Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Kumbam


மஞ்சளும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சில் நினைப்பதே போதும் என்றெண்ணும் நீங்கள், ஆர்ப்பாட்டம் அலங்காரம் இல்லாமல் அமைதியாக எதையும் சாதிப்பீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு வாரி வழங்கும் நீங்கள் கொடுத்துச் சிவந்த கைகளையுடையவர்கள்.உங்கள் ராசிநாதன் சனிபகவான் 9ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். 

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். மகளின் கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். உங்களை தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 

புது வேலை அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். ஆனால் தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பது நல்லது. சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் இக்கால கட்டத்தில் வீண் விரயம், செலவு, ஏமாற்றம், பொருள் இழப்பு, மறைமுக அவமானம், தாழ்வு மனப்பான்மை வந்துசெல்லும். 

16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். லேசான தலைச் சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்து செல்லும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகனுக்கு பல இடத்தில் வரன் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் இல்லையே என வருந்தினீர்களே! இனி நல்ல மணப்பெண் அமைவார். 

மகனின் கூடா நட்பு விலகும்.  பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை போராடி பைசல் செய்வீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் மன உளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டுவலி, சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். 

தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் வரும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். கடன் தொல்லைகளை நினைத்து வருந்துவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். வாகனத்தில் செல்லும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். 

வருடத் தொடக்கத்திலிருந்து 22.6.2012 வரை 7ல் நிற்கும் செவ்வாயின் நேரடிப் பார்வை உங்கள் மீது விழுவதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை வலி வந்து நீங்கும். கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் உஷ்ணம் அதிகமாகும். உணவில் கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களின் துரோகங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். யாருக்கும் காரெண்டர் கையெழுத்திட வேண்டாம். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பிரபலங்களால் உதவி கிட்டும். 

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்களை தாமதமாகப் புரிந்து கொள்வார்கள்.  வருடம் பிறக்கும் போது 4ம் வீட்டில் கேது நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வீடு கட்ட முடிவெடுத்துவிட்டால் தேவைப்படும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். 10ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். 

வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழியும் வரக்கூடும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 3ல் கேதுவும் 9ல் ராகுவும் நுழைவதால் எதிலும் ஆர்வம் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த வீண் சந்தேகங்கள் நீங்கும். ஆனால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். 


கன்னிப் பெண்களே! காதலில் ஏமாற வேண்டாம். கல்யாணம் தள்ளிப்போய் முடியும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வேனல் கட்டி, முகப்பரு, தூக்கமின்மை வந்து நீங்கும். மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 


வியாபாரிகளே! பெரிய அளவில் முதலீடுகளை போட்டு சிக்கிக் கொள்ளாமல், இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். ஏப்ரல், மே மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். முடிந்த அளவுக்கு அதிக கடன் யாருக்கும்  தராமல் இருப்பது நல்லது. தேங்கிக் கிடந்த சரக்குகளை அதிரடி சலுகையால் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். 

ஜூன் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஹோட்டல், கெமிக்கல், இரும்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதுத் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவற விடாதீர்கள். உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். என்றாலும் மனந்தளர மாட்டீர்கள். 

மேலதிகாரி உங்களை தவறாக புரிந்து கொள்வார். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நன்கு படிப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மே, ஜூன் மாதங்களில் வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் புது வாய்ப்புகள் வரும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பளம், சலுகைகள் கூடும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கணினி துறையினருக்கு வேறு வாய்ப்புகள் வந்தாலும் கூட மாறாமல் இருப்பதே சிறந்தது.


அரசியல்வாதிகளே! இனி பரபரப்புடன் செயல்படுவீர்கள். தலைமை உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்கும். கலைத்துறையினரே! கிடைக்கிற வாய்ப்பு சின்னதாக, சாதாரணமானதாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அவ்வப்போது உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வரும். விவசாயிகளே! வங்கிக் கடன் தள்ளுபடியாகும். நிலத்தகராறு தீர்வுக்கு வரும். மகசூலை பெருக்குவீர்கள்.இந்தப் புத்தாண்டு சமயோஜித புத்தியால் சாதிக்க வைப்பதுடன் வாழ்வின் நெளிவு, சுளிவுகளை கற்றுத் தருவதாக அமையும். 
பரிகாரம்:
திருச்சிக்கு அருகேயுள்ள குணசீலம் சீனிவாசப் பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment