Saturday 4 January 2014

2014 மிதுனம்: தகர்க்கலாம் தடைகளை! மடக்கலாம் எதிரிகளை

Source: www.dinamalar.com

  
உயர்ந்த பண்பின் இருப்பிடமாகத் திகழும் மிதுனராசி அன்பர்களே!

புதனை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் எப்போதும் புத்திசாலித்தனத்தோடு நடந்து  கொள்வீர்கள். அறிவு பூர்வமாக பேசுவீர்கள். அவர் தனது நட்பு வீடான தனுசுவில் இருக்க இந்த ஆண்டு மலர்கிறது. அவர் மூலம் இந்த ஆண்டு முயற்சியில் வெற்றி உண்டாகும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். உத்தியோகத்திலும் உயர்வு உண்டாகும். கடந்த ஆண்டு சனிபகவான் உங்கள் ராசிக்கு, 5-ம் இடமான துலாமில் இருந்து பல்வேறு இன்னல்களை தந்திருக்கலாம். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி இருக்கலாம். அடிக்கடி ஒருவித மன உளைச்சலுக்கு கூட ஆளாகி இருக்கலாம். இந்த ஆண்டும் சனிபகவான் அதே ராசியில் இருந்தாலும், மற்ற கிரகங்களின்  தாக்கத்தினால் நன்மை உருவாகும். சனி பகவான் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை வக்கிரம் அடைகிறார். அப்போது அவரால் கெடுபலன் நடக்காது. மாறாக நன்மையே கிடைக்கும். சனிபகவான் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும், அவரது 7ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளது. இதன் மூலம் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி மனதில் அதிகரிக்கும். பெண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  குருபகவான் தற்போது உங்கள்  ராசியில் வக்கிரம் அடைந்த நிலையில் இருக்கிறார். ராசியில் இருக்கும் போது குருபகவான் மனகலக்கத்தை உருவாக்கலாம். ஒருவித மந்த நிலையும் ஏற்படுத்தலாம். ஆனால் மார்ச் 12 வரை அவர் வக்கிர நிலையில் இருப்பதால் கெடுபலனைத் தரமாட்டார். மேலும், குருவின் அனைத்துப் பார்வைகளாலும்நன்மையே கிடைக்கும். 5-ம் இடத்தின் பார்வையால் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார்.  திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். புது மணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம்கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல வளம் சேரும். 7-ம் இடத்துப் பார்வையால் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். செல்வாக்கு மேம்படும். பணியாளர்கள் பணி உயர்வை காண்பர். 9-ம் இடத்துப் பார்வையால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தம்பதியினர் இடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.  குருபகவான் ஜூன் 12ல் இரண்டாம் இடமான கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன்பின் அவரால் பல நன்மைகள் உண்டாகும். ஆற்றல் மிக்கவராக செயல்படுவீர்கள். தற்போது இருக்கும் மந்த நிலை அடியோடு மாறும். மனதில் தைரியம் பிறக்கும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். எதிரிகளின் சதித்திட்டம் உங்களிடம் எடுபடாது. அவர்களால் ஏற்பட்ட தடைகளையும் தகர்த்து விடுவீர்கள். நிழல் கிரகமான ராகுபகவான் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவானோடு இணைந்து 5-ம் இடமான துலாமில் இருக்கிறார். அவர்களால் குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். ஆனால் குருவின் பார்வை அவர்கள் மீது விழுவதால் கெடுபலன் குறையும். ஜூன் 20ல் ராகு இடம் பெயர்ந்து  கன்னி ராசிக்கு வருகிறார். அங்கு அவரால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது  11-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். அவர் நல்ல பொருளாதார வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை ஏற்படுத்துவார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலை வாரி வழங்குவார். ஜூன் 20ல் அவர் 10-ம் இடமான மீன ராசிக்கு செல்கிறார். அங்கு அவரால் நன்மையை எதிர்பார்க்க முடியாது. அங்கு உஷ்ணம், தோல், தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு.  ஆண்டின் முற்பகுதியில் கேதுவாலும், குருவின்  பார்வைகளாலும் நன்மை கிடைக்கும். பிற்பகுதியில் குருவின் பலத்தாலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.  பொதுவாக இந்த ஆண்டில் குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதியும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே மனக்கசப்பு வந்தாலும் நொடிப்பொழுதில் மறையும். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் திட்டமிட்டபடி நிறைவேறும்.

தொழில் வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் குறுக்கிடும் தடைகளை முறியடித்து விற்பனையைப் பெருக்குவீர்கள். சிலர் வங்கி நிதியுதவி பெற்று, விரிவாக்க முயற்சியை மேற்கொள்வர். தொழில் காரணமாக, ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். எதிரிகள் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் முறியடித்து விடுவீர்கள். நிர்வாகச் செலவு கட்டுக்கடங்காமல் போகலாம். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது.

பணியாளர்கள்: பணியில் நல்ல முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு நல்லமுறையில் கிடைக்கும். சலுகைபயன் படிப்படியாக கிடைக்கும். சிலருக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் எளிதாகக் கிடைக்க பெறுவர். சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அடிக்கடி தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் நிர்பந்தம் உருவாகும்.

பெண்கள்:  குடும்பத் தேவை அனைத்தும் நிறைவேறும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். அக்கம் பக்கத்தினர் விரும்பி நட்பு பாராட்டுவர். கன்னிப்பெண்களுக்கு விரும்பிய மணவாழ்வு அமையும்.

மாணவர்கள்:  இந்த கல்வி ஆண்டில் ஓரளவே படிக்க வாய்ப்புண்டு. முயற்சி எடுத்து படித்தால்  கண்டிப்பாக நற்பலன் கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது.

விவசாயிகள்:  உழைப்புக்கேற்ற வருமானத்தை  காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் மானாவாரி பயிர்கள் மூலமும் பிற்பகுதியில் நெல், கடலை போன்ற பயிர்கள் மூலமும் நல்ல மகசூல் கிடைக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதிதாகச் சொத்து வாங்க வாய்ப்பு உருவாகும். வழக்கு  விவகாரத்தில் சாதகமான பலன் கிடைக்க வாய்ப்பில்லை.

பரிகாரம்:சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி  வழிபடுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு  தயிர் சாதம் படைத்து வழிபடுங்கள்.  ஆதரவற்றவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள். ஜூன் வரை வியாழனன்று குருபகவானை தரிசனம் செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
கலையாரும் முத்தமிழ்க் கல்வியும்
யோகமும் காசினியில்
நிலையாகிய பெருஞ் செல்வமும்
நீதியும் நீயருள்வாய்
மலை யாசன வடுகேச கங்காள வயிரவனே
தலைமாலை சூழ்புயனே காழி
யாபதுத் தாரணனே.

No comments:

Post a Comment