Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Rishabam


காற்று முதல் குடிக்கும் தண்ணீர் வரை அனைத்தையும் ரசித்து ருசிப்பவர்களே! பாலைவனத்திலும் பதியம் போட்டு பசுமையை பார்க்கும் கற்பனைவாதிகளே! ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை பார்க்கும் நீங்கள், களங்கமற்ற பேச்சால் சுற்றியிருப்பவர்களை கலகலப்பாக்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 9ம் வீட்டில் வலுவாக நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். 

விலகியிருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தடைபட்ட கல்யாணம் முடியும். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடனுக்காக காத்திருந்து, வீடு கட்டும் பணியும் பாதியிலேயே நின்று போனதே! இனி பல வழிகளிலும் உதவிகள் கிடைக்கும். இந்த ஆண்டு முழுக்க பிள்ளைகளுக்கு அருமையான காலக் கட்டமாக  இருக்கும். கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். 

உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். புதன் 8ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் சிநேகம் கிடைக்கும். பிரபலமாவீர்கள். தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க முயற்சிப்பீர்கள். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் நிற்பதால் அநாவசிய செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். 

பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும். 17.5.2012 முதல் குருபகவான் வருடம் முடிய உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மகுருவாக அமர்வதால் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். தேனொழுகப் பேசுகிறார்கள் என்று யாரையும் நம்பி விட வேண்டாம். அடிக்கடி கோபப்பட்டு டென்ஷனாவீர்கள். உணவில் உப்பு, காரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை அளவை மாதந்தோறும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். லாகிரி வஸ்துக்களை பயன்படுத்துபவர்கள் இனி அவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

 
கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும். பிள்ளைகள் சில நேரங்களில் உங்களை புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். உணர்ச்சிவசப்படாமல், நிதானமாக எந்த முடிவையும் எடுப்பது நல்லது. குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, தலைச் சுற்றல் வரக்கூடும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை 4ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றியுண்டு. 


தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். நெருக்கமானவர்களுடன் மோதல், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்திருந்த வகையில் உதவியுண்டு. மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார். தங்கையின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். 
அயல்நாட்டிலிருக்கும் நண்பர்கள் உதவுவார்கள். 


வருடத்தின் தொடக்கத்திலிருந்தே ராசிக்குள் கேதுவும் 7ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்த வண்ணம் இருக்கும். சேமிப்புகள் கரையும். சிலரால் நீங்கள் ஏமாற்றப்படக் கூடும். எனவே பண விஷயத்தில் கறாராக இருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்ப சிதைவு வரக்கூடும். ஆனால் 1.12.2012 முதல் கேது 12ம் வீட்டிலும், ராகு 6ம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால் ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என சுபச் செலவுகள் அதிகரிக்கும். 

வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் முழுமையடையும். உங்களை கண்டும் காணாமல் போன பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டிலேயே பலம் பெற்று அமர்ந்திருப்பதால் பிரச்னைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 

கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும். தேங்கிக் கிடந்த வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில்  பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும்  டென்ஷனும் இருக்கும். அவர்களின் போக்கையும் நண்பர்கள்  வட்டத்தையும் கண்காணியுங்கள்.

  
கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். கண்ணுக்கு அழகான நல்ல கணவர் வந்தமைவார். ஆடை அணிகலன்கள் சேரும். தடைபட்ட கல்வியை தொடர்வார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்துபோகும். 
மாணவர்களே! வகுப்பறையில் இனி அரட்டையடிக்கமாட்டீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். உயர்கல்வியில் வெற்றியுண்டு. வகுப்பறையில் பாராட்டுகள் கிடைக்கும்.  


வியாபாரிகளே! நீண்டநாட்களாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதிய முதலீடுகளை செய்வதுடன் கடையை விரிவுபடுத்தி போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். ஷேர், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள்.


உத்யோகஸ்தர்களே! உங்களை கசக்கிப் பிழிந்து, உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். கவலைகள் மறைந்து உற்சாகம் பிறக்கும். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். இனி அநாவசியமாக விடுப்பு எடுக்கமாட்டீர்கள். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் உண்டு. சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கணினி துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் வாய்ப்பு வரும்.  

அரசியல்வாதிகளே! உங்களின் செயல் பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை.  
கலைத்துறையினரே! தடைபட்ட ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். கௌரவிக்கப்படுவீர்கள்.  மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.விவசாயிகளே! கடன் தருவதாக சொல்லி வங்கிகளில் அலைக்கழித்தார்களே, இனி அந்த நிலை மாறும். நீங்கள் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நெல்,கரும்பு சாகுபடியால் நல்ல லாபமடைவீர்கள். இந்தப் புத்தாண்டு விரக்தியின் விளிம்பில் நின்ற உங்களை  வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.
பரிகாரம்:
திருவாரூர் தியாகராஜரையும் கமலாம்பிகையையும் பிரதோஷ நாளில் சென்று தரிசியுங்கள். விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment