Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Meenam


சுற்றியிருக்கும் அழுக்குகளை தின்று சுத்தம் செய்யும் மீனைப்போல மற்றவர்களின் துன்பங்களை, துயரங்களை ஏற்றுக் கொள்ளும் சுமைதாங்கிகளே! போலியாக வாழாமல், ஆடம்பரத்திற்கும் ஆசைப்படாமல் இருப்பதை வைத்து சந்தோஷப்படும் நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வீர்கள்.
உங்களின் லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். 

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மனைவி வழியில் இருந்த மனப்போர் நீங்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். 

ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். 
திட்டமிடாத வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகளும் திடீர் பணவரவும் உண்டு. ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். 


மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். எதிரும் புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நவீனரக வாகனம் வாங்குவீர்கள்.

 
இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று தவறாக முடிக்க வேண்டி வரும். மனதைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டிவரும். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்தமனத்தாங்கல் நீங்கும். வசதி, செல்வாக்குடன் உள்ள தவறானவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.  

    
செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை 6ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிரபலங்களால் சில வேலைகள் முடிவுக்கு வரும். வீடு, மனை வாங்குவீர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் காசு புரட்டி புது வீடு கட்டி குடி புகுவீர்கள்.    

 
வருடம் பிறக்கும்போது 3ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. அண்ணன் பக்கபலமாக இருப்பார். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். பிதுர் வழிச் சொத்தை அடைவதிலிருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். 
9ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். சித்தர்கள், ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 1.12.2012 முதல் உங்கள் ராசியில் 2ல் கேதுவும், 8ல் ராகுவும் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். 

வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களால் வீண் அலைச்சல், மன உளைச்சல் வரக்கூடும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.
சனிபகவான் ராசிக்கு 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் முன்கோபம், பதட்டம், சிறு சிறு ஏமாற்றம், விரக்தி, வீண்பழி வந்து செல்லும். மனதில் இனம்புரியாத பயம் வந்துபோகும். குடும்பத்தில் அமைதியில்லையே என புலம்புவீர்கள். 

பண விஷயத்தில் கறாராக இருங்கள். நெருங்கியவர்களாக இருந்தாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். திடீர் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். முன்யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் மனைவியுடன் வாக்குவாதம், வீண் சந்தேகம், விரக்தி, சோர்வு, களைப்பு வந்து நீங்கும். 


கன்னிப் பெண்களே! புதிதாக அறிமுகமாகுபவர்களை நம்ப வேண்டாம். முக்கிய முடிவுகளை பெற்றோரை கலந்தாலோசித்து எடுப்பது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். தூக்கமின்மை, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் வருட முற்பகுதியில் சிறப்பாக முடியும். மாணவர்களே! காலநேரத்தை வீணடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். 


வியாபாரிகளே! பெரிய முதலீடுகளில் இறங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள். மே, ஜூன் மாதங்களில் கணிசமாக லாபம் உயரும். வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உணவு, இரும்பு, கட்டிட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.  


உத்யோகஸ்தர்களே! என்னதான் இரவு பகலாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். விருப்பமில்லாத இடமாற்றம் உண்டு. ஜனவரி, பிப்ரவரி, மே, அக்டோபர், டிசம்பர் மாதங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். சக ஊழியர்கள் குறை கூறும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள். கணினி துறையினருக்கு வெளி மாநிலம், வெளி நாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.  
அரசியல்வாதிகளே! தலைமையைப்பற்றி சகாக்களிடம் குறைகூற வேண்டாம். 

முக்கிய பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. கலைத்துறையினரே! உங்களது படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சம்பளம் உயரும். ஆனால், கையில் காசு தங்காது.விவசாயிகளே! கூட்டுறவு வங்கியில் கடனுதவி கிடைக்கும். விளைச்சலை அதிகப்படுத்த தரமற்ற உரங்களை பயன்படுத்தி விடாதீர்கள். வீட்டில் நல்லது நடக்கும்.இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் திடீர் யோகத்தையும், பணவரவையும் தந்தாலும் மையப் பகுதியிலிருந்து வீண் அலைச்சலையும் செலவுகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகேயுள்ள எலவனாசூர் கோட்டை தலத்தில் அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரரை திங்கட் கிழமையில் வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment