Saturday 4 January 2014

2014 MEENAM மீனம்

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)
ஒன்பதாம்  பார்வை  நம்பிக்கையூட்டும்!
நல்லவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்ளும் தன்மை பெற்ற மீன ராசி நேயர்களே!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த புத்தாண்டு வந்து விட்டது. ஆரம்பத்தில் குரு வக்ரமாக இருந்தாலும் அதன் பின்னர் கடகத்தில் சஞ்சரித்து உச்சம் பெறும் பொழுது அதன் பார்வை முழுமையாக உங்கள் ராசியில் பதியப் போவதால், எல்லா நாட்களும் இனிமையான நாட்களாக அமைய வாய்ப்புக் கிட்டும்.
இருந்தாலும் வருடத் தொடக்கத்தில் குரு வக்ரமாக அல்லவா இருக்கிறார். எனவே, தக்க விதத்தில் பலன் கொடுப்பதில் சில தடைகளும் உருவாகலாம். சிக்கனத்தைக் கையாளும், சூழ்நிலையும், திடீர் மாற்றங்களும், குழந்தைகளால் விரயங்களும், குடும்பச் சுமை கூடுதலும் ஏற்படும் விதத்திலேயே இருக்கிறது.
புத்தாண்டின் தொடக்கத்தில் 2–ல் கேது, 8–ல் ராகு அல்லவா சஞ்சரிக்  கிறார்கள். எனவே, சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ஜாதகம் இருக்கிறது. எனவே, ஆண்டின் தொடக்கத்திலேயே சர்ப்ப சாந்தியைச்செய்து கொள்வது நல்லது. அது மட்டுமல்லாமல் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் அனுமன் வழிபாட்டையும், மேற்கொள்வது நல்லது.  
ஆண்டின் தொடக்கத்தில் ராசிநாதன் குரு வக்ரம் பெற்று புதன் வீட்டில் பரிவர்த்தனை யோகம் அடைகின்றார். தனாதிபதி செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனுக்குப் பகைக் கிரகமான சுக்ரன் வக்ரம் பெற்றிருப்பது யோகம்.
நீங்கள் உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள். ஓசைப்படாமலேயே சில நல்ல காரியங்களைச் செய்வீர்கள். எதிரிகளை இருந்த இடத்திலேயே இருந்து வெல்லும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
தன்னம்பிக்கை குறைகிற பொழுதெல்லாம் தக்க விதத்தில் நம்பிக்கைக்கு உரியவரிடம் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். நேர்மை, நியாயத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால், பலரும் உங்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்கள்.
உங்களுக்கு இந்த 2014–ம் புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுகிறார். எனவே, தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர்களின் தொல்லைகள் அதிகரிக்கும்.  தனாதிபதி செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்தபடி உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம்தான். ஒரு தொகை செலவானாலும் மற்றொரு தொகை வந்து கொண்டேயிருக்கும்.
பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமா? இல்லை புதிய இடத்தில் வீடு கட்டலாமா? இல்லை வீடாக வாங்கினால் யார் பெயரில் வாங்குவது உத்தமம், குடும்ப உறுப்பினர்களில் யார் பெயரில் வாங்கினால் அது நிலைத்திருக்கும் என்று மனக்குழப்பத்தோடு இருந்த உங்களுக்கு இப்பொழுது தெளிவு பிறந்து தீர்க்கமான முடிவெடுத்து செயல்படப் போகிறீர்கள்.
சுக்ரன் வக்ரம் பெறுவது யோகம் தான். ஒற்றுமையின்றி பிரிந்து சென்ற உடன்பிறப்புகள் இனி உங்களைத் தேடி வருவர். ஆபரணங்களை வாங்கிச் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். புத–ஆதித்ய யோகத்தின் அடிப்படையில் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் சுபவிரயம் அதிகரிக்கும் நேரமிது.
சனி விலகும் நேரம்!
இதுவரை உங்கள் ராசிக்கு 8–ல் சஞ்சரித்து அஷ்டமத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த சனி பகவான் இந்த புத்தாண்டு கடைசியில் 9–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இது ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கும். போற்றுகிற அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.
இழப்புகளை எல்லாம் ஈடுசெய்யப் போகிறீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றியும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் சூழ்நிலையும் உருவாகும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். சிந்தையை செலுத்தி செய்ய வேண்டிய காரியங்களில் எல்லாம் சிறப்புகள் கிடைக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஏற்பட்ட வாட்டங்கள் மாறும். வருத்தங்கள் தீரும். வைத்தியச் செலவுகள் குறையும்.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். போற்றுகிற அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும். 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான் 9–ல் உலா வரும்பொழுது திருநள்ளாறு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
புத்தாண்டில் குரு வக்ரமும், சனி வக்ரமும் நிகழவிருக்கிறது. இந்த இரண்டு வக்ர காலமுமே நீங்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலம் தான். ராசிநாதனாக குரு விளங்குவதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். மருத்    துவச்செலவுகள் கூடும். வாங்கிப் போட்ட இடங்களை விற்பனை செய்யும் அமைப்பு உருவாகும். சனியின் வக்ர காலத்தில் பணவரவில் இருந்த தடைகள் அகலும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும்.
மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு
மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த புத்தாண்டு நல்ல மாற்றங்களை அள்ளி வழங்க போகிறது. திருமண வாய்ப்புகள் வரவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு அதுவந்து சேரும். குழந்தைப் பேறு கிட்டும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொடுக்கல்–வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். தாய்   வழித் தனலாபம் கிடைக்கும். ராகு– கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளையும், பின்னணியாக இருந்து பார்த்துக்கொள்வது நல்லது. குருவழிபாடும், சர்ப்ப சாந்தியும் குதூகலத்தை வரவழைத்துக்கொடுக்கும். சேமிப்பு அதிகரிக்கும் இந்த ஆண்டு தங்கம், வெள்ளி ஆகியவை சேர்க்கையும், தகுந்த பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் வியாழன் என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு தெட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோகபலம் பெற்ற நட்சத்திரம் சேரும்பொழுது சிறப்பு   வழிபாடாக திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது முன்னேற்றத்திற்கு வித்திடும்.
நலம் தரும் ராகு–கேதுப் பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசிக்கு 2–ல் கேதுவும், 8–ல் ராகுவும் சஞ்சரித்து வந்தார்கள். புத்தாண்டில் ராகு–கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். சர்ப்ப தோஷத்தின் பிடியில் இருப்பதால் ராகு–கேது பிரீதி செய்வது நல்லது.
ஜென்ம கேதுவால் மனக்குழப்பம் அதிகரிக்கும். மாற்றுச் சிந்தனை மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் சூழ்நிலை உருவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கட்டிடப் பணி மட்டும் பாதியிலேயே நிற்கலாம். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக்கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வழியமைக்கும்.
சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் குடும்பச் சுமை கூடும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் புகழ் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து முடித்துக்கொடுப்பர்.  சேமிப்பில் சிறிது கரையலாம். திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். இந்த நிகழ்வு ஜூன் 13–ம் தேதி நிகழவிருக்கிறது. அதன் பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும். எதைச்செய்ய நினைத்தீர்களோ, அதைச்செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
சேமிப்புகள் உயரும்இந்த நேரத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற வழிபிறக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் மாறும். உற்சாகத்தோடு பணிபுரிந்து உள்ளம் மகிழும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறீர்கள்.
குரு உங்கள் ராசியை 9–ம் பார்வையாக பார்க்கிறார். எனவே 5, 9 ஆகிய இடங்கள் மிஞ்சும் பலன் தரும் என்பார்கள். அதன்படி மிஞ்சும் அளவிற்கு பொருளாதாரம் அமையப் போகிறது. கடை திறப்பு விழாக்கள் நடத்திப் பார்ப்பீர்கள். கூட்டு முயற்சியை விட்டுவிட்டு தனி முயற்சியில் நாட்டம் கொள்வீர்கள். கொள்கைப் பிடிப்பு கூடுதலாக இருக்கும்.
குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி சேமிப்பில் வைப்புநிதி ஒதுக்குவீர்கள். நகை, தோட்டம், என்று வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். வெளிநாட்டு அனுகூலம் உண்டு. மூடிக்கிடந்த தொழிலை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஓடிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் வந்து இணைவர். ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைத்து அதன்மூலம் நன்மைகள் ஏற்படும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படும் இந்த நேரத்தில் திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வருவது நல்லது,
முல்லைப்பூ மாலை அணிவித்து, மஞ்சள் வண்ண ஆடை சாற்றினால் எல்லையில்லாத நற்பலன்கள் உங்களுக்கு வந்து சேரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment