Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Kadakam


வீடு-வாசல் என்று அடங்கி விடாமல், நாடு-நகரம் என யோசிப்பவர்களே! ஆர்ப்பாட்டம் செய்யாமல் அகிம்சை வழியில் சென்று நினைத்ததை அடையும் நீங்கள், எதிரியின் உணர்வுக்கும் மதிப்பளிப்பவர்கள். ஆறாவது அறிவுக்கு அடிக்கடி வேலைதரும் நீங்கள், நீதி நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். 
உங்கள் 9வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். 


வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தீர்களே, இப்போது உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொடர்வதால் அதுவரை நான்கைந்து வேலைகளை ஒன்றாக சேர்த்து பார்க்க வேண்டியது இருக்கும். உத்யோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும் இடமாற்றங்களும் வரக்கூடும். 


எனவே அலுவலகத்தில் அதிக பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களிடம் கேட்டால் மட்டும் ஆலோசனையோ, கருத்தோ சொல்லுங்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டிவரும். பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். 
குடும்ப விஷயங்களை நெருங்கியவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய நண்பர்களை வீடுவரை அனுமதிக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனதை வாட்டும். 

ஊர் பொது விவகாரங்களில் உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வீர்கள். வங்கிக் காசோலைகளில் முன்பே கையெழுத்திட வேண்டாம். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. ஏதோ ஒன்றை இழந்ததைப்போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். மகனின் கல்யாணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வங்கிக் 
கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். 

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். செவ்வாய், வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை 2ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் புது சொத்து வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வெளிநாடு சென்று வர விசா கிடைக்கும். 

சகோதர, சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். வருடம் பிறக்கும்போது ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். ஒற்றைத் தலைவலி, ரத்த சோகை, மூட்டு வலி வரக்கூடும். தாய்மாமன், அத்தை வகையில் செலவுகள் வந்துபோகும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். கேது 11ம் வீட்டில் தொடர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். 

பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் ராகுவும் 10ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். நெருங்கிய உறவினர், நண்பரை இழக்க நேரிடும். வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்கள் சுக ஸ்தானமான 4ம் வீட்டிலேயே தொடர்வதால் நெடுந்தூர, இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். 


யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வேற்றுமதத்தினர்கள் உதவுவார்கள். இலவசமாக அறிமுகமாகும் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. கன்னிப்பெண்களே! தடைபட்ட படிப்பை முடிக்க முடியாமல் திணறினீர்களே! எந்த பாடப் பிரிவிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இந்த ஆண்டில் படிப்பை முடிப்பீர்கள். 

வருடப் பிற்பகுதியில் நல்லவேலையும் கிடைக்கும். காதல் தோல்வியால் கலங்கியிருந்தீர்களே! இனி பெற்றோர் பார்க்கும் வரன் உங்களுக்கும் பிடித்தமாக இருக்கும். மாணவர்களே! கணிதம், அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கெட்ட நண்பர்களை விட்டு பிரிவீர்கள். மதிப்பெண் கூடும். போராடி புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். வியாபாரிகளே! மார்ச் மாதத்திலிருந்து கணிசமாக லாபம் உயரும். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று தொந்தரவு தருவார்கள். 


8.5.2012லிருந்து பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வரவேண்டிய பாக்கிகளையும் வசூலிப்பீர்கள். புது சலுகை திட்டங்கள் மூலம் புது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும் ஒத்துழைப்பார்கள். ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதுக் கிளைகள் தொடங்கும் வாய்ப்பும் வரும். ஹோட்டல், கமிஷன், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். 


உத்யோகஸ்தர்களே! 16.5.2012 வரை நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியது வரும். இருந்தாலும் கடைசியில் கெட்ட பெயர் தான் மிஞ்சும். கவலை வேண்டாம் 17.5.2012 முதல் குருபகவான் உத்யோக ஸ்தானத்தை விட்டு விலகுவதால் உங்களை பாடாய்படுத்திய உயரதிகாரி இடம் மாறுவார். நல்ல மேலதிகாரி பணியில் வந்து சேர்வார். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். ஜூன், செப்டம்பர், நவம்பர் 
மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. கணினி துறையினருக்கு பணிச்சுமை குறையும். புது சலுகைகளும் கிடைக்கும்.


அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகள் வந்தாலும் யோசித்து ஏற்பது நல்லது. வீண் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். தலைமையிடம் பேசும் போது பணிவு அவசியம்.கலைஞர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களின் ஆதரவு உண்டு. விவசாயிகளே! நவீனரக உரங்களை பயன்படுத்தி மகசூலை இரட்டிப்பாக்குவீர்கள். கூட்டுறவு வங்கியில் 
கடனுதவி கிடைக்கும்.இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் பணப் பற்றாக்குறையையும் மன உளைச்சலையும் தந்தாலும் 17.5.2012 முதல் எதிலும் வெற்றியையும், யோகத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
திருவக்கரை வக்ரகாளியம்மனை பஞ்சமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment