Wednesday 21 December 2011

sani Peyarchi Palan 2011 - Dhanusu

எவ்வளவு சம்பாதித்தாலும் அலட்டிக் கொள்ளாதவர்களே. உயர்ரக வாகனம், விமானம் என மாறி மாறி பயணித்தாலும் பழைய மிதிவண்டி பயணத்தை மறக்காதவர்களே.இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்து உத்யோகத்தில் பிரச்னைகளையும் புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மனநிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தாரே!

 உழைப்பு உங்களிடத்தில் மட்டும் இருக்கும். ஆனால் அதற்கான பாராட்டும் பயனும் மற்றொருவருக்கு போய் சேர்ந்ததே! வேலை பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கெட்ட பெயர் எடுத்தீர்களே! நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்களே! பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தியதே! இனி இவையெல்லாம் மாறும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனதில் தெளிவு பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். 

பணவரவுக்கு இனி குறைவிருக்காது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். நாடாளுபவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்&மனைவி இருவரும் கலந்து பேசி குடும்பச் செலவுகளை குறைக்க முடிவெடுப்பீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். மருந்து மாத்திரை என்று சதா சாப்பிட்டும் பிரயோஜனமில்லாமல் போன தம்பதியருக்கு இனி குழந்தை பாக்யம் கிடைக்கும். 

மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும்.  மனைவி வழியில் மதிப்பு, மரியாதை கூடும். சகோதரர்கள் நெருங்கி வருவார்கள். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாய்வழி விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். 

அத்தை, மாமன் வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்வதால், இக்கால கட்டத்தில் உத்யோகத்தில் வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, ஏமாற்றம் வந்துபோகும். 

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்&விரயாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதரிக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களை எதிரியாக நினைத்த பலர், இனி உங்களின் நல்ல மனசை புரிந்துகொண்டு நட்பு பாராட்டுவார்கள். 

வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பாதி பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் வரக்கூடும்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பெரிய திட்டங்கள் தீட்டி வெற்றி பெறுவீர்கள். வேற்று மதத்தவர், மாநிலத்தவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டில் குடிநீர், கழிவுநீர் பிரச்னைகள் தீரும். உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.    

12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் ராசிநாதனும்&சுகாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் தடைபட்ட திருமணப் பேச்சுவார்த்தை கைக்கூடும். கல்வியாளர்கள், தொழிலதிபர்களின் உதவி கிடைக்கும். ஷேர் பணம் தரும். அரசாங்கத்தால் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் வாங்குவீர்கள். 

பெரிய பதவிகள் தேடி வரும். அவ்வப்போது பெரிய நோய் இருப்பதைப் போன்று இருந்த பயம் விலகும். சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்னைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். 

குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. சாலையை கடக்கும்போது கவனம் தேவை. இல்லத்தரசிகளே! விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் சேரும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பார். நாத்தனாருக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும். 

அலுவலகம் செல்லும் பெண்களே! தேங்கிக் கிடந்த பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! நீண்டநாள் கனவுகள் நனவாகும். கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவ&மாணவியர்களே! எத்தனை முறை படித்தாலும் மண்டைக்குள் எதுவும் தங்கவில்லையே! இனி கற்பூரமாய் பற்றிக் கொள்வீர்கள். 

அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். வியாபாரிகளே! தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். 

இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறு வனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்.    
உத்யோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். 

புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி புகழ்வார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கணினி துறையினர்களே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.
அரசியல்வாதிகளே! கட்சிக்குள் இருந்த மௌனப் போராட்டம் ஓயும். சகாக்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.  


கலைஞர்களே! இழந்த புகழை ஈடுகட்ட வேண்டுமென்று பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்துசேரும்.விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த மாற்றுப் பயிர் செய்யுங்கள். வாய்க்கால்&வரப்புச் சண்டை தீரும். இந்தச் சனிப்பெயர்ச்சி திக்கித்திணறி தவித்துக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பத்தையும், புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைப்பதாக அமையும்.
பரிகாரம்:
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளை, அஸ்தம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ. தொலைவும் காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டி சத்திரத்தில் இறங்கியும் கோயிலுக்குச் செல்லலாம். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

No comments:

Post a Comment