Wednesday 21 December 2011

Sani Peyarchi Palan 2011 - Midhuna


தும்பைப்பூ சிரிப்பும் பலரை வழி நடத்தும் அளவுக்கு பட்டறிவும் எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள் காசு பணத்திற்காக கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்து, நாலாவிதத்திலும் உங்களை சின்னாபின்னமாக்கிய சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் 5ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சமாகி வலுவடைவதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும். 

இதுவரை சுக ஸ்தானத்தில் அமர்ந்து சின்னச் சின்ன சந்தோஷங்களைகூட அனுபவிக்க விடாமல், ஏமாற்றங்களையும் அலைகழிப்புகளையும் சந்தித்தீர்களே. நிலையான ஒரு இடமில்லாமல் அடிக்கடி வீடு மாறிக் கொண்டிருந்தீர்களே!  உத்யோகத்தில் அசிங்கப்பட்டீர்களே! இனி அந்த அவலநிலை மாறும். ஏதாவது முக்கியமான காரியத்திற்குச் செல்லும்போது வண்டி கூட தகராறு செய்ததே. அடிக்கடி வாகன விபத்துகளையும் சந்தித்தீர்களே. 

வீட்டில் நுழைந்தாலே சண்டை சச்சரவாக இருந்ததே. இப்படி பல்வேறு நிலைகளில் உங்களை உருக்குலைய வைத்த சனிபகவான் இப்போது உங்களின் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்து பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்று போனதே, இனி பணவரவு அதிகரிக்கும். வீட்டை கட்டி முடித்து கிரகப்பிரவேசத்தை கோலாகலமாக செய்வீர்கள்.  கணவன்&மனைவிக்குள் சாதாரணமாகப் பேசினாலே சண்டை சச்சரவுகள் வெடித்ததே! இனி மணிக்கணக்கில் பேசினாலும் மனவருத்தம் ஏற்படாது. 

நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டி கோயில் குளமென்று சுற்றிச்சுற்றி ஒரு பலனுமில்லாமல் போனதே, இனி கவலை வேண்டாம். 5ம் இடத்தில் சனி அமர்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். என்றாலும் கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டாமல் தோழமையாக பழகுங்கள். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள், அவர்களின் நண்பர்கள் யார் என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் பாடத்தில் உயர்கல்விப் பெற அனுமதியுங்கள். 

சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் இதை சரிசெய்து கொள்ளுங்கள். வயிற்று வலி, இடுப்பு, கழுத்து வலியால் சிரமப்பட்டீர்களே! இனி வலி நீங்கி வலிமை கூடும். தாய்மாமன், அத்தை வகையில் அலைச்சல் இருக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வரக்கூடும். தாயாருக்கு சற்றே உடல் நலக்குறைவு ஏற்படும். 

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 6ம் வீட்டிற்கான அதிபதியும்&லாபாதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பழைய கடனைத் தீர்ப்பதற்கு புதுவழி பிறக்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். வழக்கு  விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. தொண்டைப் புகைச்சல், யூரினரி இன்பெக்ஷன், காய்ச்சல் வந்து நீங்கும். 

4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.  வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.   9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இக்கால கட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வெகுநாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த விசேஷங்களால் வீடு களைகட்டும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். 

மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு சொந்தத்திலேயே நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் சப்தம&ஜீவனாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு.  சில நேரங்களில் மனைவிக்கு தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்திலும் மதிப்பு, மரியாதை கூடும். 
 
சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது நல்லது. கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை, கால் வலி, மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். சனிபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாட்களாக வரமாலிருந்த பணமெல்லாம் கைக்கு வரும். மூத்த சகோதரர்களுடன் வீண் வாக்குவாதங்கள் இருந்ததல்லவா, இனி அந்த நிலை மாறும்.  மார்க்கெட்டில் புதிதாக வந்த வாகனத்தை வாங்குவீர்கள். 


இல்லத்தரசிகளே! குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவர் உங்களின் வேலைகளை பகிர்ந்து கொள்வார். மாமியார், மாமனார் உங்களின் பெருமை பேசுவார்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! வேலைச்சுமை, மன உளைச்சலிலிருந்து விடுபடுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் தவித்தீர்களே, இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். பெற்றோரின் 
அரவணைப்பு முழுமையாக கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை வரக்கூடும். நாட்டமில்லாமல் இருந்து வந்த உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கும். 
மாணவ&மாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சுக் குறையும். 

உயர் கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டில் வாகை சூடுவீர்கள்.
வியாபாரிகளே! பற்று வரவு உயரும். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களை சரியாகப் பயன்படுத்தி விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள்.ஏற்றுமதி&இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. 

ஏஜென்ஸி,புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.     
உத்தியோகஸ்தர்களே! மற்றவர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டு பார்க்க நேரிட்டதே, இனி அந்த 
அவல நிலை மாறும். உங்கள் திறமையை குறைத்து எடைபோட்டார்களே! இனி அதிகாரிகளே ஆச்சரியப்படும்படி சில கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக்காட்டுவீர்கள். சக ஊழியர்களும் உங்களின் செல்வாக்கை நினைத்து நட்புறவாடுவார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். 

துறை மாறிப் பணியாற்றியவர்களுக்கு படிப்புக் கேற்ற வேலை கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். எதிர்க்கட்சியினர் சிலர் நண்பராவார்கள். கலைஞர்களே! நீங்கள் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமைகள் வெளிப்படும். பெரிய கலைஞர்கள் உங்களைப் பாராட்டிப் பேசும் அளவிற்கு உயர்வீர்கள்.விவசாயிகளே! வாய்க்கால் வரப்புச் சண்டையெல்லாம் ஓயும். விளைச்சலை அதிகப்படுத்த தரம் வாய்ந்த உரங்களை கையாளுங்கள். கூட்டுறவு வங்கிக் கடனுதவி கிடைக்கும். இந்தச் சனிப்பெயர்ச்சி குழப்பங்கள், தடுமாற்றங்களில் இருந்து விடுவிப்பதுடன் வெளிவட்டாரத்தில் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
பாண்டிச்சேரிக்கு முன்புள்ள பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். உயர்கல்விக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவ&மாணவியரின் படிப்பிற்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும்.

No comments:

Post a Comment