிகரிக்க வைக்கும்.
இருப்பினும் ராகு–கேதுக்கள் முறையான நற்பலன்களை முன்னேற்றம் தரும் விதத்தில் வழங்க சர்ப்ப சாந்தி பரிகாரங்களை நீங்கள் செய்து கொள்வது நல்லது. சுய ஜாதகத்தில் ராகு–கேதுக்களின் பலமறிந்து அதற்குரிய ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று பரிகாரம் செய்வதே நல்லது.
சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு!
புத்தாண்டில் குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. குருவின் ஆதிக்கம் உங்கள் ராசிநாதனுக்குப் பகைவனாக இருப்பதால் அது பார்க்குமிடத்தைப் பலன்தரும் இடமாக மாற்றிக்காட்டி விடும். அந்த அடிப்    படையில் ஜூன் 13–ந் தேதி நிகழவிருக்கும் பெயர்ச்சியால் 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களும் புனிதமடைகின்றது. எனவே திருமண வாய்ப்புகள் கைகூடவில்லை என்று ஏங்கியவர்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் விதத்தில் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். திருமணம் முடிந்து ஒற்றுமையில்லாமல் பிரிந்து இருந்த தம்பதியர்கள் மீண்டும் இணைந்து மகிழ்ச்சிக் கடலில் மிதப்பீர்கள்.
அந்நிய தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலம் தரும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். கண்ணியமிக்க மனிதர்கள் உங்கள் காரிய வெற்றிக்கும், கவலை தீருவதற்கும் உறுதுணையாக இருப்பார்கள். பெற்றோர் வழிப் பிரச்சினைகள் பெரிதாகி விட்டதே என்று கவலைப்பட்டவர்கள் உற்றார், உறவினர்களும், உடன் பங்காளிகளும் உறுதுணையில்லாமல் போய்விட்டார்களே என்று நினைத்தவர்களும் மட்டற்ற மகிழ்ச்சி காணும் விதம் நல்ல மாற்றங்கள் வந்து சேரப் போகிறது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும்.
பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்றவற்றை நடத்தி மகிழ்வீர்கள். குற்றாலம், கொடைக்கானல் என்று உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உருவாகும். ஒரு காலத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகாமல் தடுமாறிய நீங்கள் இப்பொழுது பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா? என்று யோசிக்கப் போகிறீர்கள். வாகனங்கள் வாங்கும்போது அதிர்ஷ்ட எண்களின் ஆதிக்கத்தில் வாங்கினால் அதை ஓட்டிச் செல்லும் இடங்களில் உன்னத பலன் கிடைக்கும். முறையான குரு வழிபாடு முன்னேற்றம் வழங்கும்.

No comments:

Post a Comment