Wednesday 21 December 2011

Sani Peyarchi Palan 2011 - Mesham

Source: www.dinakaran.com

மேஷம்


தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் உங்களை சீண்டினால், எரிமலையாய் பொங்கி எழுவீர்கள். அரண்மனையில் வேலைக்காரனாய் இருப்பதை விட, குப்பத்தில் தலைவனாய் இருப்பதையே விரும்புவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்து எல்லா வகையிலும் முன்னேற்றத்தையும் அடிப்படை வசதி மற்றும் வாய்ப்புகளை அதிகரிக்க வைத்திருப்பார். நாடாளுபவர்களின் நட்பையும் வேற்று மதத்தினரின் அறிமுகங்களையும் கிடைக்கச் செய்தாரே. 

பணப்புழக்கம் சரளமாக இருந்ததால் சொத்து வாங்கினீர்களே. நல்லது கெட்டது நான்கையையும் அறிந்து செயல்பட வைத்தாரே. கோர்ட்டு, வழக்கு என்று பல வகைகளிலும் சிக்கிக்கொண்டிருந்த உங்களை மீள வைத்தாரே. நாலு பேர் மதிக்கத்தக்க வகையில் உங்களின் தராதரத்தை உயர்த்திக் காட்டிய சனிபகவான் இப்போது 21.12.2011 முதல்16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் 7ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். 

உங்கள் பாதகாதிபதியான சனிபகவான் வலுவடைந்து 7ல் அமர்வதால் குடும்பத்தில் வீண் விவாதங்கள் வரக்கூடும். கணவன்&மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து போகும். தொட்டதுக்கெல்லாம் குற்றம் குறை கண்டுபிடித்து சண்டையிடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களுக்குள் சண்டை, சச்சரவை ஏற்படுத்தி 
விடுவார்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை கவனமாகக் கையாளுங்கள். 

அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் உடனே செலுத்திவிடுவது நல்லது. வங்கிக் காசோலைகளில் முன்னதாக கையெழுத்து போட்டு வைக்காதீர்கள். முக்கிய ஆவணங்களில் 
கையெழுத்திடுவதற்கு முன்பாக ஒருமுறைக்கு இருமுறை கவனமாக படித்துப் பார்த்த பிறகு கையெழுத்துப் போடுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, 
கர்ப்பச் சிதைவால் ஆரோக்யம் பாதிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். 

மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும். உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய வேண்டிவரும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.  வெளிவட்டாரம் நன்றாக இருக்கும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். சனி பகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்வதால் இந்தகாலக் கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம், வி.ஐ.பிகளுடன் நட்பு உண்டாகும்.                
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் ராசிநாதனும் அஷ்டமாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் சற்று உடல் நலம் பாதிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையும். இரும்பு, நார்ச்சத்துள்ள காய், கனிகளை அதிகம் சாப்பிடுங்கள். தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, முதுகுவலி, மூச்சுப் பிடிப்பு, பைல்ஸ் வந்து நீங்கும். உடன்பிறந்தோர் சில சமயங்களில் குறைபட்டுக் கொள்வார்கள். 

என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.      
9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் ஓட்டை உடைசலாக இருந்த பழைய வாகனத்தை மாற்றிவிட்டு லோன் மூலம் புதிது வாங்குவீர்கள். 

பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீடு வாங்குவது, விற்பதிலிருந்த சிக்கல்கள் தீரும். லாகிரி, போதை வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும். உங்கள் பாக்ய&விரயாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரையுள்ள காலகட்டங்களில் இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். 

தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் மேம்படும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். வீடு கட்டுவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபமும் உத்யோகத்தில் உயர்வும் உண்டாகும்.  சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளைப் பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். 

அலர்ஜியால் தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. எப்போதும்போல இனிமேல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம். செரிமானக் கோளாறு வந்து நீங்கும். உப்பு, புளி, மிளகாயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். மறதியும் பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சனிபகவான் 4ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் ஏற்படும். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் கையிருப்புகள் கரையும். கடன் வாங்க நேரிடும். 

இல்லத்தரசிகளே! கணவரின் சின்ன சின்ன கோபங்களையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! வழக்கம்போல சக ஊழியர்களை விமர்சித்துப் பேசவேண்டாம். வேலைபளு அதிகரித்துக் கொண்டே இருக்கும். கன்னிப் பெண்களே! காதல் மயக்கம் வேண்டாம். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடிவரும்.

மாணவ&மாணவிகளே! படித்தால் மட்டும் போதாது. விடைகளை எழுதிப் பாருங்கள். மந்தம், மறதி வரும். தேர்வு நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அலட்சியப் போக்கால் மதிப்பெண் குறையும். வியாபாரிகளே, கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். பழைய பாக்கி   களை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். அரிசி&பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும். சிலருக்கு பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். அனுபவமிக்க வேலையாட்களை ஊக்கத்தொகை, சலுகைகள் என கொடுத்து தக்க வைத்துக் கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்களே, அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். 

மேலதிகாரிகளைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சக ஊழியர்கள் உங்களைப்பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் தாமதமாகத்தான் கிடைக்கும். எதிர்பாராத இடத்திற்கு திடீரென மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம்.  


அரசியல்வாதிகளே, தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம். கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள அதிகம் செலவுகள் செய்ய நேரிடும். கலைஞர்களே! சிறுசிறு வாய்ப்புகளாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துங்கள். விவசாயிகளே, பயிர் காக்க நவீனரக உரங்களை பயன்படுத்துங்கள். கூட்டுறவு வங்கிக் கடனுதவி கிடைக்கும்.  இந்த சனி மாற்றம் சில நேரங்களில் உங்களை சூழ்நிலை கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும் சமயோஜித புத்தியாலும் பிரச்னைகளை சமாளித்து சாதிக்க வைக்கும்.
பரிகாரம்:
திருநள்ளாறில் வீற்றிருக்கும் சனி பகவானை, அஸ்தம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். தொழுநோய் மற்றும் காசநோயாளிகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கி நல்லது நடக்கும்.




No comments:

Post a Comment