Saturday 4 January 2014

2014 KANNI கன்னி

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)
புத்தாண்டில்  புதுவீடு  வாங்கும்  யோகம்!
வந்து உறவாடும் மாந்தர்களை வாய்ப்பேச்சாலே வசமாக்கும் கன்னி ராசி நேயர்களே!
புத்தாண்டு பிறக்கப் போகிறது. ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் சிக்கியிருப்பதால் இந்த ஆண்டு எப்படியிருக்குமோ என்ற கவலை இருக்கும்?. கவலை வேண்டாம், பணப்புழக்கம் அதிகரிக்கும் விதத்தில் கிரக நிலைகள் சஞ்சரிக்கின்றன.
வருடக் கடைசியில் சனி விலகுகிறது. என்றாலும், கொஞ்சம் முன்னதாகவே நல்ல பலன்களைக் கொடுக்கத் தொடங்கி விடும். நண்பர்களால் பலவித நல்ல செயல்களை முடித்துக் காட்டுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கின்றார். அடுத்து குரு பகவான் 10–ல் வக்ரம் பெற்று விளங்குகிறார்.
ராசிநாதனும் பலமிழந்து விரயாதி    பதியுடனும், லாபாதிபதியுடனும் இணைந்து வருடத் தொடக்கம் உருவாகிறது. இப்படி பிறக்கும் புத்தாண்டில் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய குருப்பெயர்ச்சியும், ராகு–கேது பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியும் வழிகாட்டுகிறது.
உங்களைப் பொறுத்தவரை சிந்தனை ஆற்றல், சொல் வளம், செயல்பாடுகளில் ஈடுபாடு ஆகிய மூன்றும் இணைந்திருப்பதால்தான் வெற்றி உங்கள் வீடு தேடி வருகிறது. சில பெரிய மனிதர்கள் கூட செய்யமுடியாத சில காரியங்களை நீங்கள் செய்து பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். கலை, இலக்கியம் உங்களுக்குப் பிடிக்கும். கலகலப்பை எப்பொழுதும் கூடவே வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வலிமை இழந்திருக்கிறார். அவரோடு லாபாதிபதியும், விரயாதிபதியும் இணைந்திருக்கிறார்கள். எனவே, வரவு திருப்திகரமாக வந்தாலும் செலவு நடைகள் கூடுதலாகவே இருக்கும். வழக்கமாக சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் இப்பொழுது செலவு அதிகமாக வருகிறதே என்று கவலைப்படுவீர்கள். பக்கபலமாக இருக்கும் நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலகலாம்.
3, 8–க்கு அதிபதியான செவ்வாய் உங்கள் ராசியில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. உடன் பிறப்புகளையும், உடன்இருப்பவர்களையும் நம்பி செயல்பட்டு சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். ஆயினும் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். காரணம் குருவின் வக்ர இயக்கம் தான். குரு 4, 7–க்கு அதிபதியாகி 10–ல் வக்ரம் பெறும்பொழுது ஓரளவு நன்மைகளை வழங்கும்.
தக்க விதத்தில் அஞ்சல் வழித் தகவல் வந்து சேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். பணப்புழக்கத்தை பொறுத்த வரை 2–க்கு அதிபதி சுக்ரன் வக்ரம் பெற்றிருப்பதால் கொடுத்த கடன்கள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை விற்கவும் நேரிடும்.
வலிமை இழந்திருக்கும் புதனை திருப்திப்படுத்த புதன்கிழமை தோறும் விரதமிருந்து விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நலம் தரும். ராகு–கேது பெயர்ச்சிக்குப் பிறகு தடைகளும், தாமதங்களும் அகலும். கடைதிறப்பு விழாக்களும், கட்டிடப்பணியும் தொடரும் வாய்ப்புகளை ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் உருவாக்கும். இந்த ஆண்டில் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு சந்தோஷம் கிடைக்க வேண்டுமானால் ஒப்பற்ற ராகு–கேதுக் களுக்கு நீங்கள் பலன் தரும் பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.
விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை உங்கள் ராசிக்கு 2–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இந்தப் புத்தாண்டில் 3–ம் இடத்தில் சஞ்சரித்து முன்னேற்றத்தை வழங்கப் போகிறார். ஏழரைச் சனி விலகப் போகிறது. இனி ஏராளமான நல்ல செய்திகள் உங்களை நாடிவரப் போகின்றது.  
சனி விலகும் சமயத்தில் சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள வன்னி      மரத்தடியில் வீற்றிருந்து அருள்வழங்கும் சனீஸ்வர பகவான் இருக்கும் பெரிச்சிக் கோவில் போன்ற ஸ்தலங்களுக்கெல்லாம் வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வரலாம்.  
குருவின் வக்ரமும், சனியின் வக்ரமும்!
புத்தாண்டில் குருவும் வக்ரமாகிறார், சனியும் வக்ரமாகிறார். 4, 7–க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மையையே வழங்கும். வீடுகட்டிக் குடியேறும் வாய்ப்பும், வியக்கும் விதத்தில் வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பும் கிட்டும். தொழில் வளர்ச்சியைக் கூட்டும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழப்போகிறீர்கள். புகழ் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து புதிய திருப்பங்களை உருவாக்குவார்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். சனியின் வக்ரம் நன்மையும், தீமையும் கலந்ததாகவே இருக்கும். எதிரிகள் சரணடைவர். பிள்ளைகள் வழியில் பிரச்சினையும், உறவினர்களால் விரயங்களும் ஏற்படலாம்.
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு!
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு பெருமை சேர்க்கும் ஆண்டாக அமையப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு வக்ரம் பெறுவதால் தாய்வழி ஆதரவு பெருகும். தனவரவு திருப்திகரமாக இருக்கும்.
குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் இடமாற்றம், வீடு மாற்றங்களை ஒருசிலர் சந்திக்க நேரிடும். குருவின் பார்வை பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்யாணக்     கனவுகள் நனவாகும். கணவன்–மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் விலகும்.  
ஏழரைச் சனி விலகும் இந்த ஆண்டு ஒரு இனிய ஆண்டுதான். மாபெரும் கிரகங்கள் விலகுவதற்கு முன்னதாகவே சில நல்ல பலன்களை கொடுத்து விடும். அந்த அடிப்படையில் உத்தியோகம், தொழிலில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடிவரும். ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் சில திடீர் மாற்றங்கள் உருவாகலாம். அவை நல்ல மாற்றங்களாக அமைய முன்னதாகவே சர்ப்ப சாந்திகளை செய்து கொள்வது நல்லது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் புதன் என்பதால் புதன்கிழமை தோறும் விஷ்ணு ஆலயத்திற்கு சென்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. பிறந்த தேதி அடிப்படையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள தென்திருப்பதி என்று சொல்லப்படுகின்ற அரியக்குடியிலிருந்து அருள்வழங்கும் விஷ்ணுவையும், இலக்குமியையும் வழிபட்டு விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.
நன்மை தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இந்தப் புத்தாண்டு 2014 ஜூன் 21 முதல் சொல்லைச் செயலாக்கும் விதத்தில் ராகுவும், கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் ராகுவும், 7–ல் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது சர்ப்பதோஷம் உருவாகிறது. எனவே, குடும்பத்தில் குழப்பங்களும், உடன் இருப்பவர்களால் மனக்கசப்பும் வரும். காரியத்தடை அகலவும், காசு பணப்புழக்கம் அதிகரிக்கவும், முறையாக சர்ப்பசாந்தியை செய்வதே நல்லது.
பொதுவாக ஜென்ம ராகு வளர்ச்சியையும், தளர்ச்சியையும் மாறி, மாறிக்கொடுப்பார். பக்குவமில்லாதவர்களின் பழக்கம் சிக்கல்களை உருவாக்கும். இருந்தாலும் அஷ்டமத்து கேதுவின் மாற்றமே உங்களுக்கு அதிகபட்சமான நன்மையை வழங்கும். சிந்தித்து செயல்பட்டால் சிறப்புகள் வந்து சேரும். கூட்டாளிகள் பக்கபலமாக இருந்தாலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. வீட்டில் உள்ளவர்களையும் கொஞ்சம் அனுசரித்துச் சென்றால் அமைதிகாண இயலும். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வர். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். இதுபோன்ற காலங்களில் மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு பலன் தரும்.
மகிழ்ச்சி  தரும்  குருப்பெயர்ச்சி!
புத்தாண்டில் குரு உங்கள் ராசிக்கு 11–ம் இடத்தில் உச்சம்பெற்று சஞ்சரிக்கப் போகிறார். லாப ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவது நன்மைதான். அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சகோதர வழி ஒற்றுமையைக் கூட்டும். இதுவரை முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருந்த சகோதரர்கள் இப்பொழுது உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
தூரதேசத்திலிருந்து வரும் தகவல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும். தொழிலில் எதிர்பார்த்த படியே லாபம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக இருக்கும். சகோதர வர்க்கத்தினர் பாகப் பிரிவினைகளைச் செய்து கொள்ளும் பொழுது, கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். குழந்தைகளின் முன்னேற்றத்தில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள்.
 ஒரு சில குழந்தைகள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தை தெரிவிப்பர். அதைச்செயலாக்குவதில் மும்மரமாக இருப்பீர்கள்.
குடும்ப ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற வாழ்க்கைத் துணை பிரியமில்லாமல் இருக்கிறாரே என்று நினைத்தவர்கள் குருவின் பரிபூரண பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் அன்யோன்ய உறவுக்கு ஆளாகி அழகிய வாரிசும் பெற்றெடுப்பர். வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த தடை அகலும். விரும்பும் விதத்தில் உங்களுக்கு உத்தியோக மாற்றங்களும், ஊதிய உயர்வும் தானாகவே வந்து சேரும். இட விற்பனை உங்கள் கடன் சுமை குறைய வழிகாட்டும்.
இதுபோன்ற காலங்களில் வியாழன் தோறும் விரதமிருந்து குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தென்முகக் கடவுளுக்குரிய சிறப்பு ஸ்தலங்களில் திசைமாறிய தென்முகக் கடவுளை தேர்ந்தெடுத்து வழிபட்டு வருவது நல்லது. குரு கவசம் பாடி குருவை வழிபடுவதன் மூலம் குழப்பங்களிலிருந்து விடுபட இயலும்.

No comments:

Post a Comment