Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Mesham


உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசும் நீங்கள், குலம், கோத்திரம், சாதி, மதம் பார்க்காமல் உண்மையான பாசமுடன் பழகுவீர்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருந்து சாதிக்கும் நீங்கள், இலக்கியம், இசை, ஆன்மிகம் என அனைத்திலும் ஆர்வம் கொண்ட கலா ரசிகர்கள்.
உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கனிவான பேச்சு வேலைக்கு ஆகாது என்று கறாராக பேசவேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். 

ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் உங்கள் காலை பிடிப்பதும் கையைப் பிடிப்பதுமாக இருந்தவர்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். உங்களுக்கு பன்னிரெண்டாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடே சுப நிகழ்ச்சிகளால் களைகட்டும். வற்றிய பணப்பை நிரம்பும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி வீடு தேடி வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் உண்டு. 

விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது செய்ய முடியும். 16.5.2012 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக நீடிப்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாக செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும் போதெல்லாம் அதை தட்டி வைக்கப் பாருங்கள். உங்களைப்பற்றி எல்லோரும் தவறாக நினைப்பதாக நீங்களே முடிவெடுத்துக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் இருக்கும். 

ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2ல் அமர்வதால் கோபம் குறைந்து கனிவு பிறக்கும். இனி கடுமையாக பேசாமல் இங்கிதமாகவும் இதமாகவும் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். நீங்களும் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, மயக்கம் எல்லாம் நீங்கும். பார்வைக் கோளாறு சரியாகும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உங்களின் பாசத்திற்கு கட்டுப்படுவார்கள். உங்கள் சொல்படி நடப்பார்கள். பிரிந்திருந்த கணவன் -மனைவி ஒன்று சேருவீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.


உங்கள் ராசிநாதனான செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை 5ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுவது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. மாடிப்படிகளில் ஏறும் போது கவனமாக இருங்கள். வரம்பு மீறி யாரையும் விமர்சிக்க வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். சகோதரியின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். 

அவர்கள் விரும்பிய கல்வியிலேயே சேர்ப்பது நல்லது. சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய சிக்கல்கள் யாவும் தீரும். சகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புது முயற்சிகள் பலிதமாகும். நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். வருடம் பிறக்கும்போது 2ம் வீட்டில் கேதுவும் 8ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். ஒருவருக்
கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. 

உறவினர்கள் சிலர் உங்களுக்குள் வீண் வம்புச் சண்டையை ஏற்படுத்தக் கூடும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்குள் கேதுவும் 7ல் ராகுவும் நுழைவதால் லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. நடைப்பயிற்சி, யோகா, தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.சனிபகவான் ராசிக்கு 7ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் புதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன், காரண்டர் கையெழுத்திட வேண்டாம். உப்பு சப்பில்லாத விஷயத்திற்குக்கூட மனைவியுடன் சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. 

மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத்துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் அதிக இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது. செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குவதையோ, சாலையை கடப்பதையோ தவிர்க்கவும். சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்தி விடுங்கள். சட்டத்திற்குப் புறம்பாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம். 

சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. பிரபலங்களின் உதவி கிடைக்கும். வெளிமாநில புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! வருடத்தின் முற்பகுதியில் காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நொறுக்குத் தீனிகளை குறையுங்கள். ஜூன் மாதத்திலிருந்து தலைவலி, மாதவிடாய்க் கோளாறு சரியாகும். கல்யாணம் கூடிவரும். 

சிலர் தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.மாணவர்களே! மறதி, மந்தம் நீங்கும். விளையாட்டை குறைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள். வியாபாரிகளே, மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பெரிய முதலீடுகளை கடன் வாங்கி பண்ணாதீர்கள். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. பழைய சரக்குகளை லாபகரமாக விற்றுத் தீர்க்கப்பாருங்கள். 

பாக்கிகளை அலைந்து திரிந்துதான் வசூலிக்க வேண்டிவரும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஜூன் மாதத்திலிருந்து வியாபாரம் சூடு பிடிக்கும். ஹோட்டல், ஷேர், மர வகைகளால் லாபமுண்டு. பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். கூட்டுத் தொழில் வேண்டாம். உத்யோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிவரும். அதிகாரிகளிடம் அதிக உரிமையுடன் பேச வேண்டாம். உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். 

நீங்களே செய்வது நல்லது. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். வருட பிற்பகுதியில் சம்பள உயர்வு, பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு நிறுவனங்களில் சிலருக்கு புது வேலை அமையும். சக ஊழியர்களுடன் இருந்த மனப்போர் நீங்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு வருட மத்தியப் பகுதியில் வேறு நல்ல வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு எதிராக எந்த விமர்சனமும் வேண்டாம். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். 

 
கலைத்துறையினர்களே! வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். தடைபட்ட வாய்ப்புகள் வேற்றுமொழியில் அமைந்து புகழடைவீர்கள். 
விவசாயிகளே! நவீனரக உரங்களால் மகசூல் பெருகும். நிலத்தகராறு தீரும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
இந்தப் புத்தாண்டு மே மாதம் வரை உங்களை சோர்வடைய வைத்தாலும், ஜூன் மாதத்திலிருந்து சவால்களில் வெற்றி பெற வைப்பதுடன் வருமானத்தையும் வாரி வழங்கும். 
பரிகாரம்:
திருத்தணி முருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment