Wednesday 21 December 2011

Sani Peyarchi Palan 2011 - Thulam

விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பும் நீங்கள், எதிர்நீச்சல் போட்டு பழகியவர்கள். அருவி நீர்போல அதிர்ந்து பேசாமல் பனித் துளிபோல பாசமாய் பேசுவீர்கள்.     இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும் அலைச்சல்களையும் கொடுத்து வந்த சனிபகவான், இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்ம சனியாக அமர்கிறார். ஜென்ம சனி என்ன செய்யப் போகிறதோ என்றெல்லாம் புலம்பித் தவிக்காதீர்கள். சனிபகவான் உங்களுக்கு அனைத்து வசதிகளை அள்ளித்தரும் சுகாதிபதியாகவும் பூர்வ புண்யாதிபதியாகவும் வருவதால் நல்லதையே செய்வார். 

உச்சமாகி சுபத்தன்மை அடைவதால் சனிபகவான் பணவரவையும் அதிகரிப்பார். பதுங்கி வாழ்ந்த நீங்கள், இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். இழப்புகளும் அவமானங்களும் உங்களை துரத்தியதே! இனி நிம்மதி பிறக்கும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்&மனைவி ஒன்று சேர்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 
ஜென்ம சனி என்பதால் உடல் ஆரோக்யத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்பு போல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அல்சர் எட்டிப் பார்க்கும். உடல் பருமனாக வாய்ப்பிருக்கிறது. 

எனவே எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிகமாக நீர் பருகுங்கள். காய்கறி, பழ
வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தோலில் நமைச்சல், எரிச்சல், கட்டி வந்துபோகும். மனைவி வழியில் செலவுகள் வரும். திடீர் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். புனித நதிகளில் நீராடுவீர்கள். 

பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி பாதியிலேயே  நின்றுபோனதே, இனி வங்கிக் கடனுதவியால் முழுமையாக கட்டி முடிப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மகளுக்கு தள்ளிப்போய் கொண்டிருந்த கல்யாணம் விரைவில் நடக்கும். மகனின் கூடா நட்பு விலகும். 


புது வீடு, மனை வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிவிட்டு சந்தையில் புதிதாக அறிமுகம் செய்த வண்டியை வாங்குவீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் வீண் செலவுகள், கடன் பிரச்னை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை.    

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தனாதிபதியும்&சப்தமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. அரசு அதிகாரிகள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். மனைவி வழியில் ஆதாயமடைவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் மனைவியுடன் மனஸ்தாபங்கள், மோதல்கள் அதிகரிக்கும். செலவினங்கள், சிறுசிறு நெருப்புக் காயங்கள், வாகனப்பழுது வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.  9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான சூழ்நிலை அமையும். 

திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது டிசைனில் ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாட்டினரால், ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.உங்கள் 3 மற்றும் 6ம் வீட்டிற்கு அதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனி
பகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் முயற்சிகள் பலிதமாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிட்டும். 

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். என்றாலும் விபத்து, வீண் சந்தேகம், இனந் தெரியாத கவலைகள், மறைமுக எதிர்ப்புகள், வீண்பழி வந்து செல்லும்.சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் கௌரவ பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கால்வலி, கழுத்துவலி வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் உத்யோகத்தில் மரியாதை கூடும். சிலருக்கு சுயதொழில் தொடங்க வாய்ப்பு உண்டு. 


இல்லத்தரசிகளே, அடுப்படி அலமாரிகளில் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாமியார், மாமனாருடன் மனஸ்தாபங்கள் குறையும். அலுவலகம் செல்லும் பெண்களே! குடும்பத்திற்குக் கூட நேரம் ஒதுக்க முடியாமல் சதா வேலை வேலை என்றிருந்தீர்களே, இனி வேலைச்சுமை குறையும். கன்னிப் பெண்களே! முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். புதிய நண்பர்களை நம்ப வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். தடைபட்ட கல்யாணம் கூடிவரும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். மாதவிடாய்
கோளாறு, மன உளைச்சல் வந்துபோகும்.

மாணவ&மாணவிகளே! விளையாட்டுத்தனத்தை குறைத்துக் கொண்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். பின்வரிசையில் அமராதீர்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். அரசுத் தேர்வில் எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண் கிடைக்கும்.வியாபாரிகளே! பெரிய அளவில் பணத்தைப் போட்டு  மாட்டிக் கொள்ளாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. சிலர் அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் தவறான ஆலோசனைகளை வழங்கக்கூடும். இனி கணிசமாக லாபம் உயரும். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். 

பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்து போங்கள். 
உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். உங்களுக்குத் தொல்லை தந்த பழைய அதிகாரி மாற்றப்பட்டு, புது அதிகாரியால் உற்சாகம் அடைவீர்கள். 

அனாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி தாமதம் இல்லாமல் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது உஷாராக இருங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். கணினி துறையினர்களே! கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டிவரும்.

அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை கொடுக்கும். கவனமாக செயல்படுங்கள். 
கலைஞர்களே! வீண் வதந்திகளும் கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனம் தளராதீர்கள். சம்பள விஷயத்தில் அதிக கண்டிப்பு வேண்டாம். விவசாயிகளே! மத்திய கூட்டுறவு வங்கியில் கடனுதவி கிடைக்கும். நிலத் தகராறு பிரச்னைகள் வரத்தான் செய்யும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.  இந்த சனி மாற்றம் இழப்பு, எதிர்ப்பு, ஏமாற்றங்களிலிருந்து விடுவிப்பதுடன் ஓரளவு வருமானத்தையும், வசதிகளையும் தரும்.
பரிகாரம்:
திருவாரூர்&திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் பொங்கு சனீஸ்வரரை திருவோணம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். முயற்சிகள் வெற்றியடையும்.

No comments:

Post a Comment