Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Dhanus


ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல என்பதுபோல வாழ்க்கையில் துன்பங்கள் வந்த போதும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! அமைதியை விரும்பும் நீங்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பீர்கள். உங்களின் சுக வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் மனதிலிருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களை கட்டும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.  சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். 

ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தங்க ஆபரணம், விலைஉயர்ந்த ஆடை வாங்குவீர்கள். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொத்தை எதிர்பார்த்த விலைக்கு விற்று, புது சொத்து வாங்குவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். 

தாயாரின் உடல் நலம் சீராகும்.  16.5.2012 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசுகூட இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மகளுக்கு வெகுநாட்களாக தேடி அலைந்த வரன் பார்க்கும் படலம் இப்பொழுது முடியும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். 


17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சென்று மறைவதால் வீண்பழி, டென்ஷன், விரயம், விரக்தி, மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வந்துபோகும். பணத்தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். 


சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். புகழ் பெற்ற வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யாருக்காகவும் பைனான்ஸில் பணம் வாங்கித் தரவேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உங்களின் கையெழுத்திட்ட வங்கிக் காசோலையையும் சொத்துப் பத்திரத்தையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். 


22.6.2012 வரை செவ்வாய் 9ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சகோதரிக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தந்தையார் சில நேரங்களில் கோபப்படுவார். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதுச் சொத்து வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள். 


வருடம் பிறக்கும் போது ராகு 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக லாபம் உண்டு. மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்.  திடீர் பயணங்களும் அலைச்சல்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள். 

கேது 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். காற்றோட்டம், குடிநீர் வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாடு சென்று வருவீர்கள். 

ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். ஆனால், 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் ராகுவும் 5ல் கேதுவும் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். மகளின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். 
சனிபகவான் உங்களின் லாப வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணப்புழக்கம் அதிகரிக்கும். இனி திட்டமிட்டு செயல்படுவீர்கள். சொத்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். 

வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேச சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சனிபகவான் வக்ரமாகி அமர்வதால் இக்கால கட்டத்தில் உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். கன்னிப் பெண்களே! தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் இனி விமரிசையாக முடியும். ஆடை அணிகலன்கள் சேரும். 

பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி, சைனஸ் தொந்தரவு வந்து நீங்கும். மாணவர்களே! வகுப்பில் பின் வரிசையிலிருந்து முன் வரிசைக்கு வருவீர்கள். பிணக்கு தந்த கணக்குப் பாடத்தில் மதிப்பெண் கூடும். கூடாப் பழக்கம் விலகும். எதிர்பார்த்த பாடப் பிரிவில் உயர் கல்வியைத் தொடர்வீர்கள். வியாபாரிகளே! முன்பின் அனுபவம் இல்லாத துறையில் மற்றவர்களை நம்பி இறங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள். 

சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்வது நல்லது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம், இரும்பு, துரித உணவு வகைகளால் லாபம் பெறுவீர்கள். ஏப்ரல் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து போவார்கள்.


உத்யோகஸ்தர்களே! எதற்கெடுத்தாலும் உங்களை குறை சொல்லுவதற்கென்றே ஒரு கூட்டம் இருந்ததே! இனி உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். ஏப்ரல் மாதத்தில் அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும். வருடம் முழுக்க வேலைச்சுமை  இருந்துக் கொண்டேயிருக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். கணினி துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயரும். 

அரசியல்வாதிகளே, தொகுதிக்குள் உங்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. மேலிடம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். 
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்பு என்றில்லாமல் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். வீண் வதந்திகள் வரக்கூடும். 

உங்களின் படைப்புகளுக்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். விவசாயிகளே, வரப்பு, வாய்க்கால் பிரச்னையெல்லாம் முடிவுக்கு வரும். உற்பத்தியை இரட்டிப்பாக்குவீர்கள். தானிய வகைகளால் ஆதாயமுண்டு. இந்தப் புத்தாண்டு வாடி வதங்கியிருந்த உங்களுக்கு தைரியத்தை தந்து வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும். 
பரிகாரம்:
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பாதையிலுள்ள திருமுக்கூடலில் அருளும் பெருமாளை துவாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment