Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Mithunam


எந்தச் சூழ்நிலையிலும் கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாத நீங்கள், மற்றவர்களை வழி நடத்திச் செல்லும் அளவிற்கு மதியூகமும் தலைமைப் பண்பும் கொண்டவர்கள். கடுமையாக தாக்கிப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாமல் காய்களை நகர்த்தும் நீங்கள், ஒட்டுமொத்த குடும்ப பாரத்தையும் சுமக்கும் சுமைதாங்கிகள்.உங்கள் ராசிநாதனான புதன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர், நண்பர் வருகையால் வீட்டில் ஆனந்தம் பொங்கும்.

 புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. மகளுக்கு பல இடங்களிலும் வரன் தேடி அலைந்தீர்களே, இப்பொழுது நல்ல வரன் கிட்டும். சொந்தபந்தங்கள் மெச்சும்படி கோலாகலமாக திருமணத்தை முடிப்பீர்கள். மகனிடமிருந்த கூடாப் பழக்கங்கள் விலகும். அவர்கள் விரும்பியபடி அயல்நாட்டில் தரமான பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெற உங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பு வரும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். 


தாயாருக்கு இருந்த முதுகு வலி, மூட்டு வலி சரியாகும். தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும். அடிக்கடி தொல்லை கொடுத்த வாகனத்தை 
மாற்றிவிட்டு புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள்.  16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் வலுவாக காணப்படுவதால் திடீர் யோகம், பணவரவு உண்டு. நீண்ட நாட்களாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார். உங்களையும் அறியாமல் உங்களிடமிருந்து வந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். 

தன்னம்பிக்கையும் நேர்மறை எண்ணமும் உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிகள் தேடிவரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். ஆனால், 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். 

நன்கு அறிமுகமாகாதவர்களை, புதிய நண்பர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 
வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை செவ்வாய் 3ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவார்கள். 

கைமாற்றாக வாங்கியதை தந்து முடிப்பீர்கள். மகனின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். சிலநேரங்களில் உங்களையும் அறியாமல் சில தவறுகள் நேர்ந்ததல்லவா! இனி எதிலும் கவனமாக செயல்படுவீர்கள். சிலருக்கு இரண்டு சக்கர வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு காரில் செல்லும் யோகமும் உண்டு.


வருடம் பிறக்கும்போது 6ம் வீட்டில் ராகுவும் 12ம் வீட்டில் கேதுவும் அமர்ந்திருப்பதால் வெளிநாட்டுப் பயணம், வேற்று மதத்தினரால் உதவி எல்லாம் உண்டு. பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை உணருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் ராகுவும் 11ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் உங்களின் செயல்களில் தெளிவு பிறக்கும். எதையும் முதல் முயற்சியில் முடித்துவிட வேண்டுமென்பதில் கவனமாக இருப்பீர்கள்.

 பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் வந்துபோகும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிட்டும். இளைய சகோதரர் உங்களுக்கு பக்க
பலமாக இருப்பார். அரசாங்க வேலைகளில் வெற்றியுண்டு. சனிபகவான் ராசிக்கு 5ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். அவர்களின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து நிறைவேற்றப் பாருங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அவர்களை பிரிய வேண்டியது வரும். 


தாய்மாமன் வகையில் செலவுகளும் சின்னச் சின்ன மனஸ்தாபங்களும் வந்து போகும். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் வரும். கடுமையான வார்த்தைகளை தவிர்க்கப் பாருங்கள். சிலரின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சனம் செய்து கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்தாதீர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியானம், யோகா செய்வது நல்லது. 


கன்னிப் பெண்களே! சிலருக்கு கல்யாணம் ஏற்பாடாகியும் நின்று போனதே! இனி அந்த நிலை மாறும். வருடத்தின் முற்பகுதியிலேயே உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வாழ்க்கைத்துணை அமைவார். அழகு, அறிவு கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும்.மாணவர்களே! இரவில் சீக்கிரம் படுத்து, அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள். வியாபாரிகளே! இந்த வருடத்தில் அமோக லாபம் இருக்கும். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை இழுப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். 

ஏப்ரல் மாதத்திற்குள் வரவேண்டிய பாக்கிகளெல்லாம் வந்துசேரும். புது கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. உணவுவிடுதி, ரியல் எஸ்டேட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் தொந்தரவு குறையும். 


உத்யோகஸ்தர்களே! வீண் அவமானங்கள், வேலைச்சுமை, விருப்பமில்லாத இடமாற்றங்களையெல்லாம் சந்தித்தீர்களே! ஆனால், இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே உங்கள் கை மேலோங்கும். ஏப்ரல், மே மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். சிலருக்கு புதுவேலை 
அமையும். மேலதிகாரியுடன் இருந்த கருத்துமோதல்கள் நீங்கும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். 
கணினி துறையிலிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். 

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள். புதிய பொறுப்புகள் தேடிவரும். கலைத்துறையினரே! வர வேண்டிய சம்பளபாக்கி கைக்கு வரும். புகழடைவீர்கள்.    விவசாயிகளே! பூச்சித் தொல்லை, வண்டுக்கடியிலிருந்து பயிரைக் காப்பீர்கள். உங்கள் கடன் தள்ளுபடியாகும். 
இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் அதிரடி வளர்ச்சியை தருவதுடன், பிற்பகுதியில் கொஞ்சம் அலைச்சலையும் பக்குவத்தையும் தருவதாக அமையும். 
பரிகாரம்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் அருளும் சுகாசன பெருமாளை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment