Wednesday 21 December 2011

Sani Peyarchi Palan 2011 - Vrichigam

மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசும் நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். சட்ட திட்டங்களை சரியாக பின்பற்றும் நீங்கள், வரம்பு மீறி பழக மாட்டீர்கள். இலவசமாக எதையும் பெறமாட்டீர்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப்புழக்கத்தையும் எதையும் முடித்துக் காட்டும் வல்லமையையும் தந்த சனிபகவான், இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள கால கட்டங்களில் விரயச் சனியாக, அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் வருகிறார். 

ஏழரைச் சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இதுவரை லாபவீட்டில் நின்றிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு எதையும் தரவில்லை. உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு பகைக் கோளாகிய சனி
பகவான் ராசிக்கு 12ல் சென்று மறைவதால் தடைபட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். 
ஏழரைச் சனி தொடங்குகிறதே என்று பதற வேண்டாம். 

இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் மனதில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தையும் எதிலும் ஈடுபாடற்ற நிலையையும் மன உளைச்சலையும் தந்தாரே. நம்பிக்கையின்மையால் துவண்டு போனீர்களே! குடும்பத்தில் சின்னச் சின்ன வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்ததே! எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாமல் அடுத்தடுத்து வீண் செலவுகள் செய்து கொஞ்சம் கடனும் வாங்க வேண்டி வந்ததே, ஆனால் தற்சமயம் விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். 

இதுவரை உங்கள் ராசி மீது விழுந்த சனியின் பார்வை இனி விலகுவதால் கம்பீரமாகப் பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன்&மனைவிக்குள் இருந்த பிரச்னை நீங்கும். 
பிள்ளைகளை கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். சனிபகவான் 6ம் வீட்டை பார்ப்பதால் வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். 

தாய்வழி சொத்து வந்து சேரும். மறைமுக எதிரிகளை இனங் கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். தடைபட்டகுலதெய்வ பிரார்த்தனையை தொடருவீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். யாருக்கும் விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். நீங்களும் இரவல் வாங்க வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள். நீதிமன்றம் செல்லாமல் முடிந்தவரை பிரச்னைகளை பேசி முடிக்கப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. 

சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் திடீர் யோகம், பணவரவு, வீடு, வாகன வசதி, வி.ஐ.பிகளின் அறிமுகமெல்லாம் உண்டாகும். வீட்டில் நல்லது நடக்கும். தியானம், யோகா இவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். வீடு, பூமி சேர்க்கை உண்டு. சிலர் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவார்கள்.          

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்கள் ராசிநாதனும்&சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் உடல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.அரசு காரியங்கள் விரைந்து முடியும். வெகுநாட்களாக வராமலிருந்த பணம் இப்போது கைக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். 

பெரிய பதவிகள் தேடிவரும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் திடீர் பயணங்கள், வீண் டென்ஷன், பாகப் பிரிவினையால் பிரச்னைகள் வந்து செல்லும்.9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். 

உங்கள் பேச்சில் பக்குவம் தெரியும். லோன் மூலம் புது வாகனம் வாங்குவீர்கள். வெகுநாட்களாக அயல்நாடு செல்ல திட்டமிட்டிருந்தீர்களே, இப்போது விசா கிடைக்கும்.   உங்கள் பூர்வ புண்யாதிபதியும்&தனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் தொட்ட காரியம் துலங்கும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்யம் கிட்டும். 

குடும்பத்தில் நல்லது நடக்கும்.  விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள்.  குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால் பணம் வரும். ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். 

சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சுவலி, கை, கால் அசதி வந்து நீங்கும். வெளிமாநில புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.   இல்லத்தரசிகளே! விசேஷங்களுக்கு போய் வரக்கூட நகை நட்டுமில்லாமல் அடகில் இருந்ததே! இனி அவற்றையெல்லாம் மீட்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. அலுவலகம் செல்லும் பெண்களே! உடல்நலக்குறைவால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிட்டதே! இனி ஆரோக்யம் கூடும். புதிய பொறுப்புகள் தேடி வரும். 
கன்னிப் பெண்களே! உங்கள் காதலின் உண்மையான ஆழத்தை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். வாடி வதங்கியிருந்த உங்கள் உடலும், முகமும் இனி மலரும். திருமணம் கூடும். 


மாணவ&மாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனியுங்கள்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். மருந்து, கமிஷன், மர வகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். 

உத்யோகஸ்தர்களே! சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள்.  வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையை தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு. கணினி துறையினர்களே, பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள்.


அரசியல்வாதிகளே, உங்களை பதவியிலிருந்து நீக்குவதற்கே கட்சிக்குள் சிலர் முயற்சி செய்து வந்தார்களே! அதற்கு பதிலடி கொடுப்பீர்கள். மக்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும். கலைஞர்களே! உங்கள் படைப்புகள் பட்டி தொட்டியெல்லாம் பரவும். சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த நவீனரக உரங்களுடன் இயற்கை உரங்களையும் பயன்படுத்துங்கள். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள்.
இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும், கொஞ்சம் அலைச்சலையும் தந்தாலும், வருங்கால முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
பரிகாரம்:
ஆரணி&படவேடு தடத்தில் ஏரிக்குப்பம் எனும் ஊரில் வீற்றிருக்கும் யந்திர சனீஸ்வர பகவானை, மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விதவைப் பெண்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

No comments:

Post a Comment