Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Thulam


மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடையும் நீங்கள், தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். அடக்கு முறைக்கும் ஆணவத்திற்கும் அடிபணியாத நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். 

உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். புதன் சாதகமாக இருப்பதால் வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். 


இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து காற்றோட்டம், தண்ணீர் வசதி அதிகமுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர், வீட்டில் குடிநீர், கழிவுநீர் பிரச்னைகள் தீரும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்று இனத்தவர்களின் ஆதரவு கிட்டும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 


16.5.2012 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே என தவித்த பெற்றோருக்கு அழகான வாரிசு உருவாகும். 

பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தள்ளிப்போன கல்யாணப் பேச்சுவார்த்தை கூடிவரும். மூத்த சகோதரிக்கு கல்யாணம் நடக்கும். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் 8ம் வீட்டில் மறைவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர் செலவுகள் வந்துபோகும். 
ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் அநாவசியப் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். 

சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொள்வீர்கள். நண்பர், உறவினர் சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். ரத்த அழுத்தம், சளித் தொந்தரவு, இனந் தெரியாத கவலைகள் வந்துநீங்கும். சித்தர் பீடங்களுக்கு மறவாமல் செல்லுங்கள். வருடம் பிறக்கும் போது 2ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் பேச்சில் அதிகம் கடுமை காட்டாதீர்கள். 

சில நேரங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப்போய் அது விபரீதமாக முடியும். குடும்பத்தில் சின்ன சின்ன கூச்சல் குழப்பங்கள் வந்துபோகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். கேது 8ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திண்டாடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். கை, காலில் காயம், வயிற்றுக் கோளாறு, மூட்டு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது.

 
1.12.2012 முதல் உங்கள் ராசிக்குள் ராகுவும் 7ல் கேதுவும் நுழைவதால் மனக்குழப்பம், எதையோ இழந்ததைப்போல் ஒரு வித கவலைகள், பதட்டம், தலைச்சுற்றல், பல்வலி வந்து நீங்கும். மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.
ஜென்மச் சனி தொடர்வதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள் வரத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்த வேண்டாம். 

உங்கள் யோகாதிபதி சனிபகவான் உச்சமாகி ராசிக்குள் அமர்வதால் பணம் வரும். மழலை பாக்யம் உண்டு. ஆனால்  யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனத்தை இயக்கும் முன் பிரேக்கை சரிபாருங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். 
சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் சற்றே அலைச்சலும் சுபச் செலவுகளும் வரும். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். 

அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் வீண் பழியில் சிக்கிக்  கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களை தள்ளி வையுங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். முகப்பரு, பசியின்மை, ஹார்மோன் கோளாறுகள் வந்து நீங்கும். காய், கனிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோரின் விருப்பப்படி திருமணம் முடியும். 
மாணவர்களே! புத்தகத்தை தொட்டாலே தூக்கம் வந்ததே! இனி உற்சாகமாகப் படிப்பீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசும் பாராட்டும் உண்டு. 


வியாபாரிகளே! முதலீடுகள் அதிகமிட்டு விழிபிதுங்கி நின்றீர்களே, இரவு பகலாக உழைத்தும் லாபம் பார்க்க முடியவில்லையே, கவலை வேண்டாம். இனி அந்த நிலை மாறும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை புதுப்பிப்பீர்கள். ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரம் அறிந்து புதிய சரக்குகளை கொள்முதல் செய்யுங்கள். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். 

ரியல் எஸ்டேட், கண்ணாடி, துணி, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த பிணக்கு விலகும். உத்யோகஸ்தர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் பகையை மறந்து இனி உங்களுக்கு உதவுவார். நெடுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். சம்பளம் கூடும். 


பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட் மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடிவரும். கணினி துறையினருக்கு வேறு நிறுவனங்களிலிருந்து புது வேலை கிடைக்கும். 
அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்படாதீர்கள். கலைத்துறையினரே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.  அவ்வப்போது வீண் வதந்திகளும் வரக்கூடும். புது வாய்ப்புகள் தேடிவரும். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அடகில் வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். இந்தப் புத்தாண்டு எடுத்த காரியங்களை 
முடித்துக் காட்டும் வல்லமையையும் வசதி  வாய்ப்புகளையும் தருவதாக அமையும். 
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அஷ்டபுஜ காளியை அஷ்டமி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment