Wednesday 21 December 2011

Sani Peyarchi Palan 2011 - Simha

எடுத்த எடுப்பிலேயே எதையும் முடிக்க விரும்பும் நீங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருப்பீர்கள். ஒரு குடும்பத்தையோ இயக்கத்தையோ தொழிற் கூடத்தையோ திறம்பட வழிநடத்தும் தலைமைப் பண்பு உங்களிடம் உண்டு. பேச்சிலே காரத்தைத் தூவினாலும் உங்கள் இதயத்தில் ஈரம் இருந்துகொண்டே இருக்கும்.ஏறக்குறைய எட்டரை ஆண்டுகளாக உங்களை சனிபகவான் ஆட்டிப் படைத்தாரே. அதிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக 2ம் வீட்டில் அமர்ந்து பேச்சால் பல பிரச்னைகளில் சிக்க வைத்து உங்களை கேளிக்கையாக்கி, கேள்விக்குறியாக்கிய சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் உங்களை விட்டு விலகி 3ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். 


பிரிந்திருந்த கணவன் & மனைவி ஒன்று சேருவீர்கள். கார் இருந்தும் பெட்ரோல் போட காசில்லை என்ற நிலை மாறும். எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்
விடும். இழந்த செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்துக் கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்யம் அடைவீர்கள். 


நடைபயிற்சி, யோகா, தியானம் என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் கூச்சல், குழப்பம் என்று நிம்மதியில்லாமல் தத்தளித்தீர்களே, இனி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். ஐ.வி.எப். போல அதிக செலவுள்ள சிகிச்சைக்குப் பின்பும் அம்மா என்று சொல்ல ஒரு பிள்ளையில்லையே என்று நீங்கள் அழாத நாளில்லை. கவலை வேண்டாம். இனி அழகிய வாரிசு உருவாகும். வயது ஏறிக் கொண்டே போகிறதே! 

ஒரு வரன் கூட அமையவில்லையே என்று வளர்ந்து நிற்கும் உங்கள் பெண்ணை பார்த்து நீங்கள் வருத்தப்படாத நாளே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். சொந்த பந்தங்கள் வியக்கும்படி திருமணத்தை முடிப்பீர்கள். அடிக்கடி இனி வீடு மாறத் தேவையில்லை. கையில், கழுத்தில் இருந்ததை போட்டு, கடனை வாங்கி சொந்த வீட்டில் குடிபுகுவீர்கள். பலரின் உள்மனதைப் படிக்கும் திறன் வாய்க்கும்.  


யாரோ செய்த தவறால் நீங்கள் தலைமறைவானீர்களே, வழக்கில் இனி வெற்றிதான். கல்யாணம், கிரகப் பிரவேசத்திலெல்லாம் உங்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்களே, இனி எல்லோரும் ஆச்சரியப்படும்படி சாதிப்பீர்கள். பலரும் வலிய வந்து பேசுவார்கள். வி.ஐ.பிகளின் அந்தஸ்து பெறுவீர்கள்.

சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் பாதச்சனியாக அமர்வதால் இக்கால கட்டத்தில் யாரையும் நம்பி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல்&வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும். 

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான அதாவது சுக&பாக்யாதிபதியான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். வாகனம் அமையும். திருமணம், காதுகுத்து, உபநயனம் என வீடு களைகட்டும். சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள். உங்களிடம் பணம் பெற்று ஏமாற்றியவர்கள், இப்போது திருப்பித் தருவார்கள். 

பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் செலவுகள் கூடும். 9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்ய மாற்றுவழி பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நெடுநாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த வழக்குகள் சாதகமாகும். தொலை தூர புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.    

12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்&அட்டமாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் பிள்ளை பாக்யம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். வேலை கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயரும்.

சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொண்டு உங்களை டென்ஷன் படுத்துவார்கள். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள்  அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.     

இல்லத்தரசிகளே! உடல் ஆரோக்யம் மேம்படும். சமையலறை சாதனங்களை புதுப்பிப்பீர்கள். கணவரின் வியாபாரத்தை முன்னின்று நடத்துவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களின் திறமையை குறைவாக எடைபோட்டவர்கள் வியக்கும்படி சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! தோழிகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே நமக்கில்லையே என வருந்தாதீர்கள். கூடிய விரைவில் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். முகப்பரு, தோலில் நமைச்சல் வந்து நீங்கும். 

மாணவ&மாணவிகளே! மதிப்பெண் உயரும். கலை, விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். 
வியாபாரிகளே! நமக்குப் பின்னால் வந்து முதல் போட்டு ஏகப்பட்ட லாபத்தை எதிர்கடையில் உள்ளவர்கள் பார்த்துவிட்டார்கள். பல வருடம் இங்கேயே இருந்தும் லாபத்தை பார்க்க முடியவில்லையே என்று நீங்கள் புலம்பித் தவித்தீர்களே! இனி கடையை நவீனமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றுவீர்கள். அனுபவமிகுந்த புது வேலையாட்கள் அமைவார்கள். விளம்பர யுக்திகளை சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். 

திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டுத் தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள்.  கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அரசாங்க கெடுபிடிகள் குறையும். உத்யோகஸ்தர்களே! பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைபட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்ப்புகள் நீங்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத் தகுந்த சம்பள உயர்வும் உண்டு.


அரசியல்வாதிகளே! கட்சி சம்பந்தப்பட்ட கூட்டத்தில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். 
கலைஞர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் நீங்கும். உங்களின் படைப்புகளுக்கு அரசு விருது அளிக்கும்.  
விவசாயிகளே! பூச்சித்தொல்லை குறையும். மகசூல் பெருகும். அரசாங்க சலுகைகளையும் சரியாக பயன்
படுத்திக் கொள்வீர்கள். விலை குறைவாக இருக்கிறது என்று நினைத்து தரமற்ற விதைகளை வாங்கி விதைக்க வேண்டாம். நிலத் தகராறு ஓயும்.இந்த சனி மாற்றம் எல்லாவற்றையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த உங்களை ஆடம்பரமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும்.
பரிகாரம்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை விசாகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழையின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

No comments:

Post a Comment