Wednesday 21 December 2011

Sani Peyarchi Palan 2011 - Makaram

செடி கொடியில் பூத்துக் குலுங்கும் பூவைக்கூட பறிக்காமல் ரசிக்கும் மென்மையான மனம் கொண்டவர்களே! தோல்வித் தீயில் 
சாம்பலாகாமல் பீனீக்ஸ் பறவை போல உயிர்த்தெழுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து, உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்னைகளாலும் மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள கால கட்டங்களில் 10ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும்.

 ‘கரியவன் காரியத்தில் அமர, காரிய பங்கமடா’ என்று பழைய நூல் சொன்னாலும் உங்கள் ராசிநாதனாக சனிபகவான் வருவதாலும் உச்சமாகி யோகாதிபதியான சுக்கிரனின் வீட்டில் அமர்வதாலும் யோக பலன்களையே தருவார். இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள்.திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பங்கள் அமையாததால் முடங்கிக் கிடந்தீர்களே! பல இடங்களில் அவமதிக்கப்பட்டீர்களே! தந்தைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உருவானதுடன், அடிக்கடி மருத்துவச் செலவுகளும் வந்ததே! வெளியில் சொல்ல முடியாத பல கஷ்டங்களை அனுபவித்தீர்களே! 

சிலர் தந்திரமாகப் பேசி உங்களை ஏமாற்றினார்களே! இனி அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தினருடன் நிலவி வந்த மனப்போர் நீங்கும். கணவன்&மனைவிக்குள் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் தீரும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்வார்கள். தந்தையார் குணமடைவார். அவருடன் இருந்த மோதல்கள் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைகளில் பல சிக்கல்கள் இருந்ததே, இனி முடிவுக்கு வரும். 

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அங்கீகாரமில்லாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தீர்களே, இனி அந்தப் பணமெல்லாம் கைக்கு வரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன்  கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். 
குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியருக்கு அழகிய, அறிவுள்ள குழந்தைப் பிறக்கும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். 

கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் வீண் விரயம், பணப்பற்றாக்குறை, தந்தையுடன் மனத்தாங்கல், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.      
       
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:உங்கள் சுகாதிபதியும்&லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பணவரவு அதிகரிக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். ஆனால், செவ்வாய் பாதகாதிபதியாக வருவதால் அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டு மற்றும் முழங்கால் வலி வந்து நீங்கும். அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். மனைவியின் உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பழைய கடன் பிரச்னைகள் ஓயும். 

நாடாளுபவர்களால் உதவியுண்டு. சிலர் இடவசதியுடன், கற்றோட்டமுள்ள குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த அயல்நாட்டிற்கு சென்று வருவீர்கள். 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் மூன்றாம் ராசிக்குரிய அதிபதியும் விரயாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் தைரியம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். 

புது முயற்சிகள் யாவும் வெற்றியில் முடியும். கோயில் கும்பாபிஷேகத்தை சொன்னபடி நடத்தி முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொத்து சேர்க்கை உண்டு. விலையுயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்துபோகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். 


சனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். 

ஆனால் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் 
ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். இல்லத்தரசிகளே! உற்சாகமே இல்லாமல் சோர்வாக இருந்தீர்களே! இனி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதற்குக் காரணம் கணவர் பல விஷயங்களை உங்களுடன் கலந்தாலோசிப்பார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களின் நிர்வாகத் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயரும். சம்பளம் அதிகரிக்கும்.

 கன்னிப்பெண்களே! காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்னைகளால் நிலைகுலைந்து போனீர்களே! இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். வீட்டில் பார்க்கும் வரனே 
முடியும். மாணவ&மாணவிகளே! விளையாட்டால் படிப்பில் நாட்டமில்லாமல் போனதே! இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளே!  போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். 

வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள். உத்யோகஸ்தர்களே! ராசிக்கு 10ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். 


முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். மேலதிகாரி உதவுவார். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் சாதகமாகவே அமையும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு.     அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் நல்மதிப்பைப் பெறுவீர்கள். 


கலைஞர்களே! முன்னணி கலைஞர்களுடன் அடிக்கடி மோதல் போக்கும் ஏற்பட்டதே! இனி அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். விவசாயிகளே! கடன் தொல்லையால் நிம்மதி இழந்தீர்களே! பயிரைத் தாக்கிய பூச்சித் தொல்லை இனி இருக்காது. பக்கத்து இடத்தையும் வாங்குமளவிற்கு மகசூல் பெருகும். இந்த சனி மாற்றம் குடத்தில் விழுந்த விளக்காய் இருந்த உங்களை கோபுர விளக்காய் ஒளிர வைக்கும். 
பரிகாரம்:
விழுப்புரத்திற்கு அருகேயுள்ள பரிக்கல் நரசிம்மரை, சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். வசதி பெருகும்.

No comments:

Post a Comment