Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Makaram


பழமையான வேர்கள் பலமாக இருந்தால்தான் புதிய இலைகளும் பூக்களும் காய்களும் கனியும் என்பதை அறிந்த நீங்கள், கோபுரத்தில் இருந்தாலும் அஸ்திவாரத்திற்கு அடிக்கடி நன்றி கூறுவீர்கள். உங்களுக்கு 3வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் தவிடு பொடியாகும். பிரபல யோகாதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். இதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். 

தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளை கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தோலில் நமைச்சல் நீங்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீட்டை புதுப்பித்துக் கட்டுவார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். 


அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வர வேண்டிய பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அவருக்கு கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். புதியவர்களை நம்பி, பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். 

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்காதீர்கள். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். 
வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும்.  17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். மழலைச் செல்வம் உங்கள் இல்லம் நாடி வரும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். 


மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். சொத்து விஷயங்களிலிருந்து வந்த சிக்கல்களுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை 8ம் வீட்டிலேயே அமர்ந்திருக்கும் செவ்வாய் அவ்வப்போது அலைக்கழிப்பார். 

பழைய பிரச்னைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்பத்தில் வீண் சந்தேகம், மனைவியுடன் வாக்குவாதங்கள் வரக்கூடும். அடிக்கடி வாகனம் பழுதாகும். சாலைகளை கடக்கும்போது கவனம் தேவை.  சகோதர வகையில் கருத்து மோதல்கள் வெடிக்கும். மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. 


கேது உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பொறுப்பில்லா தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீகச் சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது நல்லதல்ல. ராகு உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் அமர்வதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். 

வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்களுக்காக எவ்வளவு செய்தும் நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.  1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 4ல் கேதுவும் 10ல் ராகுவும் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும்.  வீண் அலைச்சல், டென்ஷன், காரிய தாமதம், வாகன விபத்துகள் வந்துபோகும். 


சனிபகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் தொடர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். நட்பு வட்டம் விரியும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பொது விழாக்களை தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். ஆனால், சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்வதால் இக்காலகட்டத்தில் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். 

வேலைச்சுமை, அலைச்சல் அதிகரிக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.கன்னிப் பெண்களே! வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்தீர்களே, இனி அந்த அவல நிலை மாறும். காதல் கைகூடும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். கல்வியில் உயர்வு உண்டு. கலை, இலக்கியம், இசையில் ஆர்வம் பிறக்கும். மாதவிடாய்க் கோளாறு, தொண்டை வலி, சளித் தொந்தரவு நீங்கும். மாணவர்களே! சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாலையில் எழுந்து படியுங்கள். 

நினைவாற்றல் பெருகும். கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வியாபாரிகளே! முன்பு இருந்த போராட்டம், தடைகள் நீங்கி இப்போது மனநிறைவுடன் காணப்படுவீர்கள். மார்ச், மே மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக செயல்படுவீர்கள். சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கி அதிக லாபம் ஈட்டுவீர்கள். 

உணவு, ஷேர், சிமென்ட், செங்கல், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகஸ்தர்களே!  மே, டிசம்பர் மாதங்களில் புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. மேலதிகாரியிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி நட்புறவாடுவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலக சூட்சுமங்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 

கணினி துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரும். அரசியல்வாதிகளே! பதவி உயர்வு உண்டு. மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். 
விவசாயிகளே! வங்கிக் கடன் கிடைக்கும். காய், கனி, கிழங்கு வகைகளால் லாபம் பெருகும்.  இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை ஏமாற்றினாலும் மையப் பகுதியில் இருந்து உங்களை ஏற்றத்தில் உயர்த்தி விடுவதாக அமையும்.
பரிகாரம்:
சென்னை-திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜரை பௌர்ணமி திதியில் வணங்குங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment