Wednesday 21 December 2011

Sani Peyarchi Palan 2011 - Kataga

மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் அஞ்சாதவர்களே. யானையின் தும்பிக்கை பலமோ இல்லையோ உங்களின் நம்பிக்கை அசுர பலம் கொண்டது. இதுவரை ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து உங்களை எந்த வேலையையும் எளிதில் முடிக்கும் சாமர்த்தியத்தையும் மதிப்பு, மரியாதையும் தந்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனிபகவான், இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் சுக வீடான 4ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப் பக்குவத்தை பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கு 7 மற்றும் 8ம் வீட்டிற்கு அதிபதியாக சனி உச்சமாவதால் குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளை கூட அலைந்து முடிக்க வேண்டிவரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும்.   மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எந்த சொத்து வாங்கினாலும் தாய்ப் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. 

அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு பயணங்களில் கவனம் தேவை.  விலை உயர்ந்த பொருட்கள், தங்க ஆபரணங்களை இரவல் தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம். குடும்பத்தில் கணவன்&மனைவிக்குள் சந்தேகத்தால் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள். தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். 

கழிவுநீர் பிரச்னை, மின்சார சாதனங்கள் பழுதடைதல், வேலையாட்கள் பிரச்னையும் வந்துபோகும். எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரருடன் எந்த வம்பும் வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து, அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகள் கொஞ்சம் செலவு வைப்பார்கள். 

உணவில் வறுத்த, பொரித்த உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் சனி பகவான் அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் யோகாதிபதிகளான செவ்வாய், குருபகவானின் நட்சத்திரத்தில் அதிக நாட்கள் சனி செல்வதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.    

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் பூர்வ புண்யாதிபதியும்&ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பும் உதவியும் கிட்டும். அரசு காரியங்கள் தடையில்லாமல் முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு, கடன் பிரச்னை, வீடு பராமரிப்புச் செலவு, வாகன விபத்து, சிறுசிறு நெருப்புக் காயங்கள், வாயுக் கோளாறு வந்து நீங்கும். 

மின்சார சாதனங்களை கவனமாக  கையாளுங்கள். 9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல், வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிமாநில புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். சொந்த&பந்தங்களுடன் பிரிவுகள் வரும். சொத்து வரி, வருமான வரியை செலுத்துவதில் அலட்சியம் வேண்டாம்.   
    
உங்களின் சஷ்டமாதிபதியும்&பாக்யாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வாடகை 
வீட்டிலிருந்து சிலர் சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். அயல்நாட்டில் வேலை கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.    
சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் கண்ணிற்கு கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில் கருவளையம் வரக்கூடும். 

வெளியிடங்களில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடிக்க வேண்டாம். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10ம் வீட்டை பார்ப்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புதுப் பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும். 


இல்லத்தரசிகளே! உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்காதீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே!  சக ஊழியர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் வலையில் இப்போது சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது.  புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கல்யாணம் தடைபட்டு முடியும். 


மாணவ&மாணவிகளே! விளையாட்டைக் குறைத்து, படிப்பில் அக்கறை செலுத்துங்கள். தெரியாதவற்றை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அலட்சியப்போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் வேண்டாம்.
வியாபாரிகளே! கறாராக இருங்கள். யாராக இருந்தாலும் ‘கையில காசு வாயில தோசை’ என்று சொல்லிவிடுங்கள். கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். 

பங்குதாரர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்களும் கருத்து மோதல்களும் வந்தாலும் கடைசியில் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வார்கள். வேலையாட்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள்.  உத்யோகஸ்தர்களே! சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். மேலதிகாரிகள் உங்களை குறை கூறினாலும் அமைதியாக ஏற்றுக் கொள்வது நல்லது. முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். 

அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.  உங்களை வழக்கில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள். சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். ஏமாற்றங்களும் மறைமுக அவமானங்களும் அவ்வப்போது வந்து செல்லும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினி துறையினருக்கு பார்வை கோளாறு, தசைப் பிடிப்பு நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். தொகுதி நிலவரங்களை உற்றுநோக்குவது நல்லது. 


கலைஞர்களே! யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களால் புது வாய்ப்பு வரும். விவசாயிகளே! கரும்பு, சவுக்கு, தேக்கு இவைகள் லாபம் தரும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். நிலத்தில் நீர்வசதி பெருகும். 
இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும் செலவுகளையும் அவ்வப்போது தந்து அலைகழித்தாலும் தொலை நோக்குச் சிந்தனையால் துவளாமல் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்:
அஸ்வினி நட்சத்திரம் நடைபெறும் நாளில் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வணங்கி வாருங்கள். கும்ப கோணம்& காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை&திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் எனும் ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவுங்கள். தடைகள் தகரும்.

No comments:

Post a Comment